நினைத்ததும் நிர்ணயத்ததும் (Intended and Planned).

ஏசாயா 14:24 நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yxildqmDEpQ

நம்முடைய நினைவுகளின் தோற்றத்தையெல்லாம் அறிந்தவர் சொல்லுகிறார் நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும் என்பதாக. தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2) என்று யோபு பக்தன் கூறுகிறான். யோபின் வாழ்க்கையில் கர்த்தர் இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே நினைத்திருந்தார். யோபு இழந்த பிள்ளைகள், பொருளாதாரங்களை இரண்டு மடங்கு அதிகமாக தர வேண்டும் என்று ஆண்டவர் நினைத்திருந்தார். கர்த்தர் நினைத்ததுபோலவே யோபின் வாழ்க்கையில் செய்து முடித்தார். உங்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை அவர் நினைப்பார். யோசேப்பை சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டு வர பானபாத்திரக்காரன் மறந்தாலும், ஆண்டவர் யோசேப்பின் மேல் நினைவாகவே இருந்தார். உலகத்தில் யார் மறந்தாலும் உங்கள் நினைவாகவே இருக்கும் தேவன் உங்களுக்கு உண்டு. ஆகையால் தான் உங்கள் ஒவ்வொருவரையும் அவருடைய உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். காதலன் காதலி நினைவாய் இருப்பதை காட்டிலும், பெற்றோர் பிள்ளைகளின் மீது நினைவாய் இருப்பதை பார்க்கிலும், கர்த்தர் உங்கள் நினைவாகவே இருக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையில் செய்ய நினைத்தது தடைபடாது.

நம்முடைய ஆண்டவர் நினைத்ததை நிர்ணயம் செய்கிறவர். அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார் (எபி 6:17). தேவன் தன் வாக்குறுதியை உண்மையென்று நிரூபிக்க விரும்புகிறார். தன் ஆணையால் அதனை உறுதியும்படுத்துகிறார். கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும் (சங் 33:11). தலைமுறைகள் மாறினாலும் அவர் நினைத்தது நிலைநிற்கும் என்று கர்த்தர் கூறுகிறார். அதை தாவீதின் வாழ்க்கையிலும் நாம் பார்க்கலாம். அவனுடைய சந்ததியில் ஒருவர் என்றென்றைக்கும் சிங்காசனத்தில் இருக்கும்படி நிர்ணயம் செய்தவர் அப்படியே செய்து முடித்தார். உங்கள் வாழ்க்கையில் கர்த்தரின் திட்டம் நிறைவேறெதபடிக்கு ஒருவரும் தடை செய்ய முடியாது. அவர் உங்களுக்கு குறித்ததை நிறைவேற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org