அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக் கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார், கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான் (2 நாளா. 33:13).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/y73GB1O6rGI
எலியா தீர்க்கதரிசியின் நாட்களில், ஆகாப் யேசபேலின் நிமித்தம், ஆண்டவரை விட்டு வெகுதூரம் பின்வாங்கிச் சென்ற இஸ்ரவேல் ஜனங்களைத் திருப்பி ஆண்டவரிடம் கொண்டு வருவதற்கு, கர்மேல் பர்வதத்தில் பலிபீடத்தைக் கட்டி, பலி செலுத்தி, அந்திப் பலி செலுத்தும் நேரத்தில் என்னைக் கேட்டருளும் என்று எலியா ஜெபித்தான். அந்த வேளையில் வானத்திலிருந்து அக்கினி இறங்கி சர்வாங்கதகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. இதைக் கண்ட ஜனங்கள், முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள், பெரிய சுத்திகரிப்பும் எழுப்புதலும் உண்டானது.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மகன் மனாசே இராஜ்யபாரம்பண்ணும் போதும் அதுபோல நடந்தது. எசேக்கியா ராஜா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. ஆனால், அவன் வியாதிப்பட்டு மரண தருணத்திலிருந்த வேளையில், கர்த்தர் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு ஆயுசு நாட்களில் பதினைந்து வருஷத்தைக் கூட்டிக் கொடுத்தார், அப்போது பிறந்து, பின்னாட்களில் ஆட்சிக்கு வந்த அவனுடைய குமாரனாகிய மனாசே, தன் தகப்பனை போலில்லாமல், மிகவும் துன்மார்க்கனாய் காணப்பட்டான். அவன் தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி அவர்களை அக்கினியில் பலிசெலுத்தி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அனுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான் என்று 2 நாளா.33:6 கூறுகிறது. கர்த்தர் அவனோடும், அவனுடைய ஜனங்களோடும் பலமுறை பேசியும் கவனிக்காமல் போனார்கள். ஆகையால் அவனை அசீரிய ராஜாவின் கைகளில் கர்த்தர் ஒப்புக் கொடுத்தார். அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவனுடைய கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கி, மீண்டும் அவனை யூதாவின் மேல் ராஜாவாக ஏற்படுத்தினார், அப்போது அவன், கர்த்தரே தேவன் என்பதை அறிந்து கொண்டான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவரை விட்டு விலகி ஒருநாளும் தூரம் சென்று விடாதிருங்கள். தகப்பனை விட்டுச் சென்ற இளைய குமாரனுக்குக் கடைசியில் பன்றிகளின் உணவு கூடக் கிடைக்கவில்லை. ஆண்டவரை விட்டு விலகிச் சென்ற மனாசேயை எதிரிகள் முட்களினால் நெருக்கி, விலங்கிட்டு, அவன் தன்னைத் தாழ்த்தும் மட்டும் வேதனைக்குப்படுத்தினார்கள். ஆகையால் எப்போதும் கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி, அவரை சார்ந்து ஜீவியுங்கள், உங்கள் நம்பிக்கை அவர்மேல் மாத்திரம் இருக்கட்டும். கர்த்தர் ஒருவரே தேவன், அவரோடு ஒன்றையும் கூட்டிவிடாதிருங்கள், அவருக்கு இணையாக உங்கள் வாழ்க்கையில் யாரையும் வைத்துவிடாதிருங்கள். அப்போது நீங்கள் வாழ்ந்து உயர்ந்திருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae