பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் (லூக்கா 1:17).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/O5BfVMgK4kk
யோவான் ஸ்நானகனுடைய பிறப்பைக் குறித்து சகரியாவிடம் கர்த்தருடைய தூதன் அனேக காரியங்களைக் கூறினாலும், குறிப்பாக அவன் உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்காக ஆயத்தம் பண்ணுவான் என்று கூறினான். இயேசு இன்னும் பிறக்கவில்லை, அவர் பிறந்து, வளர்ந்து, தன்னுடைய முப்பதாவது வயதில் ஊழியத்திற்கு வருகிற வேளையில் ஒரு கூட்ட ஜனத்தை அவரை ஏற்றுக் கொள்ளுவதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ஊழியத்தைச் செய்யும்படிக்கு முன் குறிக்கப்பட்டவன் தான் யோவான் ஸ்நானகன். அதற்காக அவன் எலியாவின் ஆவியும், பலமும் உடையவனாய் காணப்படுவான் என்றும் தூதன் கூறினான். மல்கியா தீர்க்கதரிசியும் யோவான்ஸ்நானகனைக் குறித்துக் கூறும் போது அவன் எலியாவைப் போலக் காணப்படுவான் என்று மல்கியா 4:5,6ல் எழுதப்பட்டிருக்கிறது. எலியா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களைத் தீவிர மனந்திரும்புதலுக்கு அழைத்தவன். எதுவரைக்கும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள். கர்த்தர் தெய்வமானால் கர்த்தரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமானால் பாகாலை பின்பற்றுங்கள் என்று பறை சாற்றினவன். எலியா தேவபலத்தோடு ஆகாப்பிற்கு எதிர்த்து நின்றான். ஆகாப் எலியாவைக் கண்டபோது, அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். அதற்கு எலியா, இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல, கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் என்று தைரியத்தோடு கூறினான். யோவான் ஸநானகனும், பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் மனம்திரும்பி தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதைக் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் என்று தீவிர மனந்திரும்புதலுக்கு ஜனங்களை அழைத்தவன். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை அபகரித்துக் கொண்டதின் நிமித்தம், நீ அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல என்று தைரியமாய் கூறினான். ஆவியானவருடைய பலத்துடன் இப்படிப்பட்ட தீவிர மனம் திரும்புதலுக்கு ஜனங்களை அழைக்கிற ஊழியர்களைக் கர்த்தருடைய கண்கள் இன்றும் தேடுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, உத்தமமான ஜீவியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். இயேசுவின் வருகை எப்பொழுது வேண்டும் என்றாலும் காணப்படலாம். ஆயத்தமாக்கப்பட்ட, உத்தமமான ஜீவியம் செய்கிறவர்கள் மட்டும் தான் அவரோடு கூடச் செல்லமுடியும். ஊழியர்களும் யோவான் ஸ்நானகனைப் போல உத்தமான ஒரு கூட்ட ஜனத்தைக் கர்த்தருடைய வருகைக்காய் ஆயத்தப்படுத்த பிரயாசப்படுங்கள். பெயரளவு கிறிஸ்தவர்களை உருவாக்குவதினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை. இன்றைய கிறிஸ்தவர்களும் இரு நினைவுகளினால் குந்தி குந்தி நடக்கிறார்கள். பலவிதமான போதனைகளும், ஆராதனை முறைமைகளும் ஜனங்களை வழிதவறச் செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உத்தமமான கூட்டத்தை உருவாக்க, கர்த்தருடைய ஆவியானவருடைய பலத்தினால் இடைக்கட்டபப்பட்டு, தைரியத்தோடு கர்த்தருக்காகத் தொடர்ந்து செயல்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae