ஓசி 10:12. நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு இது தேடுகிற காலம். மௌனமாய் இருக்கிற காலமல்ல. தரிசு நிலங்களை பண்படுத்துகிற காலம். உபவாசத்திலும் ஜெபத்திலும் இருந்து கர்த்தரை ஊக்கமாய் தேடுகிற காலம். கண்விழித்து தேடுகிற காலம். அப்படி தேடுவோமென்றால் கர்த்தர் உங்கள் மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுவார்.
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தேடுகிறவன் கண்டடைகிறான் என்று வசனம் சொல்லுகிறது. நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் தேடினால் அவர் உங்களுக்கு தென்படுவார். இயேசுவை கண்டடையும் வரைக்கும், தேடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு மொழிபெயர்ப்பு சொல்லுகிறது.
சூலமித்தி இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன் (உன் 3:1) என்று சொல்லுகிறாள். கடைசியில் என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன் என்று சொல்லுகிறாள்.
கர்த்தரை கண்டடையும் வரை அவரை தேடுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார் (2 நாளா 15:2) என்று வசனம் சொல்லுகிறது. நாம் கர்த்தரை தேடுகிறோம்; அவரும் நம்மை தேடுகிறார். இழந்து போன ஆத்துமாக்களை தேடியே மனுஷகுமாரன் இவ்வுலகத்திற்கு வந்தார்.
லுக் 15ஆம் அதிகாரத்தில் சில உவமைகளை காணலாம். காணாமல் போன ஒரு ஆட்டை தேடி கண்டுபிடிக்கிற ஒரு மேய்ப்பனின் உவமையை பார்க்கலாம். ஒரு ஆட்டை தேடி கண்டுபிடித்தவுடன் அவனுக்குள்ளாக சந்தோசம் வந்தது. காணாமல் போன வெள்ளி காசை ஒரு ஸ்திரீ தேடினால். அதை தேடி கண்டுபிடித்தவுடன் அவளுக்குள்ளாக ஒரே சந்தோசம். காணாமல் போன கெட்ட குமாரனை தேடி ஆவலோடு காத்திருந்த தகப்பன் மீண்டும் தன் குமரன் திரும்ப வந்தவுடன், அவனுக்குள்ளாக ஒரே சந்தோசம் கடந்து வந்தது. அதுபோல தான் நாம் ஆவலோடு கர்த்தரை தேட வேண்டும்.
நம்மை தேடுகிற கர்த்தரை நாம் தேட வேண்டாமா? உங்களை மீட்டெடுத்து, ஆரங்கள் பூட்டின இயேசுவை தேட வேண்டாமா ? உங்கள் மேல் அன்பு செலுத்தின இயேசுவை தேட வேண்டாமா ? எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. இது கர்த்தரை அதிகமதிகமாக தேடி கண்டுபிடிக்கிற காலமாய் இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

