மத் 18:5. இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3ikzTf6jt8o
மத்தேயு 10:40ல் இயேசு தன்னுடைய சீடர்களிடம் அதாவது அப்போஸ்தலர்களிடம் சொன்னார், உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்பதாக. அதாவது, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் உண்மையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள். ஆனால் உலகில் அதிகமான அப்போஸ்தலர்கள் இல்லை. அப்போஸ்தலர்களின் எண்ணிக்கையை ஒருபுறம் விரல்களில் எண்ண முடியும். அப்படியானால், உலகில் நீங்கள் எப்படி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முடியும்?. நீங்கள் ஒரு சிறு குழந்தையை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள். ஒரு அப்போஸ்தலரை ஏற்றுக்கொள்ளுகிறவன் இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறான், மாத்திரமல்ல ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்ளுகிறவனும் இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறான். அப்போஸ்தலர்களை விட குழந்தைகள் இந்த உலகத்தில் ஏராளமாக உள்ளார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஆகையால் இயேசுவை ஏற்றுக்கொள்ள நமக்கு சந்தர்ப்பங்கள் அதிகமாய் காணப்படுகிறது.
உங்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்த குழந்தையை இயேசுவின் நாமத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியா மற்றும் சில தேசங்களில், அது ஒரு பெண்ணாக இருந்தால், சிலர் புலம்புவார்கள். ஒன்றை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தை கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அது இயேசு கொடுத்த பரிசு. அந்த குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தவர் இயேசு. அது ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று இயேசுதான் தீர்மானித்தார். புறஜாதி மரபு, தத்துவம் மற்றும் மற்றெந்த மதம் என்ன கற்பித்தாலும், தேவன் ஆண்களையும் பெண்களையும் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். தேவன் தனது சாயலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார். உங்களுக்கு ஒரு மகள் பிறந்து, ஐயோ, ஏன் இன்னொரு மகள்? என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஒரு மகள் தேவை என்று தேவன் முடிவு செய்தார், அந்தச் மகள் மூலம் தேவன் ஒரு பெரிய திட்டத்தை நிறைவேற்ற போகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க, நீங்கள் மனந்திரும்பி சிறு குழந்தைகளை போல மாற வேண்டும் என்று இயேசு கூறினார். பின்பு அவர் கூறுகிறார், நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பெரியவனாக இருக்க விரும்பினால், மனத்தாழ்மைக்கு சரியான எடுத்துக்காட்டுகளான சிறு குழந்தைகளை போல ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை தாழ்த்தி கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாத குழந்தை தொட்டிலில் மிகவும் உதவியற்றதாக இருக்கிறது, எனக்கு எல்லாவற்றுக்கும் என் அம்மா தேவை என்று ஒப்புக்கொள்ள அது வெட்கப்படுவதில்லை. அதுபோல தான், எல்லாவற்றிற்கும் எனக்கு இயேசு தேவை என்று நாம் சொல்ல வேண்டும். அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரிய வேண்டுமானால், தேவன் என்னிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும். இது தான் தாழ்மை. தாழ்மை என்பது உங்கள் தலையை குனிந்து மென்மையாக பேசுவது அல்ல. தாழ்மை என்பது எல்லாவற்றிலும் தேவனை நம்பியிருப்பது. ஒரு சிறு குழந்தையை போல ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் எனக்கு தேவனின் உதவி தேவை என்று கூறுங்கள். நீங்கள் அப்படி நடந்து கொண்டே இருந்தால், நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பெரியவனாக இருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

