தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன் அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது (1 தீமோ. 3:15).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/eJC2U-bIySc
ஜீவனுள்ள தேவனுடைய சபையின் தூணும் அடித்தளமுமாய் காணப்படுவது சத்தியம். சபையின் ஊழியத்தின் மூலமாகவே சத்தியம் பாதுகாக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது. கர்த்தருடைய வசனமே சத்தியம் என்று யோவான் 17:17ல் எழுதப்பட்டிருக்கிறது. சமூலமும் சத்தியமாகிய கர்த்தருடைய வசனத்தைக் கலப்படமில்லாமல் எல்லாருக்கும் கற்றுக்கொடுப்பது சபையின் பிரதானப் பணியாகும். அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம் என்று கொரிந்து சபை விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதை 2 கொரி. 2:17ல் வாசிக்கமுடிகிறது. பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்கவில்லை என்றும், தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் என்றும் எபேசு சபை மூப்பர்களுக்கு பவுல் கூறுவதை அப். 20:20,26ல் வாசிக்கமுடிகிறது. கர்த்தருடைய வசனத்தைக் கைக்கொண்ட பிலதெல்பியா சபைக்கு முன்பாக ஒருவனாலும் பூட்டமுடியாத திறந்த வாசலைக் கர்த்தர் வைத்தார்.
இந்நாட்களில், சபைகள் சத்தியத்திற்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. தேவன் தன்னுடைய நாமங்களைப் பார்க்கிலும் முக்கியப்படுத்தி, மகிமைப்படுத்தின அவருடைய வார்த்தைகளைக் கனப்படுத்துவதில்லை. ஆகையால், பலவீனமான தூண்களையும் நிலையற்ற ஆதாரத்தையும் உடையவையாய் மணல் மேல் கட்டப்பட்ட கட்டிடத்தைப் போலவும், காற்றில் அசைகிற நாணலைப் போலவும் காணப்படுகிறது. சபை மேய்ப்பர்கள், வாடகை மற்றும் விருந்தினர் பிரசங்கிகளை வைத்து மாதத்திற்கு இரண்டு மூன்று ஒய்யுநாட்களைக் கடத்துவதினால், மந்தைகள் பலவிதமான நூதனக் காரியங்களைக் கேட்டு பலவீனமாய்க் காணப்படுகிறது. பவுல் தீமோத்தேயுவுக்கு கட்டளையிட்டு, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவ சனத்தைப் பிரசங்கம் பண்ணு, எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு, ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் என்று எச்சரிப்பதை 2 தீமோத். 4:1-4ல் வாசிக்கமுடிகிறது. ஆனால் காயுவும், கனம் பொருந்திய அம்மாளுடைய பிள்ளைகளில் சிலரும் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு வயோதிப யோவானுடைய இருதயம் மகிழ்ந்ததைக் குறித்து 2 யோவான் 4லும் 3 யோவான் 3லும் எழுதப்பட்டுள்ளது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் சத்தியத்தில் வளருங்கள். கர்த்தருடைய சத்திய வசனம் உங்கள் வாழ்க்கையின் தூணும், ஆதாரமுமாய் இருக்கட்டும். அப்படிப்பட்ட சபைகளைத் தெரிந்தெடுங்கள். அப்போது கர்த்தர் உங்களை அவருடைய வசனத்தின்படி நன்றாய் நடத்துவார், நீங்கள் பாக்கியவான்களாகவும், பாக்கியவதிகளாகவும் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

