சர்வாங்க சுகம் (Complete healing)

அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது, அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும்முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது (அப். 3:16).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dtgltXw4PP0

ஆண்டவர் ஒரு காரியத்தைச் செய்யும் போது அதில் எப்போதும் பூரணம் காணப்படும். அவர் ஒருவருக்குச் சுகத்தைக் கொடுத்தால் அது  சர்வாங்க சுகமாய் காணப்படும். அவர் ஒருவனை ஆசீர்வதிக்கும் போது, வேதனையில்லாத ஆசீர்வாதத்தைக் கொடுப்பார். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின்  பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என்று யாக். 1:17 கூறுகிறது. அவர் பூரணமான நன்மைகளைத் தருகிறவர். ஒருநாள் பேதுருவும்  யோவானும் ஜெபிக்கும் படிக்குத் தேவாலயத்திற்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு சிலர் வந்தார்கள். அவர்கள் அவனைத்  தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சை கேட்கும்படி, நாடோறும்   அலங்கார வாசல் என்னப்பட்ட  தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.  தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான், அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான். இதைக் கண்ட ஜனங்கள் பிரமிம்படைந்தார்கள். உடனே பேதுரு, இயேசுக் கிறிஸ்துவின் நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது, அவரால் உண்டாகிய விசுவாசமே  உங்களெல்லாருக்கும்முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது என்று அவர்களுக்குப் பிரசங்கித்தான்.


கர்த்தரிடத்திலிருந்து எதையாகிலும் நாம் பெற்றுக் கொள்ள நமக்கு விசுவாசம் அவசியம் தேவை. முதலாவதாக, அந்த விசுவாசம், இயேசுவால் உண்டாகிய விசுவாசம் என்று மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. விசுவாசத்தின் ஒரு பகுதி, இயேசு நமக்குள் உண்டாக்குகிற விசுவாசமாய் காணப்படுகிறது. ஆகையால் தான் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விசுவாசத்தைத் துவக்குகிறவர் இயேசு என்று எபி. 12:1  கூறுகிறது. நாம் விசுவாசிக்கக் கூடாத நிலையில் காணப்படும் போது, அவர் நமக்குள்ளாய் உண்டாக்குகிற விசுவாசம், சர்வாங்க சுகத்தைக் கொண்டுவரும். இரண்டாவது, மற்றவர்களுடைய அற்புதத்திற்காக ஜெபிக்கிறவர்களுக்குள் இயேசுவின்   நாமத்தைப் பற்றிய விசுவாசம் காணப்படவேண்டும் என்றும் அதே வசனம் கூறுகிறது. ஒருவருக்காக நீங்கள் ஜெபிக்கும் போது, இயேசுவின் நாமத்தில் எல்லாம் ஆகும் என்ற ஆழமான விசுவாசம் உங்களுக்குள் காணப்பட வேண்டும். பேதுருவுக்குள் அந்த விசுவாசம் காணப்பட்டது, அது பிறவிச் சப்பாணிக்கு சர்வாங்க சுகத்தைக் கொண்டுவந்தது.  விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் என்று ரோமர் 10:17 கூறுகிறது. கர்த்தருடைய வேதத்தை வாசித்து, தியானித்து, அதைக்குறித்து அதிகமாகக் கேட்கும் போது, விசுவாசம் நமக்குள்ளாக வளரும். மூன்றாவது,  அற்புத சுகத்திற்காய் காத்திருக்கிறவர்களுக்குள்ளும் இயேசுவின் நாமத்தின் மேல் விசுவாசம் காணப்பட வேண்டும். பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்த ஸ்திரீ, இயேசுவின்  வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் சுகம் உண்டாகும் என்று விசுவாசித்து அவரிடத்தில் வந்து அவர் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்று கூறினார். பலவீனமாய் காணப்பட்ட அவளுடைய விசுவாசம் அவளுக்கு சர்வாங்கள சுகத்தைக் கொண்டு வந்தது.  கர்த்தருடைய  பிள்ளைகளே,  நாம் தரிசித்து அல்ல விசுவாசித்து நடக்கும் படிக்கு அழைக்கப்பட்டவர்கள், விசுவாசத்தினால் வராதது எல்லாம் பாவம், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் காணப்பட முடியாது. உங்கள் ஒவ்வொருவருடைய விசுவாசத்தையும் ஆண்டவர் வர்த்திக்கப் பண்ணி உங்களுக்கு அற்புதங்களையும்  சர்வாங்க சுகத்தையும் தருவாராக. 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae