ஒருவரையொருவர் தேற்றுங்கள் (Comfort each other)

1 தெச 5 : 11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qdhCc_HWGVY

பாசத்திலும் அன்பிலும் உலகம் தண்ணீரற்ற வனாந்தரத்தைப் போல வறண்டு கொண்டிருக்கிறது. எது உண்மையான பாசம், எது போலியான பாசம் என்பதைக் கண்டுபிடிக்கவே கடினமாக இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காரணம், அன்பு தணிந்து போகும் காலம் தான் நமக்கு முன்பாக இருக்கிறது. ஆனால் தேவன் கர்த்தருடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஆலோசனை என்னவென்றால், நாம் ஒருவரையொருவர் தேற்ற வேண்டும்; ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வேண்டும்; மற்றவர்களை இடித்துத் தள்ளுகிற வார்த்தைகளை அல்ல, ஊன்றுகட்டுகிற வார்த்தைகளைப் பேச வேண்டும். யோபின் நான்கு நண்பர்களும் இடிந்துபோன யோபை மீண்டும் மீண்டும் தங்கள் வார்த்தைகளால் இடித்துக் குலைத்துப்போட்டார்கள். சுண்டு விரலில் காயம் ஏற்பட்டால் அது முழு சரீரத்தையும் பாதிக்கும் என்பதை சபை அறிந்துகொள்ளாமலும் உணராமலும் இருக்கிறது. சபை ஐக்கியத்தோடு இருக்க வேண்டும், ஒருவரையொருவர் தேற்ற வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆகையால் பவுல் எபேசு சபைக்குச் சொல்லும்போது, நாம் சமாதானக் கட்டுகளோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறான் (எபே 4:3).

நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டும் என்ற குறுகிய வட்டத்தில் இருக்கிறவர்களாக நாம் காணப்படக் கூடாது. இயேசுவைப் பாருங்கள், பிசாசு இந்த கல்லுகளை அப்பமாக மாற்றும் என்று இயேசுவை சோதித்தபோது, தன்னுடைய பசியை ஆற்ற அவர் அந்த கல்லுகளை அப்பமாக மாற்றவில்லை. அதேவேளையில், திரளான ஜனங்கள் அவரைப் பார்க்க வந்தபோது, ஐந்து மீன் இரண்டு அப்பங்களைக் கொண்டு ஐந்தாயிரம் புருஷர்களைப் போஷித்தார். அவர் எப்பொழுதும் பிறரை ஆற்றித் தேற்றுகிறவராகவும், பிறர் நலம் விரும்புகிறவராகவும் காணப்பட்டார்.

அதுபோல நமக்கு ஒரு போராட்டமும் துன்பமும் வரும்போது பிறருடைய உதவியை நாடவும், அவர்களுடைய ஆறுதலான வார்த்தையைப் பெற்றுக்கொள்ளவும் தயங்கக்கூடாது. இயேசு தன்னுடைய சீஷர்கள் தன்னைக்காட்டிலும் ஆவியின் அபிஷேகத்திலும், விசுவாசத்திலும் பலம் குன்றியவர்களாகக் காணப்பட்டாலும், இயேசு கெத்சமனே தோட்டத்தில் அவர்களுடைய உதவியை நாடினார். அவரோடு சேர்ந்து ஜெபிக்கும்படி பேதுரு, யாக்கோபு, யோவான் போன்றோரை அழைக்கிறவராக காணப்பட்டார்.

மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும் என்று நீதிமொழிகள் 12:25 கூறுகிறது. நம்முடைய வாயிலிருந்து புறப்படும் நல்ல வார்த்தை மற்றவர்களை மகிழ்ச்சியாக்கும், மற்றவர்களுடைய எலும்புகளுக்கு ஆரோக்கியத்தைக் கொண்டுவரும். ஆகையால் நாம் ஒருவரையொருவர் தேற்றுகிறவர்களாக காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org