1 யோவா 3 : 1 , 2 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jilhf0h5rnE
தேவன் வேதத்தில் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் மேற்குறிப்பிட்ட வாக்குத்தத்தம் உன்னதமான வாக்குத்தத்தம். இந்த உலகில் வாழும் அநேக ஜனங்களுக்கு எதிர்காலத்தைப் குறித்த நம்பிக்கையும், தெளிவான வெளிப்பாடும் இல்லை. ஆனால் கர்த்தரோ நமக்கு இவ்வுலக வாழ்விற்குப் பிறகு, நாம் எப்படி இருப்போம் என்ற வெளிப்பாட்டுடன் கூடிய வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். பேதுரு சொல்லுகிறார், ‘அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்’ (1 பேது 1:4) என்பதாக. நாம் திவ்ய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாக இருக்கிறோம் என்ற வாக்குத்தத்தம் எவ்வளவு அருமையானது என்பதைச் சிந்தித்து பாருங்கள்.
மாத்திரமல்ல, நாம் இப்பொழுது தேவனுடைய பிள்ளைகள் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறுவதற்குத் தகுதியுள்ளவர்களா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால், எல்லாரும் ‘இல்லை’ என்றே சொல்லுவோம். அப்படித் தகுதி இல்லாத நம்மை இயேசுவின் இரத்தம் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கிறது. இந்த உலகத்தில் அநேக பிரம்மாண்டங்கள் காணப்படுகின்றன. பிரம்மாண்டமான வானவேடிக்கைகளை ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பிலும் பல நாடுகள் செய்யும். ஒலிம்பிக் போட்டியோ, FIFA போன்ற கால்பந்துப் போட்டியோ உலக நாடுகள் நடத்தும்போது, தொடக்க நாளில் பிரம்மாண்டங்களை வெளிப்படுத்துவார்கள். அதுபோல தேவனின் பிரம்மாண்ட அன்பின் வெளிப்பாடுதான் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கிறது.
அப்படிப்பட்ட அன்புள்ள தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாம், அவருடைய பிள்ளைகளாக இவ்வுலகத்தில் இருக்கிறோம். ஆனால் அவர் வெளிப்படும்போது நாம் அவரைப்போல அவருக்கு ஒப்பாய் இருப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது எவ்வளவு ஆச்சரியமான, உன்னதமான வாக்குத்தத்தம் என்பதைப் பாருங்கள். மறுரூப மலையில் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட அதே ஆடை, மணவாட்டியாகிய சபைக்கும் கொடுக்கப்படும். நாம் இப்பொழுது தேவ பிள்ளைகள், அவர் வெளிப்படும்போது அவரைப்போலவே இருப்போம். இந்தச் சிந்தை நமக்கு இருந்தால், இவ்வுலகத்து ஆசைகள் நம்மைத் தொடாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

