சங் 68:30. நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yWNMhMoyZxQ
நம்முடைய ஆண்டவர் யுத்தங்களில் பிரியப்படாதவர் என்பதை மேற்குறிப்பிட்ட வசனம் நமக்கு காண்பிக்கிறது. உலக தலைவர்கள், தங்கள் தலைமையின் பெருமையையை இந்த உலகத்திற்கு காண்பிக்கவும், தங்களுடைய பெலத்தை உலகத்திற்கு காண்பிக்கவும் மற்ற தேசங்கள் மீது யுத்தம் செய்கிறவர்களாக காணப்படுகிறார்கள். இப்படி யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது.
உலகமெங்கும் யுத்தம் நடைபெறும் இந்நாட்களில் கிறிஸ்தவர்களின் பொறுப்பும், நம்முடைய நிலைப்பாடும் எப்படியாக காணப்பட வேண்டும்? மத் 5:9ல் நம்முடைய ஆண்டவர் மலைப்பிரசங்கத்தில் கூறினார், சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் என்பதாக. ஆகையால் நாம் மற்ற தேசங்கள் பற்றி துற்செய்திகளை பரப்பாமல், சமாதானம் பண்ணுகிறவர்களாய் காணப்பட வேண்டும். சமாதான வார்த்தைகளை பறைசாற்றுகிறவர்களாய் காணப்பட வேண்டும். எரிகிற தீயில் எண்ணையை ஊற்றாமல், நல்ல வார்த்தைகளை, சமாதானப்படுத்துகிற நல்ல வார்த்தைகளை பேசுகிறவர்களாய் காணப்படவேண்டும். இயேசு இந்த உலகத்தில் பிறந்தபோது, தூதர்கள், பூமியிலே சமாதானம் உண்டாவதாக என்று கூறினார்கள். கூடுமானால் எல்லாரிடமும் சமாதானமாய் இருங்கள் என்றே கர்த்தர் நமக்கு கூறியிருக்கிறார். இப்படி இருக்கும்போது, சண்டைகளையும், கோபங்களையும், பற்ற வைக்கிற வார்த்தையை நாம் ஒருபோதும் பேசக்கூடாது.
மாத்திரமல்ல, எந்த நபராக இருந்தாலும் நாம் எல்லாரையும் நேசிக்க வேண்டும் என்றே கர்த்தர் கற்றுக்கொடுத்திருக்கிறார். சத்துருக்களை நேசிக்க பழக வேண்டும். ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் , மறு கன்னத்தையும் காண்பிக்கவேண்டும் என்றே நம்முடைய ஆண்டவர் கூறியிருக்கிறார். அப்படி சத்துருக்களை நேசிக்க முடியவில்லையென்றால், அந்த சுபாவத்தை ஆண்டவரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.
குறிப்பாக, யுத்தங்களில் அப்பாவி ஜனங்கள் மரித்துப்போய்விடக்கூடாது என்றும், யுத்தங்கள் ஓய வேண்டும் என்றும் கருத்தாய் ஜெபம் செய்யுங்கள். ஜெபத்திற்கு மாற்றான மருந்தோ, தீர்வோ இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. ஜெபத்தால் ஆகாதது என்று ஒன்றுமில்லை. நம்முடைய ஆண்டவர் ஜெபத்தை கேட்கிறவர். ஆகையால் உலக முழுவதிலும் நடைபெறும் யுத்தங்கள் ஓயும்படியாக ஜெபியுங்கள். உங்கள் ஒருவருடைய ஜெபம் ஆயிரக்கணக்கான ஜனங்களை பாதுகாக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். காரணம், ஒருவன் ஆயிரம் பேரை துரத்துவான் என்று வேதம் கூறுகிறது. ஆயிரம் பேரை கொல்ல வருகிற பொல்லாத ஆவிகளை, உங்கள் ஒருவரின் ஜெபம் நிர்மூலம்பண்ணும். கர்த்தர் பிராயப்படாத யுத்தங்கள் நிறுத்தும்படியாக, நாம் நம்மை தாழ்த்தி, பொல்லாத வழிகளை விட்டு, ஜெபம் செய்வோம். அப்பொழுது கர்த்தர் நம்முடைய தேசங்களுக்கு சேமத்தை, ஆரோக்கியத்தை வரப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org