புதிய வானங்களும் புதிய பூமியும் (New Heaven and New Earth)

2 பேது 3 : 13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/eJKhoYdJi38

மல் 3 : 2 கூறுகிறது, அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். இயேசு வரும் நாளில் அவருக்கு முன்பாக நிலைநிற்பவன் யார் என்று வேதம் கூறுகிறது. அந்த நாள் எப்படி காணப்படும் என்று செப்பனியா கூறுகிறார். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள் (செப் 1 : 15 ). அந்த நாள் ஹிட்லர் காலத்தில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாளை விடக் கொடியது. சுனாமியை விடப் பயங்கரமானது. கொரோனா நோயை விட மிகவும் இக்கட்டான நாளாய் காணப்படுகிறது. நாம் வாழும் இந்நாட்களில் பரிசுத்தத்திற்குரிய ஜீவியம் வாழ்வோம் என்றால், இக்கட்டு காலத்திற்குத் தப்பி, புதிய வானம் புதிய பூமியில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுவோம்.

நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது. இந்தச் சிந்தனை நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். இதுமட்டுமே நம் சிந்தையில் நீங்கா இடம் பெற்றிருந்தால், பூமியில் வரும் நிந்தைகள், அவமானங்கள் போன்றவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் ஜெயமுள்ள ஓட்டத்தை ஓட முடியும். புதிய வானம் புதிய பூமியில் நீதி வாசமாயிருக்கும். இப்பொழுது இருக்கும் பூமியில் நீதியும் இல்லை, நியாயமும் இல்லை. யாரை நம்பி நீதி கேட்கலாம் என்றே ஜனங்களுக்குத் தெரியவில்லை. நீதிமன்றத்திலிருக்கும் நீதிபதிகள் அநேகர் இன்று அநீதிபதிகளாக மாறிவிட்டார்கள். பணத்திற்காகவும், தங்கள் தலைவர்களுக்காகவும் நீதியை விற்றுப்போட்ட நீதிபதிகள் தான் இன்று ஏராளம். ஆனால் நாம் வாசம் செய்யப்போகும் புதிய வானம் புதிய பூமியில் அநீதி செய்பவர்கள் ஒருவரும் இருப்பதில்லை; அங்கே நீதி மாத்திரம் தான் வாசம் செய்யும்.

அநியாயமும் ஊழலும் நிறைந்த இந்த உலகில் கர்த்தர் நமக்கு நியாயம் செய்வார். இயேசுவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. தேவனோ அந்த அநீதியை உலகத்து ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார். யோசேப்பிற்கும் அநீதி இழைக்கப்பட்டது, கர்த்தரோ ஒரு நாளில் அவனை எகிப்து தேசத்திற்கே பிரதம மந்திரியாக உயர்த்தினார். உங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை குறித்துச் சோர்ந்துபோகாதிருங்கள். கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார்.

அநியாயம் நிறைந்த இந்த உலகம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் தான் நம்முடைய கண்கள் அநீதி நிறைந்த இவ்வுலக லௌகீக ஆசைகளைவிட்டு, நீதி வாசம் செய்யும் புதிய வானம் புதிய பூமியை நோக்கி காத்திருக்கிறதாய் காணப்படட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org