கிறிஸ்துவை அறிந்துகொள்ளுங்கள் (Knowing Christ)

பிலி 3:7,8 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/x15lP_Zj9J0

தேவ ஜனங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். வேதாகமத்தை அறிவது வேறு; வேதாகமத்தில் இருக்கும் கிறிஸ்துவை அறிவது வேறு. இன்றைக்கு பல கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை தங்களுடைய அறிவிற்காக மாத்திரமே பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியுமா? வரலாற்றில் முன்பு இருந்ததை விட இப்பொழுது அதிகமான வேதாகம அறிவு உள்ளது. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக, அச்சிடப்பட்ட வேதபுஸ்தகத்தின் எண்ணிக்கை அதிகம். எங்கு பார்த்தாலும் செய்திகள், பல புஸ்தகங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இன்றைக்கு வேதாகமத்தை குறித்த அறிவை பெருக்கிக்கொள்ள பல வளங்கள் உண்டு. இவ்வளவு இருந்தாலும் கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறிந்துகொண்ட ஜனங்கள் அற்பமாகவே இருக்கிறார்கள்.

இவ்வளவு அதிகமான வேத அறிவு அனைத்தும் பரிசுத்த கிறிஸ்தவர்களை, பரிசுத்த சீஷர்களை உருவாக்கியது என்று நாம் சொல்ல முடியமா? இல்லை என்பது தான் பதில். வேத அறிவு பரிசுத்தத்தை உருவாக்க முடிந்தால், இன்று வரலாற்றில் மிகவும் தெய்வீக ஜனங்கள், பரிசுத்தமான ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி நடக்கவில்லையே. வேதாகம அறிவு பரிசுத்தத்தை உருவாக்க முடிந்தால் சாத்தான் தானே பரிசுத்தமாக இருந்திருப்பான். ஏனென்றால் வேதாகமத்தை பற்றிய அவன் அறிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது.

தேவ ஜனங்களே கிறிஸ்துவை நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் அறிவது நம்முடைய வாழ்க்கையின் பேரார்வமாகவும் நம்முடைய இதயத்தின் பாரமாகவும் இருக்கட்டும். நாம் கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தால் மட்டுமே நம்முடைய ஊழியத்திலும் நம்முடைய வாழ்க்கையிலும் தெய்வீக அதிகாரமும், தெய்வீக ஆசீர்வாதமும் உண்டாகும்.

பவுல் வேதாகமத்தை நன்றாக அறிந்திருந்தான். கமாலியேலின் பாதத்தில் நியாயப்பிரமாணங்களை படித்து கரைத்து குடித்தவன். வேதாகம அறிவில் டாக்டர் பட்டம் பெற்றவன் என்றும், Gold Medal வாங்கினவன் என்றும், வேதாகம தேர்வில் முதல் வகுப்பு மாணவன் என்றும் அவனை சொல்லலாம். முழு வேதகமத்தையும் நன்றாக அறிந்தவன், பரிதாபம் இயேசுவை அறியாமல் இருந்தான். இதுதான் இன்றைக்கு பல கிறிஸ்தவர்களின் நிலை. வேத அறிவு தலைக்கு மாத்திரமல்ல, அது இருதயத்தில் பாய்ந்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட வேத அறிவுகொண்ட பவுல் பல கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான். எப்பொழுது இயேசுவை இதயபூர்வமாக அறிந்துக்கொண்டானோ, அப்பொழுது சொல்லுகிறான், என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பதாக. ஒவ்வொருநாளும் இயேசுவை கவனித்துப்பாருங்கள். அவரையயே நோக்கி பாருங்கள். அவருடைய சிந்தையை தரித்துக்கொள்ளுங்கள். இயேசுவை அறிகிற அறிவிற்காக எல்லாவற்றையும் அற்பமாக எண்ணுங்கள்.

திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும் என்று நீதி 27:7 கூறுகிறது. இயேசுவை அறிகிற அறிவில் திருப்தி அடைந்தவனுக்கு, தேன்கூடும் இந்த உலகத்திலிருக்கும் செல்வமும் பொன்னும் பதவியும் பட்டமும் அற்பமாகவே தெரியும். ஆகையால் இயேசுவை அறிகிற அறிவில் திருப்தியடையுங்கள். அப்பொழுது கர்த்தருடைய பிரியமும் உங்கள் மேல் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org