எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம், ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது, அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார் (1 கொரி. 12:12).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0sMpSdcD3bk
வேதத்தின்படி, விசுவாசிகள் கூடிவரும் சபை என்பது கிறிஸ்துவின் சரீரத்தோடு ஒப்பிடப்படுகிறது. ஒரு சரீரத்தில் பல அவயவங்கள் இணைந்து இருப்பது போல, விசுவாசிகள் ஒவ்வொருவரும் சரீரத்தின் அவயவங்களாய் காணப்படுகிறார்கள். சரீரத்தில் பல அவயவங்கள் இருந்தாலும் ஒரே சரீரம் என்று நாம் அழைப்பதைப் போல, ஒரு சபையில் பல தரப்பட்ட விசுவாசிகள் உறுப்பினர்களாய் காணப்பட்டாலும் சபை ஒன்றாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு அவயவங்களும் தங்களுடைய பணியைச் செய்து சரீரம் இசைவாய் செயல்படுவதற்கு உதவுவது போல, விசுவாசிகள் அனைவரும் சபையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கக்கதாய் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்தி விருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது என்று எபே. 4:16 கூறுகிறது. இங்கே கணுக்கள் என்று எழுதப்பட்டிருப்பது ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு கரத்தை எடுத்தால் தோள்பட்டையில் ஒரு கணுவும் (joints), கையெலும்பில் ஒரு கணுவும், மணிக்கட்டில் ஒரு கணுவும், விரல்களில் மூன்று கணுவாக அனேகக் கணுக்கள் காணப்படுகிறது. கரம் சீராகச் செயல்படுவதற்கு இந்தக் கணுக்களே காரணமாய் காணப்படுகிறது. கரங்கள் ஆரோக்கியமாயிருந்தும் கணுக்கள் உடைந்து காணப்பட்டால் கரங்கள் சிறப்பாகச் செயல்பட முடியாது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லாரும் சரீரத்தின் அவயவங்களாய் காணப்படுவதினால், கணுக்கள் அவயவங்களை இணைப்பதைப் போல, நாம் இணைந்து செயல்பட வேண்டும், ஆவியானவர் நம்மை இணைக்கிறவராய் காணப்படுகிறார், கர்த்தருடைய பந்தி நம்மை ஐக்கியப்படுத்துகிறதாய் காணப்படுகிறது. இந்நாட்களில் சபைகளில் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பார்ப்பது கடினமாய் காணப்படுகிறது. இயேசு, ஒருமைப் பாட்டில் நாம் தேறினவர்களாய் காணப்பட வேண்டும் என்று விரும்பியும், நாம் பாலுண்ணுகிற குழந்தை நிலையில் ஐக்கியமில்லாமலும் முறுமுறுக்கிறவர்களாயும், சண்டைப்பண்ணுகிறவர்களாயும் காணப்படுவது பரிதாபத்திற்குரியது.
சரீரத்தின் அவயவங்களைக் கவனித்துப் பார்க்கும் போது, ஒன்றிற்கொன்று பொறாமையில்லாமல் செயல்படுவதைப் பார்க்கக்கூடும். காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்ல வென்றால், அதனாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்ல வென்றால், அதனாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும், தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது, சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவையாயிருக்கிறது என்று 1 கொரி. 12ல் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோல, கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாய் காணப்படுகிற விசுவாசிகள் ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும். நாம் ஒருவரையொருவர் சகோதரச் சிநேகத்தோடு ஏற்றுக் கொண்டு, உற்சாகப்படுத்தி, ஊன்றக்கட்டும் போது, ஆண்டவருடைய இருதயம் மகிழும். அப்போது, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணும் போது, அங்கே என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுவேன் என்று வாக்குக் கொடுத்தவர், உங்களைக் கனப்படுத்தி ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

