மறைவுகட்டப்பட்ட தோட்டம் (Garden enclosed)

உன்னதப்பாட்டு 4 : 12  என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xudsiI2pQWk

சுயமரியாதை, சுயசித்தம், சுயாதீனமான வாழ்க்கையை முக்கியத்துவப்படுத்தும் இந்தக் காலகட்டத்தில், மணவாளனாகிய இயேசு நம்பிடத்தில் எதிர்பார்ப்பது நாம் முத்திரிக்கப்பட்ட கிணறாய், மறைவுகட்டப்பட்ட தோட்டமாய், அடைக்கப்பட்ட நீருற்றாய் இருக்கவேண்டும் என்பதுதான்.

வேதாகமத்தில் ஆதியாகமம் 34 ஆம் அதிகாரத்தில் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் சுயவிருப்பத்தின்படி, தான் இருந்த ஊரை சுற்றிப்பார்க்க சென்றாள். பின்பு ஏவியனான ஏமோரின் குமாரனாகிய சீகேம் என்பவனால் தீட்டுப்பட்டுப்போனாள். மறைவுகட்டப்பட்ட தோட்டமாகிய அவளின் குடும்பத்தை விட்டு வெளியே சென்றதால் இப்படியானது. மேலும் அவள் சகோதரர்களாகிய லேவியும், சிமியோனும் கொலைகாரர்கள் ஆனார்கள். இதினிமித்தம் அவர்கள் தகப்பனாகிய யாக்கோபுக்கு மிகுந்த கலக்கம் உண்டாயிற்று.

தேவன் ஆதியில் உண்டுபண்ணின ஆதாமையும், ஏவாளையும் மறைவுகட்டப்பட்ட தோட்டமாகிய ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அடைப்பை பிடுங்குகிரவனை பாம்பு கடிக்கும் என்ற வசனத்தின்படி ஏவாள் சர்ப்பத்தின் சொல்லைக்கேட்டு இச்சையில் விழுந்து தேவன் விலக்கின கனியை புசித்தாள். பின்பு ஆதாமுக்கும் கொடுத்தாள் அவனும் புசித்தான். இப்படி சர்ப்பமானது இரண்டு பேரையும் வஞ்சித்து, விழவைத்ததினால், மறைவுகட்டபட்ட ஏதேன் தோட்டத்தில் இருந்து அவர்கள் இரண்டுபேரும் துரத்தப்பட்டார்கள்.

மறைவுகட்டப்பட்ட தோட்டம் என்றால் என்ன ? அதின் அவசியம் என்ன ?

பலவித கனிகளால் நிறைந்துள்ள தோட்டம், மறைவுகட்டப்படவில்லையென்றால் வழி நடக்கின்றவர்கள் அதின் கனியை பறித்து, அதை சேதப்படுத்திவிடுவார்கள். பின்னர் எஜமானன் வரும் போது கனிகள் இல்லாத வெறுமையான தோட்டமாக காணப்படும். அதேபோல உங்களுடைய வாழ்க்கையும் மறைவுகட்டப்படவில்லையென்றால் உங்களுடைய கனிகளையும் கெர்ச்சிக்கிற சிங்கம்போல வகைதேடி சுற்றித்திரிகிற பிசாசானவன் சேதப்படுத்திவிடுவான்.

எனவே உங்களுடைய ஆவிக்குரிய, பூமிக்குரிய வாழ்க்கையை காத்து, ஆண்டவர் விரும்பும் நல்ல கனிகளை கொடுத்து, அவருடைய இருதயத்திற்கு பிரியமானவர்களாக காணப்படவேண்டும் என்றால் நீங்களும் மறைவுகட்டப்பட்ட தோட்டமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

அப்பொழுது தான் அவர் வருகையில் கறைபடாதவர்களாக, தீட்டுப்படாதவர்களாக ஒரே புருஷனுக்காக ஆயத்தமாக்கப்பட்ட கன்னிகையாக நீங்கள் காணப்படமுடியும். எனவே, உங்களுக்கு தேவன் தந்த குடும்பம் என்கிற வேலியையும், சபை என்கிற வேலியையும் விட்டு வெளியே செல்லாதவர்களாய், தோட்டத்திற்குள் மறைந்திருந்து, மணவாளன் அழைக்கும்போது குற்றமற்றவர்களாய் அவருக்கு முன்பாக நிற்கும்படிக்கும், மணவாளனை சந்திகும்படிக்கும் எப்போதும் ஆயத்தமாய் காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org