நற்கிரியையைத் தொடங்கியவர் முடிப்பார் (He who begins a good deed will complete it.)

பிலி 1 : 5 , 6 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ezz6D56Mkmk

கிறிஸ்தவ வாழ்க்கையென்பது பூரணத்தை நோக்கி பயணிக்கும் வாழ்க்கை. இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்பதினால், நம்மில் பாவம் இருக்காது என்று அர்த்தமில்லை. நமக்கு பாவம் இல்லையென்போமாகில், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். ஆனால், அதே பாவச் சூழ்நிலையில் நாம் நிலைத்திருக்கக்கூடாது என்பதற்காக இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்டெடுத்ததினால், ஒவ்வொரு நாளும் அவர் கொடுக்கும் கிருபையினிமித்தம், நாம் பூரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அதுபோலத்தான் உங்கள் வாழ்க்கையில் இயேசு எந்தவொரு நற்கிரியையைத் தொடங்கியிருந்தாலும், அது பாதியில் நிற்கும்படியாகவோ அல்லது தடையாவும்படியாகவோ விட்டுவிடமாட்டார். நற்கிரியைகளைத் தொடங்கியவர் அதை முடிவுவரை நடத்துவார். காரணம், உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவர் வாக்குத்தத்தங்களை கொடுப்பவர் மாத்திரமல்ல; கொடுத்த வாக்குத்தத்தங்களையெல்லாம் நிறைவேற்றக்கூடிய ஒரே ஆண்டவர் இயேசு. அவர் உங்களுக்கு வாக்கினால் சொன்னதைத் தன்னுடைய கரத்தினால் நிறைவேற்றி முடிப்பார். தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் (ரோம 8: 29-30). நீங்கள் தேவனால் முன்னறியப்பட்டவர்கள் என்ற நம்பிக்கை உங்கள் உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடட்டும். அவர் முன்குறித்தபோது, கடைசி வரை அதாவது மகிமைப்படுத்தும் வரை உங்களை கைவிடமாட்டார். அவருடைய மகிமையுள்ள சந்நிதானத்தில் போய் நிற்கும் வரை உங்களை கைவிடமாட்டார்.

இயேசு படைத்த சூரியனைப் பாருங்கள். அது கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் வரை முழுவதுமாக ஓடி முடிக்கிறது, அது பாதியில் நிற்பதில்லை. தான் படைத்த சூரியனையே முழுவதுமாக ஓடச் செய்கிறாரென்றால், உங்கள் வாழ்க்கையில் அவர் செய்யும் நற்கிரியைகள் பூரணமாகாமல் போய்விடுமா? சிலர் சொல்லுவதுண்டு, நான் வீடு கட்ட ஆரம்பித்தேன், பணத்தட்டுப்பாட்டினால் அந்த வேலை பாதியிலே நின்றுவிட்டது என்று. ஒன்றை அறிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு ஆசீர்வாதமும் தேவனால் தொடங்கப்பட்டிருக்கிறது என்றால், இடையில் தடைபடும் சூழ்நிலை போலத் தெரிந்தாலும், ஒரு ஆசீர்வாதமும் பாதியில் நின்றுவிடும்படியாக தேவன் அனுமதிக்கமாட்டார் என்ற நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் வரும் வரை உங்களைக் காத்துக்கொள்வார், நன்மைகளைத் தருவார், உங்களை உயர்த்தி மகிழச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org