தகப்பன் மகன் உறவில் மேட்டிமை வேண்டாம்:-

ஆதி 45:28. அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

யாக்கோபின் மகன் யோசேப்பு தன் சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டு எகிப்து தேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்டான். அங்கே கர்த்தர் அவனோடு கூட இருந்தபடியால் போன எல்லா இக்கட்டுகளிலும் விடுவித்து எகிப்து தேசத்திற்கே அதிபதியாக கர்த்தர் அவனை உயர்த்தினார். வசனம் சொல்கிறது கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங் 75:6,7) என்பதாக. ஆகையால் உங்களுக்கும் வேலைஸ்தலங்களில் அநேகர் நிமித்தமாக போராட்டங்களும் நெருக்கடிகளும் வரலாம். யாரிடமாவது இருந்து நன்மை வராதா என்று மனிதர்களை நம்பி இருக்கவேண்டாம். காரணம் உங்களுக்கு ஜெயம் கர்த்தரிடமிருந்து மாத்திரம் வரும்.

யோசேப்பு அதிபதியாக இருந்தபோது தேசம் முழுவதும் ஏழு வருஷம் பஞ்சம் நிலவியது. யோசேப்பின் சகோதரர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் வேண்டிய தானியங்களை கொள்வதற்கு எகிப்துக்கு போகையில் பல வருடங்கள் கழித்து யோசேப்பு தங்கள் சகோதரர்களை கண்டு தன்னை அந்த தேசத்தின் அதிபதியாக வெளிப்படுத்தினான். அப்பொழுது யோசேப்பு தங்கள் சகோதரர்களை பார்த்து பல முறை கேக்கிறான், அவன் தகப்பனாகிய யாக்கோபு இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்று. யாக்கோபு இன்னும் உயிரோடிருக்கிறார் என்று அறிந்த யோசேப்பு தன் சகோதரர்களிடம் நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம் என்பதாக சொல்ல சொன்னான். சொல்லப்போனால் யோசேப்பு தான் தன் தகப்பனை பார்க்கும்படியாக, யாக்கோபை தன்னிடம் அழைத்து வரும்படியாக சென்றிருக்க வேண்டும். என்ன தான் அவன் தேசத்தின் அதிபதியாக இப்பொழுது இருந்தாலும் யாக்கோபு அவன் தகப்பன், வயதில் முதிர்ந்தவர், வயதின் நிமித்தமாக பெலன் குன்றியிருக்கும், மற்றுமல்ல யாக்கோபு ஒரு தேவ மனிதன். ஆகையால் யோசேப்பு தான் யாக்கோபை பார்க்க வந்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக யாக்கோபு கருதாமல் தன் மகன் யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்ற செய்தியை கேட்டு முதிர் வயதானாலும் அவனை நான் போய் பார்க்கட்டும் என்று அவனை பார்க்கும்படியாக புறப்படுகிறான். இதேபோலத்தான் இயேசுகிருஸ்துவும் கூட அவர் தேவனுக்கு சமமாய் இருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் அடிமையின் ரூபமெடுத்து நம்மை சந்திக்கும் படியாக இந்த உலகத்திற்கு வந்தார். இன்றும் நாம் அல்ல, அவரே, வானங்கள் கொள்ளாத கர்த்தரே, ஒன்றுக்கும் உதவாத நம்மை சந்திக்கும்படியாக வாசற்படியிலிருந்து கதவை தட்டிக்கொண்டே இருக்கிறார்.

மாத்திரமல்ல யாக்கோபு கோசேன் நாட்டில் வந்து சேர்ந்தபோது, இப்பொழுது தன் மகன் யோசேப்பு தன் தகப்பனை சந்திக்கும்படியாக இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான். என்ன அருமையான தகப்பன் மகன் உறவு என்பதை சிந்தித்து பாருங்கள்? மகன்களும் தன்னுடைய தகப்பன்மார்களை மதித்து, போய் அவர்களை ஆதரிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த வசனங்களை படிக்கும்போது அறிந்துகொள்கிறோம். இயேசு வாசற்படியிலிருந்து கதவை தட்டும்போது, கதவை திறக்கிற நல்ல மகன்களாக இருக்கிறோமா? இல்லை கதவை தட்டும்போதும் என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்று அவர் சொல்லியும், ஸ்திரிகளின் ரூபவதியை போல அவருக்கு கதவை திறக்க சோர்ந்து போகிறோமா? சோர்ந்து போவோமென்றால், தாமதிப்போமென்றால் நேசர் போய்விடுவார் என்பதை குறித்து உன்னதப்பாட்டு 5ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

ஆகையால் யாக்கோபு யோசேப்பை போல உங்களுடைய உறவும் இயேசுவோடும், உங்கள் பெற்றோர், பிள்ளைகள் கூடவும் இருக்கட்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *