உன் சிருஷ்டிகரை நினை:-

பிரசங்கி 12 : 1. நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை…

நாம் யாருடைய நினைவாக இருக்கிறோம்? நம்முடைய சிந்தனை மண்டலத்தை, நினைவு மண்டலத்தை யாருக்கு நாம் அனுமதிக்கிறோம்? சீனா தேசத்தில் ஒரு அப்ளிகேஷன் இருக்கிறதாம். அந்த அப்ளிகேஷனில் சிந்தனைகளில் பேசக்கூடிய வாலிபர்களின் வாலிப பெண்களின் சத்தத்தை பதிவு செய்து, நிஜமாகவே அவர்களோடு பேசுகிறதாக அந்த அப்ளிகேஷன் காணப்படுமாம். ஒருநாள் அந்த அப்ளிகேஷனில் பேசுவதை தவறவிட்டாலும், தானாகவே அந்த அப்ளிகேஷனிலிருந்து பெண்கள் கரிசனையோடு அந்த வாலிபர்களிடம் பேசுவதைப்போலவும், அன்போடு காரியங்களை விசாரிப்பவர்களை போலவும் காணப்படுமாம். இப்படியாக அநேக வாலிபர்கள் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அப்படிப்பட்ட சிந்தனை மண்டலத்துக்கு ஒப்புக்கொடுத்து தங்களை தானே சீரழித்துக்கொள்ளுகிறார்கள். இன்னும் அநேகர் சிந்தனைகளில் ஏதாவது வேண்டாத கற்பனைகளை செய்துகொண்டிப்பது வழக்கம். படுக்கைகளில் இருக்கும்போதும் தேவையில்லாத காரியத்தை நினைத்துக்கொண்டிருப்பார்கள். சிலருக்கு அடுத்தது என்ன சம்பவிக்குமோ என்று நினைத்து தங்களுடைய சிந்தனைகளை வீணடித்துவிடுகிறார்கள். காதலர் காதலிகளுக்காக தங்களுடைய சிந்தனைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். அடுத்தவர்களை எப்படி சீரழிக்கலாம், எப்படி அடுத்தவனை விழத்தள்ளலாம் என்று தங்கள் நினைவுகளை வீணடித்துவிடுகிறார்கள்.

ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிந்தையை இயேசுவுக்காக, நம்முடைய நினைவுகளை நம்முடைய இரட்சகருக்காக கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறவராய் இருக்கிறார். அவரே உங்கள் சிருஷ்டிகர்.உங்கள் சிருஷ்டிகர் உங்கள் நினைவாகவே இருப்பவர்; உங்களுக்காக பரிதபிக்கிறவர்; உங்களுக்காக துக்கம்கொள்ளுபவர்; உங்களுக்கு ஏதாவது சம்பவித்துவிட்டது என்றால் அவராலே தாங்கிக்கொள்ளவே முடியாது; நீங்கள் உடைந்துபோன சூழ்நிலையில் இருந்தால், அதை பார்த்துவிட்டு இயேசுவால் சும்மா இருக்கவே முடியாது; உங்கள் காயங்களை கட்டுபவர்; உங்கள் நிந்தையை நீக்குபவர்; உங்களுக்கு முன்பாக சென்று தடைகளை நீக்கி போடுகிறவர்; தாயின் கருவில் உருவாகும் முன்னமே தெரிந்து கொண்டவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்டவர் தான் உங்கள் சிருஷ்டிகர். அவரை நாம் ஒவ்வொருவரும் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆவியானவர் எழுதிவைத்திருக்கிறார்.

மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். காண்கிறவைகள் எல்லாம் மாயை. மாயைகளை நம்பி ஜீவித்து, அதையே சிந்தித்து கொண்டிருப்பதும் மாயை. மாயை இல்லாத கர்த்தரையே நினைத்துக்கொண்டிருங்கள். அதுவே உங்களை பூரணத்திற்கு நேராக அழைத்து செல்லும். இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *