மத் 9:22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PfbQfHmp7E4
இந்த உலகத்தில் சோர்வுறச்செய்யும் வார்த்தைகள், பெலவீனப்படுத்துகிற வார்த்தைகள், குற்றப்படுத்துகிற வார்த்தைகள், யார் சொன்னாலும் அவைகள் தேவனிடத்திலிருந்து வந்தவை அல்ல என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
இயேசு தன்னிடம் வந்தவர்களை பார்த்து நல்ல வார்த்தைகளை, கிருபை பொருந்திய வார்த்தைகளை பேசினார். பயப்படாதே என்று சொன்னார், உனக்கு சமாதானம் என்று கூறினார், திகையாதே, கலங்காதே என்று கூறினார், சொல்லப்போனால் பண ஆசை பொருந்திய இளைஞனிடம் கூட அன்பு கூர்ந்து பேசினார், அதுபோல தான் பன்னிரண்டு வருடமாய் தீராத நோயினால் வாடிக்கொண்டிருந்தத ஒரு ஸ்திரீயை பார்த்து திடன்கொள் என்று சொன்னார். ஆண்டவர் இன்று உங்களை பார்த்தும் திடன்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஒரு விபசார ஸ்த்ரீ இயேசுவினிடத்தில் வந்த போதும்கூட, மற்றவர்கள் அவளை விபச்சாரி என்று தங்கள் மனதில் நினைத்தாலும், இயேசு அந்த ஸ்திரீயின் பாவத்தையெல்லாம் மன்னித்து, உற்சாகப்படுத்தி அனுப்பிவிட்டார். உங்களுடைய வார்த்தையும் மற்றவர்களை இடித்துத்தள்ளாமல், ஊன்ற கட்டுகிறதாய் காணப்படட்டும்.
ஆண்டவர் நமக்கு பயத்தின் ஆவியையோ அல்லது கண்டனத்தின் ஆவியையோ தரவில்லை. யாராவது உங்களுக்குக் கொடுக்கும் செய்தியையோ அல்லது வார்த்தையையோ நீங்கள் கேட்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது பயத்தையும் கண்டனத்தையும் கொண்டுவருவதாக நீங்கள் கண்டால், அதை உடனடியாக நிராகரிக்க பழகிக்கொள்ள வேண்டும். ஆண்டவர் நம்மை ஊக்கப்படுத்தும் தேவன், நம்மை சோர்வடையச் செய்யும் அல்லது உங்கள் இதயத்தில் பயத்தை ஏற்படுத்தும் தேவன் அல்ல.
இயேசு இந்த உலகத்திலிருந்து இராஜ்ஜியத்துக்கடுத்தவைகளை பிரசங்கம் செய்தபோது, அவர் மற்றவர்களிடம் தேடியது, மகிழ்ச்சியோடு எதிர் பார்த்த ஒரு காரியம் விசுவாசமாய் காணப்பட்டது. அவர் மற்றவர்களிடம் இருக்கும் விசுவாசம் அல்லது அவர்கள் விசுவாசக்குறைச்சலை சுட்டி காட்டுகிறவராய் காணப்பட்டார். இவை அனைத்திலிருந்தும் நாம் கற்றுக்கொள்வது ஒன்றுதான். நாம் நம்முடைய வாழ்க்கையை விசுவாசத்தினால் வாழ வேண்டும் என்றே கர்த்தர் விரும்புகிறார். அவர் மீது முழு நம்பிக்கையுடன், அவரைச் சார்ந்து இருப்பது தான் விசுவாச வாழ்க்கை. இதுவே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பதையும் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டவரை முழுமையாகச் சார்ந்து வாழத் தெரியாவிட்டால், நம்மிடம் உள்ள அனைத்து வேதாகம அறிவும், நமக்குத் தெரிந்த அனைத்து அற்புதமான சம்பவங்களும், பயனற்றவை என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமா? இல்லை பயனற்ற வாழ்க்கை வாழ வேண்டுமா? பயனுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்றால், எல்லாவற்றிலும் உங்கள் விசுவாசம் இயேசு மீது காணப்படட்டும். நீங்கள் விசுவாசிக்கிறவர் இன்னார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவரே உங்களை பார்த்து திடன்கொள் என்று தைரியமூட்டும், உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பேசுகிறவர். இதை தவிர உங்களை சோர்வுற செய்யும் வார்த்தைகள் பிசாசு கொண்டுவருபவை; அவற்றை நிராகரித்துவிடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org