எபி 3:1,2 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/08Y3vCBuQEI
அப்போஸ்தலனாகிய இயேசுவை கவனித்துப்பார்த்துப் பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் பல அப்போஸ்தல சபைகள் காணப்படுகின்றன. இயேசுவே அப்போஸ்தலர்களில் பிரதானமான அப்போஸ்தலர் என்பதை அவரிடம் கவனித்துப்பார்த்துப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பிரதான அப்போஸ்தலராகிய இயேசு உண்மையுள்ளவராக இருந்தார்.
நாமெல்லாரும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். பிசாசு பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான். ஆனால் நாம் நம்பகத்தன்மையுடையவர்களாக நம்முடைய சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்துகிறவர்களாய் காணப்பட வேண்டும். ஒருவர் இரகசியத்தைச் சொன்னால் அதை மற்றவர்களிடம் ஊற்றித் திரியாமல் உண்மையாயிருக்க வேண்டும். பணப்பரிமாற்றங்களில் உண்மை காணப்பட வேண்டும். கடனைப் பிறரிடம் வாங்கித் திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்கள் பிசாசுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பரிதானம் வாங்காமலும், பொய் சொல்லிச் சம்பாதிக்காமலும் காணப்பட வேண்டும். வேலையில் உண்மை காணப்பட வேண்டும். அசதியாக வேலை செய்யாமல் சுறுசுறுப்பாய் வேலை செய்கிறவர்களாக தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும்.
இயேசு பிதாவுக்கு உண்மையுள்ளவராய் காணப்பட்டார். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். மோசே தன்னுடைய நிதானத்தை இழந்த வேலைகளும் உண்டு. ஆனாலும் அவன் சாந்தமும் உண்மையுள்ளவனுமாயிருந்தான். மோசேக்கு விரோதமாக மிரியாமும் ஆரோனும் பேசியபோது, அவன் முதலாவதாகத் தன் வாயைத் திறந்தது அவர்களுக்காக ஜெபிப்பதற்காகவே. நாமாக இருந்தால் பதிலுக்குப் பதில் செய்யாமல் இருக்க முடியாது. பதிலுக்குப் பதில் செய்வதால் நமக்குள் கசப்பு வளரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அப்படிப்பட்ட கசப்பு வளரவிடாமல், உங்களுக்கு விரோதமாகப் பேசுகிறவர்களுக்காக ஜெபியுங்கள். இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள் என்று ஏசாயா 54:15 கூறுகிறது. ஆகையால் எப்படிப்பட்ட சூழ்நிலையாயிருந்தாலும் நீங்கள் உண்மையுள்ளவர்களாகவும் சாந்தமுள்ளவர்களாகவும் இருங்கள். அப்பொழுது உங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் உங்கள் பட்சத்தில் வரும்படி கர்த்தர் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

