இயேசுவின் மரணத்தை சரீரத்தில் தரித்துக்கொள்ளுங்கள் (Wear the death of Jesus in your body.)

2 கொரி 4:10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-QkA4_sKVps

இயேசுவின் மரணத்தைச் சரீரத்தில் தரித்துக்கொள்ளும்போதுதான், இயேசுவின் ஜீவனும் சரீரத்தில் விளங்கும் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. கிறிஸ்துவோடுகூட மரித்தால், அவரோடு கூட உயிரோடு எழுந்திருப்போம் என்று வேதம் கூறுகிறது. இயேசுவின் மரணத்தைத் தரித்துக்கொள்ளுவது என்பது உன்னத அழைப்புக்குரிய தியாகம் வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆதி அப்போஸ்தலர்கள் மிகப்பெரிய தியாகத்தோடு ஊழியம் செய்து வந்தார்கள். அப்போஸ்தலனாகிய பவுல், “நாங்கள் பலவீனர்கள், கனவீனர்கள், பசியாய் இருந்தோம், வையப்படுகிறோம், உலகத்திற்குக் குப்பையைப் போல இருக்கிறோம்” என்று (1 கொரி 4:9-13) கூறுகிறான். மாத்திரமல்ல, கிறிஸ்துவினிமித்தம் நெருக்கம், கலக்கம், துன்பம் நேரிட்டாலும் மனமுறிவு அடைவதில்லை என்று (2 கொரி 4:7-11) கூறுகிறான். உலகத்திற்கு நீங்கள் குப்பையாக எண்ணப்படும்போது கிறிஸ்துவின் மரணத்தைத் தரித்துக்கொள்ளுகிறீர்கள் என்றும், அது மிகவும் பாக்கியம் என்றும் எண்ணுகிறவர்களாய் காணப்பட வேண்டும்.

இன்றைக்குப் பல இடங்களில் இருக்கும் போதனை, “இயேசு பாடுபட்டபடியால், நான் இனி பாடுபடத் தேவையில்லை” என்றே காணப்படுகிறது. ஆனால் பவுல் “உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்” என்று ரோமர் 8:35-ல் கூறுகிறான்.

அப்போஸ்தலர்களெல்லாரும் இயேசுவின் மரணத்தைத் தங்கள் சரீரத்தில் தரித்து மடிந்த விதத்தைப் பாருங்கள். அந்திரேயா X வடிவ சிலுவையில் தொங்கவிடப்பட்டார். பர்த்தொலொமேயு தோலுரிக்கப்பட்டார். யோவானின் சகோதரன் யாக்கோபு தலைவாங்கப்பட்டார். கிலெயோப்பாவின் மகன் யாக்கோபு கோபுரத்திலிருந்து தள்ளப்பட்டார். ததேயு என்னும் யூதா அம்பெறியப்பட்டு கொல்லப்பட்டார். மத்தேயு வாளால் வெட்டப்பட்டார். பேதுரு தலைகீழாய்ச் சிலுவையில் அறையப்பட்டார். பிலிப்பு தூக்கிலிடப்பட்டார். செலோத்தே என்னும் சீமோன் தன்னுடைய 129-ஆம் வயதில் சிலுவையில் அறையப்பட்டார். தோமா சென்னையில் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மத்தியா கல்லெறியப்பட்டு தலைவாங்கப்பட்டார். யோவான் நாடு கடத்தப்பட்டு இயற்கை மரணம் அடைந்தார். பவுல் தலைவாங்கப்பட்டார். இவர்களெல்லாரும் அவிசுவாசத்தோடு மரிக்கவில்லை. இவர்களெல்லாரும் விசுவாசத்தினால் மரித்தார்கள்.

இயேசுவின் மரணத்தைத் தங்கள் சரீரங்களில் தரிக்கத் துணிபவர்கள் தான் இந்நாட்களில் இயேசுவுக்குத் தேவை. அவர்களைக் கொண்டுதான் ஆண்டவர் அவருடைய திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆகையால், இந்தக் கடைசிக்காலத்தில், உங்களுக்காக மரணத்தைச் சந்தித்த இயேசுவின் மரணத்தை உங்கள் சரீரத்தில் தரித்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இயேசுவுக்காக எந்தவொரு தியாகமும் செய்ய ஆயத்தமாய் இருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org