ஐசுவரியமும் கனமும்:-

I நாளாகமம் 29:12 ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

தாவீது தான் சவதரித்து வைத்த அனைத்தையும் தவிர, தனக்கு சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுத்தான். அவன் ஏற்கெனவே கர்த்தருடைய ஆலயத்துக்கு காணிக்கைகளை செலுத்தினாலும், அதில் அவன் திருப்திப்படவில்லை. இன்னும் அதிகமாக கர்த்தருடைய ஆலய கட்டுமான பணிகளுக்காக அவன் கொடுத்தான். அவன் கொடுத்தது மாத்திரமல்ல, மற்றவர்களுக்கும் கர்த்தருக்குத் தங்கள் கைக்காணிக்கைகளைச் செலுத்த கற்றுக்கொடுக்கிறவனாக, உற்ச்சாகப் படுத்துகிறவனாக காணப்படுகிறான் என்பதை இந்த அதிகாரத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஒரு சில நேரங்களில் சபையில் கர்த்தருடைய ஆலயக்கட்டுமான பணிகளுக்கு தேவைகள் காணப்படுகிறது என்று சொன்னால், சிலர் தவறாக புரிந்துகொள்ளுகிறார்கள்.

எஸ்றா 1:4 ல் அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான் என்று வாசிக்கும்போது அவன் விளம்பரம்பண்ணுவித்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது; அப்படியென்றால் கர்த்தருடைய ஆலய கட்டுமான பணிகளுக்கான தேவைகளை மற்றவர்களுக்கு தெரிவிப்பது இல்லையென்றால் அறிவிப்பது என்று பொருள்.

தாவீதும் கூட அப்படித்தான் மற்றவர்களை உற்சாக படுத்தினான். அப்படி அவன் உற்சாகமாக காணிக்கைகளை செலுத்தினான். தாவீது அப்படி இருந்ததால் தான் ஆண்டவர் சொன்னார் இவன் என் இருதயத்துக்கு ஏற்றவன் என்று. இதில் ஒரு விசேஷித்த காரியம் என்னவென்றால் தாவீது இப்படியாக கர்த்தருடைய ஊழியத்துக்கு காணிக்கைகளை செலுத்தினாலும், மற்றவர்களை ஊக்கப்படுத்தினாலும் அவன் ஒரு நன்றி நிறைந்த இருதயத்தோடு சொல்லுகிறான், ஆண்டவரே ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது என்பதாக. நாம் கொடுத்ததால் தான் கர்த்தருடைய ஆலயம் கட்டப்பட்டது, கட்டப்படும் என்ற சிந்தையை தவிர்த்து சொல்லுகிறான் ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது என்று. காரணம் பொன்னும் வெள்ளியும் அவருடையது. அவர் ஐசுவரியசம்பன்னர்.

ஆகையால் நமக்குள்ளாக ஒரு தாழ்மையின் சிந்தை, ஆண்டவரே உம்முடைய ஊழியத்துக்கென்று கொடுக்க, உற்சாக மனதை உம்முடைய கிருபையினால், ஆவியானவருடைய ஏவுதலினால் எனக்கு கொடுத்தாலும், ஐசுவரியமும் கனமும் உம்மாலே தான் வரும் என்று சொல்பவர்களாக நீங்கள் காணப்பட்டால் நீங்கள் கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றவர்களாகவும், கோரேசுக்கு முன்பாக எப்பொழுதும் திறந்த வாசலை வைத்த தேவன் உங்களுக்கும் எப்பொழுதும் திறந்த வாசலை வைப்பார் என்பதிலும் சந்தேகமில்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *