சாட்சி விளங்கும்படி செய்யும்:-

சங் 80:19. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

ஆசாப் என்னும் சங்கீதக்காரன் ஏறெடுத்து ஜெபமாய் இந்த இந்த வசனம் காணப்படுகிறது. இந்த சங்கீதத்தின் தலைப்பு சாட்சி விளங்கும்படி ஒப்புவிக்கப்பட்டு பாடின சங்கீதமாய் காணப்படுகிறது. இந்த கொள்ளை நோயின் கால கட்டத்திலும் கூட நம்முடைய ஜெபமும் அநேக ஜனங்களின் வாழ்க்கையில் சாட்சி விளங்கும்படியாக கர்த்தர் செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறவர்களாக காணப்படவேண்டும்.

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும் என்ற வார்த்தையின்படி உலகத்து ஜனங்களை கர்த்தர் திரும்பவும் திருப்பி கொண்டுவரவேண்டும். கொள்ளை நோயின் நிமித்தமாக தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, உறவினர்களை குடும்பத்தினரை இழந்து, வேலைகளை இழந்து தவித்துக்கொண்டிருப்பவர்களை கர்த்தர் தாமே திரும்பவும் கட்ட வேண்டும். உலக பொருளாதாரம் மந்த சூழ்நிலையிலும், வேலை எப்பொழுது வேண்டுமானாலும் போகக்கூடிய சூழ்நிலையிலும் அநேகர் காணப்படுகிறார்கள். இந்திய தேசத்தின் பொருளாதாரம் அகால பாதாளத்திற்குள் சென்றுவிட்டது. அரசியல் தலைவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிற சூழ்நிலை. ஊரடங்கினிமித்தமாக ஒரு புறம் கொள்ளை நோய் குறைக்கப்பட்டு வருகிறது, மறுபக்கம் பசி மற்றும் வறுமையால் தத்தளிப்பவர்கள் ஏராளம். உயிரிழந்தவர்களை பார்க்க கூட செல்லமுடியாத சூழ்நிலை, உயிரிழந்த குடும்பத்திற்கு உதவி செய்யக்கூடாத சூழ்நிலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் தேசமும், தேசத்து ஜனங்களும் காணப்படுகிறார்கள். ஆகையால் தேவ ஜனங்கள் இரட்டுடுத்தி, தாழ்த்தி, உபவாசமிருந்து, கற்பவேதனையோடு சேனைகளின் கர்த்தரை நோக்கி பார்த்து எல்லாவற்றையும் திருப்பி கொண்டு வாரும் என்று ஜெபிக்கிறவர்களாக நாம் காணப்படவேண்டும்.

மாத்திரமல்ல உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும் என்று ஜெபிக்கிறவர்களாகவும் காணப்படவேண்டும். உலகமே இருள் சூழ்ந்த நிலை, இருளின் ஆதிக்கம் அதிகமாகவும், நூதனமாகவும் செயல்படுவதை நாம் கண்ணார பார்க்கமுடிகிறது. இந்த இருளின் கட்டுகள் நீங்க வேண்டுமென்றால் நீதியின் சூரியனாகிய இயேசு அவருடைய முகத்தை நம்மேல், உலகத்து ஜனங்கள் மேல் பிரகாசிக்க செய்தால் மாத்திரமே ஒரு விடுதலையை நாம் காண முடியும். ஆகையால் வைராக்கியத்தோடு கூட எல்லா ஜனங்கள் மீதும், பார பட்சம் இல்லாமல், அழிந்து போகிற ஆத்துமாக்கள் மீது கர்த்தர் அவருடைய முகத்தை பிரகாசிக்க வெய்யவேண்டுமாய் தேவ பிள்ளைகள் ஜெபிக்கவேண்டும்.

அப்படி அவர் முகத்தை பிரகாசித்தால் மாத்திரமே இரட்சிப்பு கடந்து வரும், நோயின் தாக்கம் குறைக்கப்படும். பெரிய பெரிய மருத்துவர்களால், பெரிய பெரிய மருத்துவமனைகளால் பரவி வரும் கொள்ளை நோய்க்கு இன்னும் தீர்வு காணமுடியவில்லை. அநேக உயிர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எவ்வளவு பணமும் கொடுத்து சிகிச்சை பெற அநேக தலைவர்களும், மக்களும் தயாராக தான் காணப்படுகிறார்கள். ஆனால் அந்த பணத்தால், பதவியால், தலைவர்களின் பரிந்துரையால் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு இயேசு ஜனங்களின் மீது அவருடைய முகத்தின் பிரகாசத்தை வீசச்செய்து இரட்சிக்கவேண்டும். அவரே நல்ல சகாயர். அவரே இந்த கொள்ளைநோய்க்கு தீர்வு. ஆகையால் கருத்தோடு சாட்சி விளங்கும்படி ஒவ்வொரு நாளும் ஜெபிக்க தேவ பிள்ளைகள் தவறிவிட வேண்டாம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *