உங்கள் சகவாசம் எப்படி இருக்கிறது ? (How is your company? )

1 கொரி 15 : 33 மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hjZOh3BWa9g

உங்கள் வாழ்வில் நீங்கள் பழகும் நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது மிகவும் முக்கியம். நாம் அனைவரையும் நேசிக்க வேண்டும், அனைவருக்காகவும் ஜெபிக்க வேண்டும், ஆனால் சகவாசம் அதாவது நெருங்கிய பழக்க வழக்கம் பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் நபர்களிடமோ, துன்மார்க்கர்களிடமோ இருக்கக் கூடாது. இயேசு பாவிகளின் சிநேகிதர் என்று அழைக்கப்பட்டாலும், பாவிகளுக்கு விலகி இருந்தார் என்பதைப் பாருங்கள். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார் என்று எபி 7:26 கூறுகிறது.

உங்கள் நண்பர் இரட்டை அர்த்தத்தில் பேசுபவராகவும், அசுத்த நகைச்சுவைகளினால் அநேகரை வசீகரிக்கிறவராகவும் இருந்தால், அவருக்கு விலகியிருங்கள். இப்படிப்பட்ட சம்பாஷணைகள் உங்கள் நல்லொழுக்கங்களைக் கெடுத்துவிடும். காலப்போக்கில் நீங்களும் அவரைப் மாதிரியே அசுத்த நகைச்சுவைகளை பேசும் நபராக மாறிவிட வாய்ப்புண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? என்று ஐக்கியமேது? ஐக்கியமேது? ஐக்கியமேது? என்று மீண்டும் மீண்டும் வசனம் நம்மை கேட்கிறதாய் காணப்படுகிறது. ஆகையால் நம்முடைய ஐக்கியம் நல்ல ஞானவான்களிடமும், தேவனுடைய பிள்ளைகளோடும், விசுவாசத்தில் தேறினவர்களோடும், ஜெபத்தில் தரித்திருக்கிறவர்களோடும் காணப்படட்டும்.

ஒரு ஊரில் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் தன்னுடைய கல்லூரி படிப்பிற்காக வெளி மாநிலத்திற்கு கடந்து சென்றாள். அங்கே அவளுடைய சகவாசம் சரியான முறைப்படி உடையணியாத சில பெண்களிடம் காணப்பட்டது. நாளடைவில் அவர்களைப் போலவே தானும் உடையணிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது, அவள் வாழ்க்கை முறையும் மாறியது, பின்னாட்களில் தன்னுடைய பெற்றோருக்கு இழிவான காரியத்தைக் கொண்டுவந்துவிட்டாள். இதுபோல தான் அநேக வாலிபர்களும் கூட, குடிக்கிறவர்களோடும், அதிகமாக சினிமா பார்க்கிற நபர்களோடும் சகவாசம் வைத்து பின்னாட்களில் வழுவிப்போய்விடுகிறார்கள்.

ஆகையால் பிள்ளைகளை வளர்க்கும் காரியத்தில் பெற்றோர்கள் கவனமாக காணப்பட வேண்டும். தங்களுடைய பிள்ளைகளுக்கு முதலாவது பெற்றோர்கள் முன்மாதிரியாக காணப்பட வேண்டும். மாத்திரமல்ல, பிள்ளைகளின் சகவாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org