முழு அர்ப்பணிப்பும் ஆசீர்வாதமும் (Wholehearted Commitment and prosperity)

அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத்  தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம்  தன் முழு இருதயத்தோடும் செய்து சித்தி பெற்றான் (2 நாளா. 31:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LUfEGF-TUx0

எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் யூதாவின் மேல் ராஜாவானான். அவன் ராஜாவான பின்பு தேவனுக்குரிய காரியங்களைத் தன் முழு இருதயத்தோடு செய்தான், ஆகையால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து, அவன் கையிட்ட காரியங்களை எல்லாவற்றிலும் சித்தி  பெறும்படிக்குச் செய்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும் ஆசீர்வாதமாய்க் காணப்படுவதற்குக் கர்த்தருக்கென்று செய்கிற காாரியங்களிலும், உலக வேலைகளிலும், தொழில்களிலும் உங்கள் முழு இருதயத்தையும் சிந்தையையும் வையுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் என்று  கொலோசெயர் 3:24 கூறுகிறது. 

எசேக்கியாவின் தகப்பனுடைய பெயர் ஆகாஸ். அவன் யூதாவை ஆண்ட நாட்களில் பாவம் செய்து, தேசத்தின் குடிகளையும்  பாவஞ்செய்யச்  செய்து, பாகால்களை ஆராதிக்கும் படிக்குப் பலிபீடங்களைக் கட்டினான். ஆனால் அவன் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானவுடனே, தகப்பனுடைய மாதிரியைப் பின்பற்றாமல், அவனுடைய கொள்ளுப்பாட்டனாய் காணப்பட்ட தாவீதின் மாதிரியைப்  பின்பற்றினான். அதுபோல நீங்களும் பாகால்களை ஆராதிக்கிற குடும்பங்களிலிருந்து ஒருவேளைக் கிறிஸ்துவுக்குள் வந்திருக்கலாம். நீங்கள் உங்கள் தகப்பன் விட்டுச் சென்ற மாதிரியை நோக்காமல், நன்கு ஓடி முடித்த, வேதம் காட்டுகிற ஆசீர்வாதமான சாட்சிகளை நோக்கிப் பாருங்கள். தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் என்று எபி. 13:7ல் எழுதப்பட்டிருக்கிறது.

 எசேக்கியா ராஜாவானபின் ஆசாரியர்களையும், ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்தினான், சுமார் எட்டு நாட்கள் பரிசுத்தப்படுத்தினார்கள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தத்தை முக்கியப்படுத்துங்கள், அப்போது நீங்கள் சித்தி பெறுவீர்கள். பரிசுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  ஜனங்களுக்குப்  பரிசுத்தத்தைப் போதிக்கிற பலிபீடங்களும் அமைதியாய் காணப்படுகிறது, பரிசுத்தத்தைக் குறித்த வாஞ்சையும் விசுவாசிகளிடமும், ஊழியர்களிடமும் குறைந்துபோய் விட்டது. அதன்பின்பு எசேக்கியா பலி செலுத்தி ஆலயத் தொழுகையை மீண்டும் தொடங்குகிறவனாய் காணப்பட்டான். வெகுநாளாய் ஆசரிக்காமல் காணப்பட்ட பண்டிகைகளையும் விமரிசையாகத் தன் ஜனங்களோடு ஆசரித்தான். அவனுடைய நாட்களில் ஜனங்கள் காணிக்கைகளைக் குவியல் குவியலாக ஆலயத்தில் கொண்டு வந்தார்கள். இப்படிக் கர்த்தருடைய ஆலயத்திற்குரிய காரியங்களை எல்லாம் தன் முழு இருதயத்தோடு அவன் செய்ததினால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து உயர்த்தினார். எசேக்கியாவைப் போல நீங்களும் முன்னிலைப் படுத்த வேண்டிய காரியங்களை முன்னிலைப் படுத்தும் போது கர்த்தர் உங்களையும் ஆசீர்வதித்து, நீங்கள் கையிடுகிற  காரியங்களில் சித்திபெறும்படிக்குச்  செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae