மிகுந்த சமாதானம் (Great Peace)

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை (சங். 119:165).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/veHr6TMVB0k

ஒரு புதிய மாதத்திற்குள் கர்த்தர் கிருபையாய் நம்மை நடத்திக் கொண்டு வந்தார், அதற்காக ஆண்டவருக்கு நன்றி பலிகளை எறெடுப்போம்.  சமாதானம் என்பது   இன்றைய காலகட்டத்தில் மனுகுலத்துடைய மிக முக்கியமான தேவையாய் காணப்படுகிறது. உலகத்தின் எந்த பகுதியில் திரும்பினாலும் சமாதான கேடும், சண்டைச் சச்சரவுகளும் காணப்படுகிறது. உலக நாடுகளுக்குள் சமாதானமில்லை, ஒரு நாட்டிற்குள்ளாய் காணப்படும் மாநிலங்களுக்குள் சமாதானமில்லை, ஒரு குடும்பத்தில் காணப்படும் உறுப்பினர்களுக்குள் சமாதானமில்லை. ஆதி சபையின் நாட்களில் சபைகள் சமாதானம் பெற்று நடந்து பெருகியது,  ஆனால் இந்நாட்களில் சபைகளுக்குள்ளும் சமாதானமில்லை. ஆண்டவர் கூறினார், என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன், அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள் என்பதாக. சபையும், சமுதாயமும், தேசங்களும் கர்த்தருடைய  வார்த்தையை அந்நிய காரியமாய் எண்ணிப் புறக்கணிக்கும் போது சமாதான கேடும், இடறல்களும் உண்டாகிறது. 

கர்த்தருடைய பிள்ளைகளே, முதலாவது கர்த்தருடைய வேதத்தை நேசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். ஒருவேளை எல்லா கற்பனைகளையும் கைக்கொள்ளுவது சற்று கடினமாகக்  காணப்படலாம், ஆனால் கர்த்தருடைய வார்த்தையை நேசியுங்கள். வேதத்தை நேசித்தால் தான் அதை வாசிப்பீர்கள், தியானிப்பீர்கள். உலகத்தில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உங்களுக்குத்  தகவல்களையும், அறிவையும் தரலாம், வேதவசனத்திற்குள் ஆண்டவருடைய ஜீவன் காணப்படுவதினால் அது உங்களுக்குள்  மாற்றத்தைக் கொண்டுவரும், அது உங்களுக்குச்  சமாதானத்தைத்  தரும். உங்களுக்காக  சமாதானப்பிரபுவாய் இந்த பூமியில்  அவதரித்த இயேசு, அவருடைய சமாதானத்தையே   உங்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார். நீங்கள் இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் நேசிக்கும் போது அவருடைய சமாதானம் உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் நிரப்பும்.   

என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும் என்று  ஏசாயா 32:18ல்  கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிறார். நீங்களும், உங்கள் குடும்பமும் சமாதானமாய் காணப்பட வேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தம். யெகோவா ஷாலோம் என்பது இயேசுவின் நாமங்களில் ஒன்று, அவர் உங்களுக்குச் சமாதானத்தையும், முழுமையான நல்வாழ்வையும் தரவிரும்புகிறார். கிரமமான வேதவாசிப்பும், தியானமும் உங்கள் வீடுகளில் காணட்டும். கர்த்தருடைய வார்த்தைகளை விட்டு வலது இடது புறம் விலகாமல், இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீங்கள் செய்யக் கவனமாயிருந்து, இரவும் பகலும்  இதைத் தியானித்துக் கொண்டிருக்கும் போது அவர் உங்கள் வழிகளை வாய்க்கப் பண்ணுவார். இந்த தீர்க்கதரிசன   வசனங்களை, நீங்கள்  வாசிக்கும் போதும், கேட்கும்போதும், இதில் எழுதியிருக்கிறவற்றைக் கைக்கொள்ளும் போதும், நீங்கள் பாக்கியவான்களாய் காணப்படுவீர்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae