ஆண்டவருடைய வேலைக்குத் தோள் கொடுங்கள் (Give your shoulder to the work of God)

அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள், அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை (நெகே. 3:5).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/wxTXkFw-M5I

அர்தசஷ்டா ராஜாவின் பான பாத்திரக்காரனாய் காணப்பட்ட  நெகேமியா என்ற யூதன், சுமார் எண்ணூறு மைல் தொலைவில் காணப்பட்ட தன்னுடைய ஜனங்கள், சிறையிருப்பிலிருந்து மீண்டு சென்ற பிறகும் இன்னும் எருசலேம் பட்டணத்திற்கு அலங்கம் இல்லாத படியால், பாதுகாப்பின்றி, எதிரிகளினிமித்தம் தீங்கையும் நிந்தையையும்  அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்து மிகுந்த துக்கம் கொண்டான். ஆகையால் இவன் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி ஜெபித்து பரலோகத்தின் தேவனுடைய உதவியை நாடினான்.  அதனிமித்தம் கர்த்தருடைய தயவுள்ள கரம் அவனுக்கு வெளிப்பட்டு, ராஜாவின் கண்களில் தயவு கிடைக்குப்படிக்குச் செய்தது. ராஜாவின் உத்தரவோடு அலங்கத்தை எடுத்துக் கட்டும்படிக்கு நெகேமியா  சென்றான். அங்குச் சென்று தன் சொந்த ஜனங்களோடு எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொன்ன வேளையில், அனேகர் அந்த நல்ல வேலைக்கு தங்கள் கரங்களையும் தோள்களையும் கொடுத்தார்கள். வெகு ஜாக்கிரதையோடு  அவர்கள் அலங்கத்தைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். 

எல்லாரும் அலங்கத்தையும் வாசல்களையும் பழுது பார்த்துக்  கட்டிக்கொண்டிருந்த வேளையில், தெக்கோவா ஊரைச் சேர்ந்த ஒரே ஒரு கூட்டம் தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை. இந்தப் பட்டியலில் இவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தங்களை அர்ப்பணித்தார்கள். தெக்கோவா ஊரார் முழுவதும் கர்த்தருடைய வேலையைத் துரிதமாகவும் ஜாக்கிரதையோடும் செய்து கொண்டு வந்தார்கள், ஆனால் அவ்வூராரின் பிரபுக்கள், கனத்திற்குரியவர்கள் தங்கள் தோள்களை இந்த நல்லவேலைக்கு கொடுக்கவில்லை. அதற்குரிய காரணம் என்ன என்று எழுதப்படவில்லை. ஆகிலும் இவர்கள் மட்டும் இந்த வேலையிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறதைப் பார்க்கமுடிகிறது. கர்த்தருடைய பணி குறிப்பிட்ட ஐம்பத்திரண்டு நாட்களில் ஆண்டவருடைய தீர்மானத்தின்படி  முடிந்தது. ஆனால் அதினிமித்தம் உண்டான நன்மைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் தெக்கோவா ஊரைச் சேர்ந்த பிரபுக்கள்  அபாத்திரவான்களாய் போய்விட்டார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருடைய வேலையில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சிறிதானதோ, பெரிதானதோ எதையாகிலும் ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்கென்று உற்சாக மனதோடு செய்யுங்கள். உங்கள் தோள்களைக் கொடுத்து பாரத்தைத் தாங்குங்கள். அப்போது கர்த்தருடைய தயையுள்ள கரம் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் வெளிப்படும். அது நீங்கள் கையிடுகிற காரியங்களில் காரிய சித்தியை உண்டாக்கும். மனித தயவையும் தேவ தயவையும் நீங்கள் பெற்றுக் கொள்ளுவீர்கள். தெக்கோவா  ஊரின் பிரபுக்களைப் போல, நாங்கள் பிரபுக்கள், கனத்திற்குரியவர்கள்,  விஷேசித்தவர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளாதிருங்கள். இந்த பூமியில் காணப்படுகிற எல்லா கனவான்களின் ஐசுவரியங்களை ஒன்று சேர்த்தாலும், அதைக் காட்டிலும் கர்த்தருடைய பணி கனத்திற்கும், மேன்மைக்கும் உரியது. ஆகையால் சந்தோஷத்தோடும், முழு மனதோடும், முழு உள்ளத்தோடும், முழு பலத்தோடும் கர்த்தருடைய பணிக்கு உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது நீங்கள் பரலோக நன்மைகளைச் சுதந்தரிப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae