எல்லாருடைய கட்டுகளும் கழன்று, இரட்சிப்புண்டாயிற்று (Everyone’s chains were loosed, and salvation came)

அப்போஸ்தலர் 16:26  சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ykBnne7XSCg

சிறைச்சாலையின் உட்காவலறையிலே அடைத்து, கால்களைத் தொழுமரத்திலே மாட்டிவைக்கப்பட்ட நிலையிலும் பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். ஒரு தேவப்பிள்ளை எந்த நிலையிலும் தேவனை உண்மையாய் துதிக்கவேண்டும். உங்கள் துதியானது எல்லாவிதமான சூழ்நிலைகளையும் மாறப்பண்ணி, ஜெயத்தைக் கொடுக்கும்.

தாங்கள் இருந்த சிறைச்சாலையின் நடுவில்  அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தேவனைத் துதித்தார்கள். நாமும் சபை என்னும் குடும்பமாய் கூடிவருகின்ற இடங்களிளெல்லாம் பிரிந்து காணப்படாமல், ஆவியிலே ஒருமனப்பட்டவர்களாய் சேர்ந்து நம்முடைய தேவனைத் துதிக்கவேண்டும். அப்பொழுது தேவன் எழுந்தருளி நமக்கு விரோதமாய் எழும்புகின்ற பொல்லாத வல்லமைகளை வலுவிழக்கச் செய்து, சத்துருவின் திட்டங்களையெல்லாம் அழித்துப்போட்டு மேன்மையான, மகிமையான ஆசீர்வாதங்களை நிச்சயமாய் தருவார்.

இப்படி பவுலும் சீலாவும் சிறையில் துதித்துக் கொண்டிருந்ததை அவர்களோடேகூட காவலில் வைக்கப்பட்டவர்களும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தங்களை சூழ்ந்து நிற்கின்றவர்கள் என்ன நினைப்பார்கள், நாம் எப்படி தேவனைத் துதிப்பது என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. வெட்கப்படாமல், விடுதலையோடு தேவனைத் துதிக்கின்றவர்களாக காணப்பட்டார்கள்.

அவர்கள் துதித்துக்கொண்டிருக்கும்போதே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது, கதவுகளெல்லாம் திறவுண்டது, யாரெல்லாம் சிறையில் கட்டப்பட்டவர்களாய்க் காணப்பட்டார்களோ அவர்கள் எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.  துதியானது உங்கள் கட்டுகளை மட்டுமல்ல உங்களோடேகூட காணப்படுகின்ற மற்ற ஜனங்களின் கட்டுகளையும் உடைக்கின்ற மிகப்பெரிய வல்லமையையுடைய போராயுதம். எனவே தேவனைத் துதிப்பதை நிறுத்திவிடாதிருங்கள்.

பின்பு சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, அதிகாரிகளுக்கு பயந்து பட்டயத்தை உருவித் தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளப்போனான். அப்போது பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருந்தபோதும் அங்கே காணப்பட்ட மற்ற கைதிகள் யாரும் தப்பிப்போகவில்லை. அப்படிப்பட்ட மனமாற்றத்தை தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். சிறைச்சாலைக்காரன் உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். உங்கள் ஜெபமும், துதியும் அநேகரை மனந்திரும்பச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org