சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது(ரோமர் 10:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_mswS0rBTb8
அப்போஸ்தலனாகிய பவுல் புறஜாதிகளின் அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டவன். ஆனால் அவனுடைய விருப்பமும், விண்ணப்பமும் தன் சொந்த யூத ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. நம்முடைய தேவன் நம்முடைய இருதயத்தின் வேண்டுதல்களையும் விருப்பங்களையும் அருள்செய்கிறவர். அவரே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாக்குகிறவருமாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. இந்நாட்களில் தேவ ஜனங்களுடைய இருதயத்தில் அனேக நல்ல விருப்பங்கள் காணப்படுகிறது, அந்த விருப்பங்கள் எல்லாம் விண்ணப்பங்களாக மாறவேண்டும். பாவத்தில் காணப்படுகிற ஜனங்கள் மனம் திரும்ப வேண்டும் என்ற விருப்பம் நமக்குள் காணப்படுகிறது, அதற்காக ஜெபிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தேசத்தில் எழுப்புதல் உண்டாக வேண்டும், சபைகள் ஆத்துமாக்களினால் நிரம்பவேண்டும் என்ற வாஞ்சை காணப்படுகிறது, அதற்காக விண்ணப்பம் செய்கிறவர்களாய் நாம் காணப்படவேண்டும். தேசத்தில் சமாதானம், நீதி நியாயங்கள் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறோம், அதற்காகத் திறப்பிலே நின்று நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும். விருப்பங்கள் விண்ணப்பங்களாய் மாறுகிற மட்டும் வெறும் விருப்பங்களினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
பவுலுக்கு தன் சொந்த ஜனங்களைக் குறித்த பாரம் அதிகமாய் காணப்பட்டது. ஆகையால், எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது, நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தாவிக்குள் என்மனசாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே என்று ரோமர் 9:1-3ல் கூறினார். ஆகையால்தான் அவர்களுடைய இரட்சிப்பிற்காகக் கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணுகிறவனாய் காணப்பட்டான். கர்த்தருடைய ஜனங்கள் காயீனைப் போல இந்நாட்களில் காணப்படுகிறார்கள். அவன், என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றதைப் போல, அழிந்து போகிற நம்முடைய சகோதரர்களைக் குறித்த கவலை நம்மில் இல்லை. யோனா ஆமணக்குச் செடியின் கீழ் அமர்ந்து நினிவேயின் அழிவிற்காகக் காத்திருந்ததைப் போல, ஆத்துமாக்களுடைய அழிவைக் காண வாஞ்சிக்கிறோமே ஒழிய, அழிவை ஜெபத்தால் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணம் நம்மில் இல்லை. ஆபிரகாமைத் தகப்பன் என்று சொல்லுகிறோம், ஆனால் அவனுக்குள்ளாய் காணப்பட்ட பரிந்து பேசுதலின் ஜெப ஆவி நம்மில் இல்லை. இந்நாட்களில் உலகளாவிய சபைகளில் காணப்படுகிற விசுவாசிகளுக்குள் ஜெபக் குறைவு அதிகமாய் காணப்படுகிறது. சபையாய் கூடி ஜெபிக்க அகேருக்கு விருப்பமில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி நான் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன், அது எனக்குத் தூரமாயிருப்பதாக என்று 1 சாமு.12:23ல் கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளே, கிறிஸ்துவை மையப்படுத்தியும், அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட ஆத்துமாக்களை மையப்படுத்தியும் வாழ உங்களை அர்ப்பணியுங்கள். யோபு தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்த வேளையில், கர்த்தர் அவனுடைய சிறையிருப்பை மாற்றியது போல, நீங்கள் மற்றவர்களுடைய இரட்சிப்பிற்காகப் பிரயாசங்களையும், ஜெபங்களையும் ஏறெடுக்கும் போது, கர்த்தர் உங்கள் சிறையிருப்புகளை மாற்றி, உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae