G U போப் செய்தது சொல்லப்படும் (It will be said what G U Pope did).

மத்தேயு 26:13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8FTfpTcdrI0

ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து இயேசுவின் சிரசின் மேல் ஊற்றினாள். அதை கண்ட சீஷர்கள் இவ்வளவு செலவு செய்து ஏன் பணத்தை வீணடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். இயேசு சொன்னார், இவளை தொந்தரவு செயாதீர்கள், என்னை அடக்கம் பண்ணுவதற்கு ஏதுவாக இவள் செய்த காரியம் இருக்கிறது. இந்த சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்போதெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று இயேசு கூறினார்.

அதுபோல தான் G U போப் என்ற தேவ மனிதர் கனடாவை பூர்வீகமாக கொண்டு, தேவனுக்காக ஊழியம் செய்யும்படி தமிழ்நாட்டிற்கு வந்து, அவர் மகிமையாய் செய்த ஊழியங்கள் இந்நாட்களில் நினைவுகூரும் வண்ணமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஊழியத்திற்காக இங்கிலாந்து தேசத்திலிருந்து கப்பற்பிரயாணம் மேற்கொண்ட G U போப், தன்னுடைய எட்டு மாத பிரயாணத்தில் தமிழ் மொழியை நன்றாக கற்றுக்கொண்டார். தமிழ் மொழியில் பிரசங்கம் செய்தார். குறிப்பாக தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் சாயர்புரம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் தேவ இராஜ்யத்தை கட்டியதோடு, தமிழ் மொழியை வளர்க்கவும் பாடுபட்டார். தமிழ் மொழியில் உள்ள திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒரு நாட்டின் மொழியை அறியாமல், அந்நாட்டில் கிறிஸ்துவின் பணியை செய்யமுடியாது என்பதை நன்றாக அறிந்து, கருத்தோடு தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, தன் ஊழியத்தை செய்தார்.

தமிழ்நாடு கிறிஸ்துவர்களுக்காக சாயர்புரத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். இவரின் இடைவிடாத ஆத்தும ஆதாய பணியினிமித்தமும், இயேசுவின் மீதுள்ள அன்பினிமித்தமும், சுமார் 96 ஊர்களில் சபையை நிறுவினார். நாடு விட்டு நாடு வந்து, ஒரு சபையை கட்டுவதே கடினமான சூழ்நிலை என்ற நிலையில், இவரின் தீராத வாஞ்சையால் பல சபைகளை நிறுவினார். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆத்துமாக்களை ஞானஸ்நானத்திற்கு நேராக நடத்தினார். பல பள்ளிக்கூடங்களை அவர் நிறுவினார். இப்படி நாட்டு மக்களுக்காக தொண்டு செய்த போதும் அவர் பல இன்னல்களை அனுபவித்தார். ஒரு முறை அவர் பிரசங்கம் செய்தபோது, ஒரு பெண்மணி மாட்டு சாணத்தை கரைத்து அவர் மேல் ஊற்றினாள். இவைகளை சிறிதும் பொருட்படுத்தாமல், அவர் இயேசுகிறிஸ்துவை குறித்த பிரசங்கத்தை கூறிவிட்டு தன் வீட்டிற்கு கடந்து சென்றார். இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால், மாட்டு சாணத்தை எறிந்த அந்த பெண்மணி இயேசுகிறிஸ்துவினால் தொடப்பட்டு, இயேசுவை தன் சொந்த இரட்சகராக பின்னாட்களில் ஏற்றுக்கொண்டாள்.

பவுலை போல அத்தனை பாடுகளையும் கிறிஸ்துவின் பெயரால் G U போப் ஏற்றுக்கொண்டார், எல்லா உபத்திரவங்களை சகித்தார். வாழ்நாளெல்லாம் கிறிஸ்துவுக்காக பணியாற்றிய இவர் தமிழ் மொழியின் மேலும் மிகவும் பற்றுதலாய் இருந்தார். ஆகையால் தான் அவர் சொன்னார் நான் மரித்த பிறகு என்னுடைய கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான் என்று எழுதுங்கள் என்பதாக. இப்படி நம்முடைய மொழியையும் நேசித்து, ஜனங்களையும் நேசித்து, இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை சுமந்து சென்ற இவரின் பாதங்கள் எத்தனை அழகானவைகள். உலகம் இவரை இகழ முயன்றாலும், இயேசு சொன்னதுபோல இவர் செய்த காரியங்கள் நிச்சயமாகவே சொல்லப்படும். இப்பொழுதும் அவர் செய்த மகத்தான ஊழியங்கள் சொல்லப்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட தேவ ஊழியர்களை போல நாமும் கிறிஸ்துவுக்காக பனி செய்ய நம்மை அர்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org