எழுப்புதலுக்கு விசுவாச செவிகள் வேண்டும்:-

1 இரா 18:41. பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.

எலியா ஊழியம் செய்த நாட்களில் தேசமெங்கும் கேட்ட சத்தம் மூன்றரை வருடமாக மழையில்லை, வயலில் விளைச்சல் ஒன்றும் இல்லை, வீட்டில் அப்பம் இல்லை, ஆறுகளில் குடிக்க தண்ணீர் இல்லை, குதிரை மேய்வதற்கு புல் இல்லை என்று தான் ஜனங்களுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. தேசத்தை ஆளுகிற விக்கிரக ஆராதனைக்காரனாகிய ஆகாபின் செவிகளிலும் இல்லை இல்லை என்ற துர்ச்செய்தியின் சத்தம் தான் கேட்டுக்கொண்டிருந்தது. அரண்மனையில் உள்ளவர்களுக்கும் கூட அப்பமில்லை, தண்ணீரில்லை, குதிரைக்கு புல்லும் இல்லை என்ற சத்தம் தான் கேட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் விசுவாசத்தில் வாழ்கின்ற எலியாவின் செவிகளில் மாத்திரம் பெருமழையின் இரைச்சல் சத்தம் கேட்டது. ஏன் எலியாவிற்கு மாத்திரம் வேறு விதமான சத்தம் கேட்டது. காரணம் அவன் ஆவி வித்தியாசமானது. விசேஷமானது. எழுப்புதலை வாஞ்சிக்கிற நமது காதுகளில் பெருமழையின் இரைச்சல் சத்தம் கேட்கிறதா?

ஏதேன் தோட்டத்தில் மூன்றுவிதமான சத்தங்கள் தொனித்தது. தேவனுடைய சத்தம் இந்த கனியை புசிக்க கூடாதென்று, சாத்தானின் சத்தம் ஏவாளை சாத்தன் ஏவிவிடும்போது, மனிதனின் சத்தம் இந்த ஸ்த்ரீ தான் கனியை புசிக்க சொன்னால் என்று கேட்கப்பட்டது. எழுப்புதலை வாஞ்சிக்கிற நமது காதுகளில் தேவனுடைய சத்தம் மாத்திரம் விழுகிறதாக காணப்பட வேண்டும்.

நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும் (சங் 112:6,7) என்று வசனம் சொல்லுகிறது. இன்று தேசம் முழுவதும் துற்செய்திகளை சத்துரு பலவிதங்களில் பரப்பி கொண்டுவருகிறான். விசுவாசிகளுக்கு இப்படிப்பட்டதான சத்தத்தை கேட்கும்போது ஒரு வகையான சோர்வு ஆக்கிரமித்துவிடுகிறது. கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்படுகிறார்கள், சபைகள் தாக்கப்படுகிறது, தேவையில்லாமல் ஆட்களை ஏவி கிறிஸ்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது, அடிமைத்தனம் மேலோங்குகிறது, இதையெல்லாம் பார்க்கிற விசுவாசிகள் இனிமேல் சபை எழும்புமா, இனிமேல் சபையின் நிலை எப்படி காணப்பட போகிறது, நம்முடைய மற்றும் நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியாக இருக்கப்போகிறது என்ற சத்தம் மாத்திரம் உங்கள் செவிகளில் தொனிக்கிறதா? இல்லை சூழ்நிலை எப்படியாக இருந்தாலும் உங்கள் செவிகளில் பெருமழையின் இரைச்சல் சத்தம் கேட்கிறதா? உங்கள் செவிகளில் எப்பொழுதும் எழுப்புதல் என்ற பெருமழையின் சத்தம் கேட்கப்படட்டும். விசுவாசமுள்ள செவிகளாக மாறட்டும். பூமியின் மேல் அக்கினியை போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி பிடித்து எறியவேண்டும் என்று விருபுகிறேன் என்ற சொன்ன இயேசுவின் வார்த்தை ஒருபோதும் பொய்யாய் போவதில்லை. ஆகையால் உங்கள் செவி எழுப்புதலின் சத்தம், பெருமழையின் சத்தம் மாத்திரம் கேட்கப்பட விசுவாச செவிகளை உடையவைகளாக இருக்கட்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *