கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் (The Lord will keep you from all harm)

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (சங்கீதம் 121:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RRR3rD9CseU

ஒரு புதிய மாதத்திற்குள்ளாய் உங்களைக் கிருபையாய் அழைத்துக் கொண்டு வந்த தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.  சங்கீதப்  புத்தகத்திலுள்ள  நூற்றிஐம்பது சங்கீதங்களில் பதினைந்து சங்கீதங்களுக்கு  ஆரோகணச் சங்கீதங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல்  ஜனங்களுக்கு ஏழு பண்டிகைகளைக் கர்த்தர் கொடுத்திருந்தாலும், அதில் மூன்று முக்கியமான பண்டிகைகளில் யூத ஆண்மக்கள் யாவரும் கட்டாயம் எருசலேம் தேவாலயத்தில் கூடி கர்த்தரைத் தொழுதுகொள்ள வேண்டும். வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு  முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்  என்று உபா.16:16ல் எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய கடினமான பிரயாணங்களில் சத்துருக்களினால் தீங்கும் சேதமும் வராதபடிக்கு கர்த்தர் தங்களைக் காக்கும் படிக்கு இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு செல்லுவது அவர்களுடைய வழக்கம்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உலகம் தீங்கு செய்கிறவனுடைய கரத்தில் காணப்படுகிறது. அவனும் அவனைச் சார்ந்தவர்களும் உடல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், ஆஸ்தி ஐசுவரியங்களிலும், தேசத்தின் உள்கட்டமைப்புகளிலும் தீங்குகளை விளைவித்து நாச மோசங்களை  உருவாக்குகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். வாழ்க்கை என்பது போக்கும் வரத்துமாய் காணப்படுகிறது. இந்நாட்களில் பிரயாணங்களில் அதிக ஆபத்துகள்  நிறைந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. இதையறிந்த யாபேஸ்,  இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார் என்று 1 நாளா. 4:10 கூறுகிறது. அவ்வண்ணமாக நாமும் தீங்கு என்னைத்  துக்கப்படுத்தாதபடிக்கு காத்தருளும் என்று கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யும் போது, கர்த்தர் உங்கள் வேண்டுதலுக்குப் பதில் தந்து உங்களைக் கண்மணிபோலக் காத்தருளுவார்.

ஆண்டவர் எல்லாத் தீங்கிற்கும் உங்களை விலக்கிக் காப்பார். தீங்கு பிசாசினாலும், மனிதர்களினாலும், யுத்தங்களினாலும், எவ்விதத்தில் வந்தாலும் கர்த்தர் உங்களை எல்லாத் தீங்கிற்கும் விலக்கிப் பாதுகாப்பார். அவர் உங்கள் ஆத்துமாவைப் பாவத்திற்கு விலக்கிக் காப்பார். உங்கள் போக்கையும் உங்கள் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார். கர்த்தருடைய பிள்ளைகளே, வாக்குக் கொடுக்கிறவர் சர்வ வல்லமையுள்ளவர், எல்ஷடாய்  என்பது அவருடைய நாமம். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பல விதங்களில் தீங்கு செய்யும் படிக்கு முயற்சித்தான். ஆகிலும் அவனுடைய தீய நோக்கங்கள் எல்லாம் தோல்வியில் முடியும் படிக்குச் செய்து, அவர்களைக் கர்த்தர் காத்தார். அப்போஸ்தலனாகிய பவுல், கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார் என்று 2 தீமோத். 4:18ல் விசுவாச அறிக்கையிட்டதைப் போல நீங்களும் அறிக்கை செய்யுங்கள். உங்கள் விசுவாசத்தின்படியே கர்த்தர் உங்களைக் காத்தருளுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae