எரிச்சலுள்ள தேவன் (Jealous God)

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள  தேவனே,  ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம் (யாத். 34:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oktuLC8ckXA

கர்த்தர் தமக்கு உரியதை, முழுமையாக உரிமையாக்கிக் கொள்ள விரும்புகிறவர். அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அவருடையவர்களாகவே வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்.  அரைமனதோடு அவரைச் சேவிக்கிறவர்களாய் அல்ல, முழுமனதோடும், முழு உள்ளத்தோடும், முழு பெலத்தோடும் அவரை சேவிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்.    தேவன் பத்துக் கட்டளைகளைக் கொடுக்கும் போதும், என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்,  மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும்  உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும்  யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும்  வேண்டாம், உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன் என்று யாத். 20:3-5 வசனங்களில் கூறினார். 

எரிச்சலுள்ள தேவன் என்ற கர்த்தருடைய நாமம் வெளிப்பட்ட சூழ்நிலையைப் பார்க்கும் போது, மோசே தேவனோடு நாற்பது நாட்கள் சீனாய் மலை உச்சியில் காணப்பட்டான். கர்த்தர் அவனோடு முகமுகமாய் பேசி, இரண்டு கற்பலகைகளில்  பத்துக்கட்டளைகளைத் தன்னுடைய விரலினால் எழுதிக்கொடுத்தார். ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றியும், ஆசாரிய ஊழியத்தைப் பற்றியும், ஓய்வுநாட்களை ஆசரிப்பதைப் பற்றியும் அனேகப் பிரமாணங்களைக் கொடுத்தார். ஆனால், மோசே மலையிலிருந்த இறங்கிவரத் தாமதிக்கிறதைக் கண்ட ஜனங்கள் ஆரோனை நெருக்கி எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டாக்கும் என்று சொன்னார்கள். ஆரோனும் தேவனோடு  விசாரியாதபடி, அவர்கள் கையிலிருந்து பொன்னை வாங்கி  கன்றுக்குட்டியை வார்ப்பித்து,   எகிப்திலிருந்து உங்களை அழைத்துக் கொண்டு வந்த தெய்வங்கள்  இவைகளே என்றான். அப்போது கீழே இறங்கி வந்த மோசே ஜனங்களின் பாவங்களின் நிமித்தம் கர்த்தர் எழுதிக்கொடுத்த இரண்டு  கற்பலகைகளைக் கீழே போட்டு உடைத்துவிட்டான். பின்பு கர்த்தர்  மோசேயிடம் மீண்டும் இரண்டு கற்பலகைகளை இளைத்துக் கொண்டு   மலையுச்சிக்கு வா என்றார். மோசே அங்கே சென்ற போது, கர்த்தர் தம்முடைய எரிச்சலுள்ள நாமத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் இருநினைவுகளோடு அல்ல முழுமனதோடு  அவரைப் பின்பற்ற வேண்டும். அந்நிய ஜனங்களோடு கலந்து, அவர்களுடைய வார்ப்பிக்கப்பட்ட  தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களோடு விவாக உடன்படிக்கைகள் செய்யக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவரை மட்டும் ஆவியோடும் உண்மையோடும் சேவிக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். ஆகையால் புறஜாதிகளோடு  கலந்து, அவர்கள் மார்க்கத்தை கற்று, அவர்கள் வழிகளில் நடவாதிருங்கள்.  எப்பிராயீமைப் போலத் திருப்பிப் போடாத அப்பங்களாய்க் காணப்படாதிருங்கள்,  லவோதிக்கேயா சபை விசுவாசிகளைப் போல அனலும் இல்லாமல், குளிருமில்லாமல் வெதுவெதுப்பாய் காணப்படாதிருங்கள். கர்த்தர் எரிச்சலுள்ளவர் என்பதையறிந்து, உத்தம இருதத்தோடு அவரைச் சேவியுங்கள், அப்போது அவர் உங்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae