சங்கீதம் 34:7 கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.
மூலபதத்தில் இப்படியாக எழுதப்பட்டிருக்கிறது. யாரெல்லாம் மற்றவர்கள் பார்த்து பிரமிப்படையும்படியாக கர்த்தரை உண்மையாக தொழுதுகொண்டு ஆராதனை செய்கிறார்களோ, அவர்களை சூழ பாளயமிறங்கி விடுவிப்பார் என்பதாக.
இராணுவத்தில் யாராவது அகப்பட்டுக்கொண்டால், அவர்களை விடுதலையாக்க எதிர் இராணுவம் அவர்கள் இருக்கும் இடத்தை சுற்றிலும் பாளையம் இறங்கி அகப்பட்ட நபரை விடுதலையாக்கும். அப்படியாக முழு உலகமும் ஸ்தம்பித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், உங்களை சுற்றிலும் தீங்குகள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரங்களில், கர்த்தர் உங்களை சுற்றிலும் பாளையம் இறங்கும்படியாக தூதர்களுக்கு கட்டளையிடுவார். அது திரளான சேனை. அந்த சேனை உங்களை சுற்றிலும் இருந்து விடுதலையாக்கும். ஆகையால் தான் சங்கீதக்காரன் தைரியமாக சொல்லுகிறான் எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன் ( சங் 27:3) என்பதாக.
உலகத்தில் இருப்பவர்களை பார்க்கிலும் உங்களோடு இருப்பவர்கள் அநேகம். சீரிய தேசத்து இராஜா எலிசாவை பிடிக்கும்படியாக குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். அதிகாலையில் எலிசாவின் வேலைக்காரன் வந்து இந்த சேனைகள் சுற்றிலும் பாளயமிறங்கியிருப்பதை பார்த்து பயந்தான். அப்பொழுது எலிசா பயப்படாதே அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். பின்பு எலிசா தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி அவனுடைய கண்களை திறந்தருளும் என்று வேண்டிக்கொண்டான். அவன் கண்கள் திறந்து பார்த்தபோது எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
இப்படித்தான் உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் அநேகம். ஆபத்தை பார்த்து பயப்படாமல் இருங்கள். சூழ்நிலைகளை பார்த்து கலங்காமல், திகிலடையாமல் இருங்கள். உங்களை சுற்றிலும் தேவ தூதர்கள் பாளயமிறங்கியிருக்கிறார்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org