உங்கள் தலைமுடி (Hair of your head)

உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது (மத்.10:30).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/h7D1yK26VPM

இயேசு உங்களைப்பற்றிய நுணுக்கமான காரியங்களைக் கூட அறிந்திருக்கிறார், ஆகையால் பயப்படாதிருங்கள். ஒவ்வொருவருடைய தலையிலிருந்து சுமார் ஐம்பது முதல் நூறு முடிகள் தினமும் உதிருகிறது, அதே அளவுக்குப் புதிய முடிகள் தோன்றவும் செய்கிறது. உதிர்ந்த முடிக்குப் பதிலாகப் புதிய முடிகள் வளராத போது முடி உதிர்தல் ஏற்படுகிறது, அதுவே அனேகருடைய கவலைக்குக் காரணமாக மாறுகிறது. அதற்காகப் பலவிதமான சிகிச்சைகளைச் செய்து பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிற விசுவாசிகள் அனேகர்! கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் உங்கள் தலைகளில் காணப்படுகிற முடிகளை எல்லாம் எண்ணி வைத்திருக்கிறார், அவர் அறியாதபடிக்கு ஒன்றும் தரையில் விழுவதில்லை. பொதுவாக நாம் கூட அதிகமாய் பொருட்படுத்தாத ஒரு முடியைக்குறித்து ஆண்டவர் எவ்வளவு கரிசனையுள்ளவராய் காணப்படுகிறார் என்பது நமக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. அவருடைய பார்வையில் நாம் மிகவும் விஷேசித்தவர்கள். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு சிறு, சிறு காரியங்களைக் கூட அவர் நேர்த்தியாய் செய்கிறவர்.

உங்கள் வாழ்க்கையின் சிறிய காரியத்தைக் குறித்துக் கூட கர்த்தர் கரிசனைக் கொள்ளும் போது, நீங்கள் ஏன் சோர்ந்து போகவேண்டும்? உங்கள் முடி கூட அவருடைய அனுமதியில்லாமல் விழமுடியாமல் காணப்படும் போது, உங்களை விரோதிக்கிறவர்கள், ஏளனம் செய்கிறவர்கள், எதிராய் செயல்படுகிறவர்களைக் குறித்து கர்த்தர் விசாரியாமல் இருப்பாரா? உன்னைத் தொடுகிறவன் என் கண்ணின் மணியைத் தொடுகிறான் என்பது அவர்  உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தமாய்க் காணப்படுகிறது.   அடைக்கலான் குருவிகள் மிகவும் சிறியது, ஒரு காசுக்கு இரண்டு  அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் என்று மத். 10:29 கூறுகிறது, அவ்வளவு அற்பமானது,  அவைகள் மேல் கூட பிதாவாகிய தேவன் தன் சித்தத்தை நிறைவேற்றும் போது,  அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற உங்கள் காரியங்களில் அதிக அக்கரை உடையவராய் காணப்படுவது அதிக நிச்சயம். ஆகையால் ஆண்டவர் நம்மேல் வைத்திருக்கிற அன்பையும், கரிசனையையும் குறித்துச்  சந்தேகப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா  பிழைப்பூட்டுகிறார்,  அவைகளைப்பார்க்கிலும் நீங்கள்  விசேஷித்தவர்கள்  அல்லவா? என்று மத். 6:26 கூறுகிறது.  ஆகாயத்துப் பட்சிகளை  பிழைப்பூட்டுகிறவர், உங்களை நிச்சயமாய் பிழைக்குப்படிக்குச் செய்வார்,  உங்கள் தேவைகளை நிச்சமாய் சந்திப்பார், நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வேலை ஸ்தலங்களில் காணப்படுகிற நெருக்கங்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், உங்கள் சரீரக் கஷ்டங்கள்  அவருக்குத் தெரியும், பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்த உங்கள் எண்ணங்களை அறிந்திருக்கிறார், தொழில்களில் காணப்படுகிற சூழ்நிலைகள், ஊழியங்களில் காணப்படுகிற பாடுகள்,  எல்லாவற்றையும் இயேசு அறிந்திருக்கிறார். அவர் அறியாதபடிக்கு என் வாழ்வில் ஒன்றும் சம்பவிப்பதில்லை என்ற ஆழமான விசுவாசம் உங்களுக்குள் காணட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae