அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள் (நெகே. 9:25).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gvDAx15t85I
இஸ்ரவேல் ஜனங்கள் நானூறு வருட அடிமைத்தனத்திற்குப் பின்பு எகிப்திலிருந்து கானான் தேசத்தில் வந்த வேளையில் ஆண்டவர் அவர்களுக்குப் பாதுகாப்பான பட்டணங்களையும், செழுமையான பூமியையும், எல்லா வித ஆசீர்வாதங்களாலும் நிறைந்து வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் எல்லாவித கனிகளையும் கொடுக்கிற விருட்சங்களையும் கொடுத்தார். கர்த்தருடைய பெரிய தயவு அவ்வண்ணமாகச் செய்தது. கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய பெரிய தயை உங்கள் வாழ்க்கையிலும் வெளிப்படும். அது உங்களை வாழவைக்கும், உங்களைச் செல்வந்தர்களாக்கும்.
கர்த்தருடைய தயவு யாருக்கு வெளிப்படும்?, சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனை என் தயவோடு நோக்கிப்பார்ப்பேன் என்று ஏசாயா 66:2ல் ஆண்டவர் கூறினார். தயவும் கிருபையும் ஒன்றோடொன்று நெருங்கின வார்த்தைகளாய் காணப்படுகிறது. ஆண்டவருடைய தயவு, தன்னைத் தான் தாழ்த்துகிறவர்களுக்கு வெளிப்படும். அவர் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையையும் தயவையும் அளிக்கிறவர். மேன்மைக்கு முன்னானது தாழ்மை என்றும் வேதம் கூறுகிறது. கர்த்தர் உங்களை மேன்மைப் படுத்தி செல்வத்தோடும் சிறப்போடும் வாழவைப்பதற்கு எப்பொழுதும் தாழ்மையோடு ஜீவியுங்கள். இயேசு மரண பரியந்தம் தன்னை தாழ்த்தினார், ஆகையால் பிதாவாகிய தேவன் அவரை உன்னதங்கள் மட்டும் உயர்த்தி, தன்னோடு சிங்காசனத்தில் அமரும் படிக்குச் செய்தார் என்பதை நினைவில் கொண்டு ஜீவியுங்கள். அடுத்ததாக, ஆவியில் நொறுங்குண்டவர்களை தயவோடு நோக்கிப் பார்க்கிறவர். பாவங்கள், மீறுதல்கள் வரும்போது அவற்றைத் தவறு என்று உணர்ந்து அதற்காக மனம் வருந்துவது தான் ஆவியில் நொறுங்குண்ட ஜீவியமாய் காணப்படுகிறது. பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள் என்று 1 தெச. 5:22 கூறுகிறது. தாவீது பத்சேபாளோடு பாவம் செய்த போது, நாத்தான் தீர்க்கதரிசி அந்த தவற்றை உணர்த்தின வேளையில், என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது, தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்று மனம் வருந்தினான். என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன், என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என்றும் வேண்டுதல் செய்தான். ஆகையால் கர்த்தருடைய தயை அவனுக்கு வெளிப்பட்டது. பாவங்களை ஒருபோதும் மறைக்காதிருங்கள், அதை அறிக்கை செய்து விட்டுவிடுங்கள். அப்போது ஆண்டவருடைய தயவு உங்களுக்கும் வெளிப்படும். அடுத்ததாக, என் வசனத்திற்கு நடுங்குகிறவனை நான் தயவோடு நோக்கிப் பார்ப்பேன் என்றும் ஆண்டவர் கூறினார். எஸ்றாவின் நாட்களில் பரிசுத்த வித்து அந்நிய வித்தோடு கலந்து, கர்த்தருடைய பிரமாணத்திற்கு விரோதமாய் ஜனங்கள் பாவம் செய்தார்கள். அதை அவன் உணர்த்தின வேளையில், ஜனங்கள் மிகவும் அழுதார்கள். இந்த காரியத்தில் இன்னும் நம்பிக்கை உண்டு என்று கூறி தங்கள் தவற்றைச் சரிசெய்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, தாழ்மையோடும், நொறுங்குண்ட ஆவியோடும், கர்த்தருடைய வார்த்தைக்கு நடுநடுங்கியும் ஜீவியுங்கள். அப்போது ஆண்டவருடைய பெரிதான தயை உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு உங்களையும் ஐசுவரிய வான்களாக்கும்!
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae