கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்:-

எபி 3:1. இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;

காண்கிற அனைத்தும் அவரால் அவருக்கென்றும் உண்டாக்கப்பட்டது என்பதை கவனித்து பாருங்கள். இயேசு தொழுகைக்கு பாத்திரர், அவர் இந்த உலகத்தில் மனிதனாக இருக்கும்போதும் கூட அவரை பணிந்துகொள்ளுவதை, அவரை தொழுது கொள்ளுவதை அவர் ஏற்றுக்கொண்டார் என்பதை கவனித்து பாருங்கள்.

இயேசுவுக்குள்ளாக இருக்கும் தாழ்மையை கவனித்து பாருங்கள். மனிதனுடைய அறிவுக்கெட்டாதவண்ணம் இந்த முழு உலகத்தையும் அவர் படைத்திருக்க, கோடிக்கான விண்மீன்களை அந்தரங்கத்தில் தொங்கவிட்டு, அந்த விண்மீன்களை அடைய பல கோடி ஒளியின் ஆண்டுகள் ஆகும்படியாக செய்து, கண்களுக்கு தெரியாத பல அணுக்களை சிருஷ்டித்து காலங்கள் நிறைவேறின பிறகு நமக்காக அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலான இயேசுவை கவனித்து பாருங்கள்.

இயேசுவுக்குள்ளாக இருக்கும் பரிசுத்தத்தை கவனித்து பாருங்கள். ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்குள் எவ்வளவேனும் பாவமில்லை. ஒருவரும் அவர் மீது குற்றம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆகையால் தான் இயேசு சொன்னார் நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்பதாக. அப்படிப்பட்ட பரிசுத்தமுள்ள இயேசுவை கவனித்து பாருங்கள்.

இயேசுவுக்குள்ளாக இருக்கும் அன்பை கவனித்து பாருங்கள். அவருடைய வாயிலிருந்து கிருபையுள்ள வார்த்தைகள் வந்தது. ஏதோ அன்பாக இருப்பதை போல நடிக்கும் பல ஜனங்களை போல அல்ல, மாறாக அவர் அன்பாகவே இருப்பவர். எதையும் எதிர்பார்க்காமல், தன்னலம் கருதாமல் தன்னையே ஜீவபலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்த அகப்பே என்னும் இயேசுவின் அன்பை கவனித்து பாருங்கள்.

ஆவியானவரால் நிறைந்திருந்த இயேசுவை கவனித்து பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மீது புறாவின் ரூபம்கொண்டு இறங்கினார். இயேசு பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டார். பரிசுத்த ஆவியானவரால் ஊழியம் செய்தார். பரிசுத்த ஆவியானவரை நமக்கும் தருவேன் என்று வாக்களித்த இயேசுவை கவனித்து பாருங்கள்.

முழுவதுமாக தன்னை பிதாவின் சித்தத்தை மாத்திரமே செய்ய அர்ப்பணித்த இயேசுவை கவனித்து பாருங்கள். இயேசு சொன்னார் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்.எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது என்று சொன்ன இயேசுவை கவனித்துப்பாருங்கள்.

கிறிஸ்துவை நாம் ஒவ்வொருநாளும் வேதம் என்னும் கண்ணாடியில் படித்து அறிந்து, இயேசுவை கவனித்து பார்த்து, அவரை போல ஜீவிக்கவேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராயிருக்கிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *