எபி 3:13. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
ஒரு ஆவிக்குரிய மனுஷன் 24 மணி நேரத்தில் பின்வாங்கி போக முடியும் என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் தான் நாம் ஒவ்வொருவரும் நாள்தோறும் நம்முடைய சகோதர சகோதிரிகளுக்கு புதுச்சொல்ல வேண்டும். சபையிலிருக்கும் ஒவ்வொருவரும் சரீரத்தின் அவயவங்கள். வலதுகைக்கு ஏதாவது ஆகிவிட்டால் இடது கை உதவிசெய்யும். ஒரு கால் வலித்தால், மறு கால் உதவி செய்யும். ஒரு கண் பாதிக்கப்பட்டால் மறு கண் பார்வையை கொடுக்கும். ஒரு பக்கத்திலிருக்கும் பற்கள் போய்விட்டால் மறு பக்கத்திலிருக்கும் பற்கள் உதவும். அதுபோல தான் மற்றவர்கள் வழுவிப்போகும்போது அவர்களை நாம் தூக்கி நிறுத்துகிறவர்களாக புத்தி சொல்ல வேண்டும்.
காயீன் சொன்னான் நான் என் சகோதரனுக்கு காவலாளியோ என்று. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சகோதர சகோதிரிகளுக்கு காவலாளிகள். சபையில் ஒருவர் தடுமாறுகிறார் என்றால் அவரை தூக்கி விடுங்கள். ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். யாருமே உங்களுக்கு புத்திசொல்ல இல்லையென்றால், வேதாகமத்தை அதிகமாக தியானியுங்கள். வேதாகமத்தை படிக்கும்போது பவுல் உங்களுக்கு புத்திசொல்லுவர். பேதுரு புத்தி சொல்லுவார். யாக்கோபு யோவான் போன்றோர்கள் புத்தி சொல்லுவார்கள். இன்னும் அநேக பரிசுத்தவான்கள் எல்லாவற்றிக்கும் மேலாக பரிசுத்த ஆவியானவர் புத்திசொல்லுவர். இவர்களெல்லாம் கொடுக்கும் ஆலோசனையால் நீங்கள் ஸ்திரப்படுவீர்கள்.
சபையில் யாரையும் இடித்து தள்ளுகிறவர்களாக அல்லாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லங்கள். ஒருவர் பலவீனமாய் இருந்தால், அந்த பலவீனத்தைக்குறித்து கேலி செய்யாதிருங்கள். மாறாக புத்தி சொல்லுங்கள். பாவம் கொடிய விஷமுள்ளது. சகோதர சகோதிரிகள் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு புத்தி சொல்லுங்கள். பாவத்திலிருந்து விடுபட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களை தள்ளிவிடாமல், அலட்சியப்படுத்தாமல் அவர்களுக்கு புத்திசொல்லுங்கள். இந்த கடைசி காலத்தில் சத்துரு ஒருவரையும் வஞ்சித்துவிடாதபடிக்கு எல்லாரையும் நேசித்து, சகோதரத்துவம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்படியாக ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org