இயேசு மனிதர்களின் கருத்தைப் பற்றி கவலைப்படவில்லை (Jesus was not bothered by Men’s Opinion)

மத் 9:33,34 பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள். பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Qhf2P-ue6Z8

எலிசாவை சில பையன்கள் மொட்டைத்தலையா என்று சொன்னார்கள். அவனுக்கு வந்த கோபத்திற்கு எலிசா அவர்களை சபித்துவிட்டான். ஆனால் இயேசுவை பாருங்கள் அவரை தகாத வார்த்தையால் பரிசேயர்கள் நிந்தித்தார்கள். பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அந்த மனிதனுக்குள் இருந்த பிசாசை துரத்தி, அவனை சுகப்படுத்தினார். இதை கண்ட பரிசேயர்கள், இயேசு பிசாசுகளின் தலைவன் என்று நிந்தித்தார்கள். அநேகருக்கு, யாரவது நீ ஒரு பிசாசு என்று சொன்னாலோ, நீ திமிர்பிடித்தவன், நீ ஆகாதவன் என்று சொன்னால், அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருப்பதில்லை. திரும்ப அந்த நபரை தாக்கியோ, கடிந்துகொண்டோ பேசாவிட்டால், தாங்கள் இரவில் படுக்கைக்கு செல்லமாட்டார்கள். இப்படி நம்மை சுற்றிலும் இருக்கும் நபர்கள் தங்கள் வார்த்தைகளால் அவமதிப்பார்கள், கொல்கிற வார்த்தையை பேசி தூஷிப்பார்கள். உறவினர்களோ, வேலை ஸ்தலங்களிலோ நமக்கு விரோதமான அவமதிப்பான வார்த்தைகளை பேசி இகழ்வார்கள். தேவ ஜனங்கள் ஒன்றை தெளிவாய் அறிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் உங்களை குறித்து அவதூறாக பேசும் வார்த்தைகள் நிமித்தம் நீங்கள் சோர்ந்துபோக கூடாது. இயேசுவை பிசாசுகளின் தலைவன் என்று சொன்னபோது, அவர் இடி விழுந்தாற்போல உட்கார்ந்து சோர்ந்துபோகவில்லை, அவருடைய மனது நொந்துபோய்விடவில்லை.

பரிசேயர்கள் இயேசு பிசாசுகளின் தலைவனைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இயேசு அதைப் புறக்கணித்துவிட்டுத் தன் கடமையை செய்ய கடந்துபோனார் . இயேசு பரிசேயர்களை மன்னித்ததாக மற்றொரு பகுதியில் வாசிக்கிறோம். மத் 12:32ல் இயேசு, மனுஷகுமாரனுக்கு விரோதமாக ஒரு வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார். மனுஷகுமாரனுக்கு விரோதமாக ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். மக்கள் அவரை பிசாசுகளின் தலைவன் என்று அழைப்பதாலும் அல்லது சாத்தானுடன் கூட்டணி வைத்திருப்பதாலும் இயேசு அவர்களை தொந்தரவு செய்யவில்லை. அது அவரைத் தொந்தரவு செய்யவுமில்லை.

சாத்தானுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக யாராவது குற்றம் சாட்டினால், பல கிறிஸ்தவர்கள் கலக்கமடைவதை நாம் காண்கிறோம். அது அவர்களைத் தொந்தரவு செய்கிறது. ஆனால் இயேசு கலக்கமடையவில்லை. இயேசு தம்முடைய பிதாவுக்கு முன்பாக வாழ்ந்தார். மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது அவரைத் தொந்தரவு செய்யவில்லை. மனிதர்களின் கருத்துக்கள் குப்பைத் தொட்டிக்கு ஏற்றவை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மக்கள் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசினாலும் சரி, உங்களைப் பற்றித் தாழ்வாகப் பேசினாலும் சரி, அதை குப்பைத் தொட்டியில் எறியுங்கள். அது எதற்கும் மதிப்புக்குரியது அல்ல. மனிதனின் கருத்து நல்லதா கெட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், அது மதிப்புக்குரியது அல்ல என்பதை அறிந்து தேவன் உங்களை அழைத்த அழைப்பின் படி செய்ய மாத்திரம் தொடர்ந்து அவருடைய பணியை செய்ய செல்லுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org