2 சாமு 7 : 18. அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mLnbUuzTKb4
தாவீது கர்த்தருக்கு ஒரு ஆலயத்தை கட்டவேண்டுமென்ற வாஞ்சை உடையவனாக இருந்தான். ஆனாலும் கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசிமூலமாக உன் கர்ப்பப்பிறப்பு எனக்கென்று ஒரு ஆலயத்தை கட்டுவான் என்று சொல்லிவிட்டார். ஆண்டவர் இந்த அதிகாரத்தில் தாவீதுக்கும், அவன் பின்பாக வரும் சந்ததிக்கும், கர்த்தர் செய்ய போகிற காரியத்தை மனுஷர் முறைமையாக சொன்னார். கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார்; உனக்கு பின் வரும் சந்ததியின் ராஜ்யத்தை நிலைப்படுத்துவார். அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; என் கிருபையை அவனைவிட்டு விலக்கமாட்டேன். உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் சொன்னார். இதை கேட்ட தாவீது சொன்னான் ஆண்டவரே வெகுதூரமான காரியத்தை எனக்கு தெரியப்படுத்தினீர்.இதற்கு நானும் என் வீட்டாரும் எம்மாத்திரம்? என்பதாக.
தாவீது குறிப்பிட்டு சொல்வது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த என்னை அரசனாக்கியத்தற்கு எண்ணிலுள்ள தகுதியோ அல்லது என் வீட்டாரின் தகுதியோ கிடையாது. எல்லாம் அவருடைய கிருபை மாத்திரம் என்பதை உணர்ந்து நான் எம்மாத்திரம்? என் வீட்டார் எம்மாத்திரம்? என்று சொல்பவனாக காணப்படுகிறான்.
இதுவரைக்கும் நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் கர்த்தர் நடத்திவந்ததற்கு நாம் எம்மாத்திரம் ? நம்முடைய வீடும் எம்மாத்திரம்? ஒன்றுக்கும் உதவாத ஆடுகளின் பின்னால் அலைந்து திரிந்த தாவீதைப்போல, ஒன்றுக்கும் உதவாத நம்மையும் ரட்சித்து, கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்ற ஜனங்களாக, கடாச்சம்பெற்ற ஜனங்களாக, ஆசாரியர்களாகவும், ராஜாக்களாகவும் அவர் நம்மை உயர்த்தி வைத்ததற்கு நாம் எம்மாத்திரம் ? நம்முடைய வீடும் எம்மாத்திரம்?. நாம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் அவருடைய கிருபை.
II கொரிந்தியர் 3:5 எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்ற வசனத்தின்படி தாவீதை தகுதிப்படுத்தி வெகுதூரத்து காரியங்களை மனுஷர் வழக்கமாய் சொன்ன தேவன் உங்களையும் தகுதிப்படுத்தி வெகுதூரத்து காரியங்களை தெரியப்படுத்துவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org