உலக சிநேகம் வெறுப்பை கொண்டுவரும்:-

2 சாமு 13:15. பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

அம்னோன் தாமாரின் மீது மோகங்கொண்டான். அவள் மீது ஏக்கமாயிருந்து வியாதிபட்டான். அவளோடு தகாத உறவு வைத்துக்கொள்ள அம்னோன் தந்திரமாக அவளை வீட்டுக்கு பணியாரம் சமைத்து தரும்படியாக அழைத்து அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். அதன் பிறகு அம்னோன் தாமாரை வெறுத்தான். அவளை நீ போய்விடு என்று சொல்லி விரட்டினான். அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான். அவளை வெளியே தள்ளி கதவை அடைத்தார்கள். அவள் தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையால் சத்தமிட்டு அழுதுகொண்டே போனாள்.

உலக சிநேகம் இப்படித்தான் இருக்கும். இயேசுவின் மூலமாக வராத சிநேகம், வேத வார்த்தைக்கு புறம்பாக வருகிற சிநேகம் எதுவாக இருந்தாலும் அது வெறுப்பை கொண்டுவரும். வாலிப சகோதரர்கள் சகோதரிகளின் மீது வைக்கும் சிநேகம், வாலிப பெண்கள் ஆண்களிடம் வைக்கும் சிநேகம் தற்சமயத்திற்கு நன்றாக இருப்பதை போல, உல்லாசத்தில் இருக்கும் சூழ்நிலையில் இருப்பதை போல இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமான சிநேகமாக இருக்காது. திருமணத்திற்கு முன்பு இருக்கும் காம சிநேகம், திருமணத்திற்கு பிறகு வரும் காம சிநேகம் எல்லாம் வெறுப்பை கொண்டு வந்து, வெளியே தள்ளி, அழுதுகொண்டே போகும் சூழ்நிலைக்கு தள்ளிவிடும். ஆகையால் தேவ பிள்ளைகள் ஒவ்வொருவரும் கர்த்தர் விரும்பும் சிநேகத்திற்குள்ளாக இருக்க வேண்டும்.

யோசேப்பை போல மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடாமல், பாவத்தை விட்டு விலகி ஓட வேண்டும். ஆகையால் தான் யோசேப்பு முழு தேசத்தின் அதிகாரியாக உயர்த்தப்பட்டான். இன்பமான வார்த்தைகளை பேசி, உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களை போல நடிப்பவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சிலர் வந்து நன்றாக சாப்பிட்டு உடம்பை நல்லபடியாக பார்த்துக்கொள் என்று சொன்னாலே அவர்களுடைய வஞ்சகமான அன்பில் விழுந்துவிடுகிறவர்களாக காணப்படுகிறார்கள். வசனம் சொல்லுகிறது உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது (நீதி 7:22-23). ஆகையால் உலக சிநேகத்தின் மீது நாட்டம்கொள்ளாமல், இயேசுவின் அன்பிற்குள்ளாக எப்பொழுதும் காணப்படுங்கள். அந்த அன்பே நிரந்தரமான அன்பு. இயேசுவின் அன்பே மிகவும் பெரியது.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *