உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை காத்துக்கொள் (Guard What Is Entrusted to You)

ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு (1 தீமோத்தேயு 6:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1TkoW2Bjuoc

அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய  தீமோத்தேயுவுக்கு, தன்னுடைய வயோதிப நாட்களில், உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொள் என்ற ஆலோசனையைக் கூறினான். அவனிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது பரிசுத்த வேத எழுத்துக்களைப்பற்றிய சுவிஷேசம்  என்னும் பொக்கிஷமாய் காணப்படுகிறது.  அவைகளை   தீமோத்தேயு சிறுவயது முதல் தன் தாயின் மூலமும், பாட்டியின் மூலமும் அறிந்தவனாயிருந்தாலும் பின்னாட்களில் அப்போஸ்தலனாகிய  பவுலிடமிருந்து அதிகமாய்க் கற்றான். ஆகையால், நீ கற்று  நிச்சயித்துக்கொண்டவற்றில் நிலைத்திரு என்றும் அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்றும் நீ அறிந்திருக்கிறாய் என்று 2 தீமோத்தேயு 3:14ல் கூறினான். கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் நம்மில் அவருடைய வார்த்தை மற்றும் உபதேசம் என்னும் பொக்கிஷத்தை வைத்து வைத்திருக்கிறார். அவருடைய வார்த்தைதான் நம்முடைய வாழ்க்கையின் எல்லாமுமாகக் காணப்படுகிறது. கர்த்தருடைய ஜீவன் அவருடைய வார்த்தையில் காணப்படுகிறது, அதுவே நம்முடைய கால்களுக்குத் தீபமாகவும், பாதைக்கு வெளிச்சமாகவும் காணப்படுகிறது. 

நீ கற்றுக்கொண்ட வேத வார்த்தைகளையும், நீ கேட்டறிந்த உபதேசத்தையும்   காத்துக் கொள் என்றும் அப்போஸ்தலனாகிய  பவுல் அறிவுறுத்துகிறதைப் பார்க்கமுடிகிறது. ஒரு நாடு தன்னுடைய தங்கக் கருவூலத்தை இராணுவத்தை  வைத்துப் பாதுகாப்பது  போலக் கர்த்தருடைய ஜனங்கள் நமக்குள் காணப்படுகிற கர்த்தருடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். காரணம் சத்துரு பறவைகளைப் போல வந்து பொறுக்கலாம், இருதயத்தைக் கல்லாக்கி உலர்ந்து போகச் செய்யலாம், உலக கவலைகளையும் ஐசுவரியத்தின் மயக்கத்தையும் கொடுத்து நெருக்கிப் போடலாம். ஆகையால் எல்லாக்காவலோடும் நாம் வேத வார்த்தைகள் என்னும் பொக்கிஷத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். அது உலகத்தின் பொன், வெள்ளி, மற்ற எல்லா விலைமதிப்பற்ற பொருட்களை விட மேலானது.

கர்த்தர் நம்மை நம்பி அவருடைய சத்திய வசனத்தை நமக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். நம்மை நம்பி அவருடைய ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரவான்களாய் காணப்படுங்கள். அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து நம்பிக்கையை இழந்துவிடாதிருங்கள். தீமோத்தேயு அதைக் காத்துக் கொண்டதினால்  பின்னாட்களில் எபேசு சபைக்கு மேய்ப்பனாகவும்  கண்காணியாகவும்  மாறினான். இந்நாட்களில் கர்த்தருடைய நம்பிக்கையை இழந்து காணப்படுகிற அனேக ஊழியர்களும் விசுவாசிகளும் உண்டு. இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலும், இயேசுவின் சீஷனாய் காணப்பட்ட யூதாசும் எப்படி நம்பிக்கை துரோகம் செய்தார்களோ, அப்படிப்பட்டவர்களாய் காணப்படுகிறவர்கள் உண்டு. அவர்களுடைய முடிவு பரிதாபகரமாய்க் காணப்பட்டது. போல அப்படிப்பட்டவர்களுடைய முடிவும் காணப்படும். ஆகையால் பேதுருவைப் போல மறுதலித்திருந்தாலும் மனஸ்தாபப்பட்டு திரும்பி வந்து விடுங்கள். அப்போது, கர்த்தர் உங்களைக் கனப்படுத்தி, ஆசீர்வதித்து மேன்மேலும் பெருகப் பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae