குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் (நெகேமியா 13:31).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Y6igVVNpT4A
நெகேமியா தேவனை நோக்கி ஏறெடுத்த விண்ணப்பமாய் காணப்படுகிறது. நம்முடைய தேவன் நம்மை நினைத்தருளி ஆசீர்வதிக்கிறவர். சிம்சோன் கண்கள் பிடுங்கப்பட்டவனாய் பெலிஸ்தியர்களுக்கு முன்பாக காணப்பட்ட வேளையில் கர்த்தரை நோக்கி என்னை நினைத்தருளும் என்று வேண்டுதல் செய்தான், கர்த்தர் அவனை நினைத்தருளினார். எசேக்கியா வியாதிப்பட்ட வேளையில் என் உண்மையையும் உத்தமத்தையும் நினைத்தருளும் என்று ஜெபித்த வேளையில் கர்த்தர் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவனை நினைத்தருளி பதினைந்து வருஷங்களைக் கூட்டிக்கொடுத்தார். கர்த்தர் உங்களை நினைத்தருளும் போது உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
நெகேமியா அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே எருசலேமுக்கு அலங்கத்தைக் கட்டும்படிக்கு வந்தார். அவர் யூதாதேசத்திலே பன்னிரண்டு வருடகாலமாய் அதிபதியாயிருந்தார். அவர் ஐம்பத்திரண்டு நாட்களில் அலங்கத்தைக் கட்டிமுடித்த பின்பு, சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்த ஜனங்களைத் தேவாலயத்தின் காரியங்களைச் செய்வதற்கும், ஓய்வுநாட்களை ஆசரிப்பதற்கும், புறஜாதிகளுக்கு எங்கள் குமாரத்திகளை கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணும்படிக்குச் செய்தான். ஆவிக்குரிய பெரிய மறுமலர்ச்சி யூதர்களுக்குள்ளாய் கடந்து வந்தது. பன்னிரண்டு வருஷங்களுக்குப் பின்பு அவன் அர்தசஷ்டா ராஜாவினிடத்திற்கு திரும்பப் போய் அவனைச் சேவிக்கிறவனாய் காணப்பட்டான். அதன்பின்பு பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப்போய், சில நாளுக்குப் பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, எருசலேமுக்கு திரும்ப வந்தார் (நெகே.13:6,7). அவன் திரும்பி வந்த வேளையில் எதையெல்லாம் செய்ய மாட்டோம் என்று ஜனங்கள் ஆணையிடுவித்துக்கொண்டார்களோ, அவற்றையெல்லாம் மீண்டும் செய்கிறவர்களாய் காணப்பட்டார்கள்.
ஆசாரியனாகிய எலியாசிப் அம்மோனியனான தொபியாவோடே கூட்டுச்சேர்ந்து, தேவனுடைய ஆலயத்துப் பிரகாரங்களில் அவனுக்கு ஒரு அறையை ஆயத்தம்பண்ணி, ஆலயப்பிரகாரங்களை கறைப்படுத்தும் படிக்குச்செய்தான். இவன் யூத ஜனங்களுக்கு எதிரியாய் காணப்பட்டு அலங்கம் கட்டுவதைத் தடுக்க முயன்றவர்களில் ஒருவன் என்று நெகேமியா 2:19 கூறுகிறது. நெகேமியா திரும்ப வந்தவேளையில் அவனைத் துரத்தி, அவன் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டு தேவாலயப் பிரகாரங்களைச் சுத்திகரித்தான். அந்தவேளையில் கர்த்தரை நோக்கி இந்தக்காரியத்தில் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் என்று முதலாவது ஜெபித்தான்(நெகே.13:14). கர்த்தருடைய பிள்ளைகள் ஆலயத்தின் நன்மைகளைத் தேடும் போது கர்த்தர் உங்களை நினைத்தருளி ஆசீர்வதிக்கிறவர். அதுபோல நம்முடைய சரீரங்களும் கர்த்தருடைய ஆவியானவர் தங்குகிற ஆலயம், அதையும் சுத்திகரித்துப் பாதுகாக்கும் போது கர்த்தர் உங்களை நினைத்தருளி ஆசீர்வதிப்பார்.
ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவர்களாயும் யூதர்கள் காணப்பட்டார்கள். சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் விற்கிறதையும் வாங்குகிறதையும் நெகேமியா கண்டான். கர்த்தருடைய பிரமாணங்களுக்கு விரோதமான காரியங்களை ஓய்வுநாளில் செய்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதையும், தாங்கள் ஆணையிடுவித்த காரியங்களை மீறினதையும் நெகேமியா கண்டான். உடனே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே தன் வேலைக்காரரில் சிலரை நெகேமியா நிறுத்தினான். ஆகையால் ஓய்வுநாட்களில் விற்பதும் வாங்குவதும் தடைப்பட்டது, இதையும் நினைத்தருளி எனக்கு இரங்கும் என்று இரண்டாவதாக வேண்டுதல் செய்தான்(நெகே.13:22). கர்த்தருடைய பிள்ளைகளே, ஓய்வு நாட்களை நீங்கள் கனம்பண்ணிக் கர்த்தரைத் தேடும்போது கர்த்தர் உங்களை நினைத்தருளி ஆசீர்வதிப்பார்.
அடுத்ததாக, அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதர்களையுத் நெகேமியா கண்டான். பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனாய் காணப்பட்டான். இவனும் யூத ஜனங்களுக்கு எதிரியாய் காணப்பட்டு அலங்கம் கட்டுவதைத் தடுக்க முயன்றவர்களில் ஒருவன் என்று நெகேமியா 2:19 கூறுகிறது. இப்படிப்பட்டவர்களையும் நெகேமியா கடிந்துகொண்டு, அவர்கள்மேல் சாபத்தைக்கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து, மறுஜாதியாரையெல்லாம் யூதர்களை விட்டு நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினான்(நெகே.13:31). இந்தக்காரியத்தில் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் என்று மூன்றாவதாக ஜெபித்தான். கர்த்தருடைய பிள்ளைகள், நாம் உலகத்திலிருந்தாலும் உலகத்தான் அல்ல. இப்பிரபஞ்சத்திற்குரிய எந்த வேஷத்தையும் கர்த்தருடைய ஜனங்கள் தரிக்கலாகாது, நாம் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்யும் போதும் கர்த்தர் நம்மை நினைத்தருளி ஆசீர்வதிப்பார். அடுத்ததாக, மற்ற அதிபதிகள் படிகளை வாங்கி ஜனங்களுக்கு பாரமாயிருந்தார்கள், ஜனங்கள் மேல் அதிகாரம் செலுத்தினார்கள். ஆனால் நெகேமியாவோ தேவனுக்குப் பயந்ததினால் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யவில்லை. ஆகையால் நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின் படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் என்று நான்காவதாக ஜெபித்தான். கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் மற்றவர்களுக்கு பாரமாயிருக்கக் கூடாது. அப்போது கர்த்தர் உங்களை நினைத்தருளி உங்கள் வாழ்க்கையில் நன்மைகளைக் கட்டளையிட்டு ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae