ஆயத்தமும், ஜெயமும் (Preparation and victory)

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும் (நீதி. 21:31).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/uC8K6ZTpD1M

திட்டமிடுதலும், பயிற்சியும் ஒவ்வொரு காரியங்களுக்கும் மிகவும் முக்கியமானது. மோசே இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருடம் வனாந்தரத்தில் நடத்துவதற்கு முன்பு அவனைக் கர்த்தர் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் பழக்கப் படுத்தினார். கோலியாத் என்ற இராட்சதனுக்கு முன்பாக தாவீது நிற்பதற்கு முன்பு அவனை வனாந்தரத்தில் சிங்கத்தோடும் கரடியோடும் போரிடும் படிக்குச் செய்து தைரியப்படுத்தினார். பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து, அதாவது பழக்கப்படுத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்று நீதி. 22:6 கூறுகிறது. சரீர உடல் பயிற்சி எவ்வளவு முக்கியமோ, ஆவிக்குரிய பயிற்சியும் மிகவும் முக்கியம், அப்போது தான் கிறிஸ்துவுக்கு ஏற்ற வண்ணம் நம்முடைய குணநலன்களும் சுபாவங்களும் மாறும்.

பழைய ஏற்பாட்டின் நாட்களில் குதிரைகளை அதிகமாக யுத்தத்தில் பயன்படுத்தினார்கள். ஆகையால் அவைகளை யுத்தத்திற்குப் பழக்கப்படுத்த வேண்டியது அவசியமாயிருந்தது, ஆனாலும்; யுத்தத்தில் ஜெயத்தைக் கொடுப்பவர் கர்த்தர் ஒருவரே. ஆகையால் நம்முடைய நம்பிக்கையை, நாம் ஆயத்தமாக்கின குதிரைகளின் மேலும், தளவாடங்கள் மேலும் வைக்காமல் கர்த்தரின் மேல் வைக்க வேண்டும். இதை நன்கு புரிந்துகொண்ட சங்கீதக்காரனாகிய தாவீது, சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மை பாராட்டுவோம் என்று சங். 20:7ல் பாடினான். கர்த்தர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார், வீரனுடைய கால்களில் பிரியப்படார் என்றும் வேதம் கூறுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, ஒவ்வொரு காரியத்திற்கும் பிரயாசப்பட்டு உங்களை ஆயத்தப்படுத்துவது மிகவும் அவசியம். உலக வேலையானாலும், ஊழித்தியன் காரியங்கள் ஆனாலும் சோம்பேறிகளைக் கர்த்தர் பயன்படுத்த முடியாது.  அதே வேளையில் உங்கள் நம்பிக்கை முழுவதும் கர்த்தரின் பேரில் காணப்பட வேண்டும். நம்முடைய வெற்றி கர்த்தரிடத்திலிருந்து மட்டும் வரும். கிழக்கிலும் மேற்கிலும்  வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் என்று சங். 75:6,7 கூறுகிறது. யோசேப்பை ராஜாவின் அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தியதும், ஐந்து ராஜாக்களை சேவித்த தானியேலின் காரியத்தை ஜெயமாக்கியதும் கர்த்தர்.  ஆகையால் உங்கள் நம்பிக்கை கர்த்தரிடத்தில் காணட்டும்.  எசேக்கியா ராஜாவைக் குறித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை, என்று 2 இரா.18:5 கூறுகிறது. ஆகையால் நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்தின பின்பு, முழுமையுமாய் கர்த்தரை சார்ந்து கொள்ளுங்கள், அப்போது உங்கள் காரியம் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae