ஜனங்களை இருதயத்தில் தரித்துக்கொள்ளுங்கள்:-

பிலி 1:7 என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பிய சபைக்கு எழுதும்போது அவனுடைய இருதயத்தில் பிலிப்பிய ஜனங்களை தரித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம். உலகத்தார் தங்களுக்கு பிரியமானவர்களே இருதயத்திலோ, கையிலோ பச்சை குத்தி தங்கள் நேசத்தை வெளிக்காட்டும்படி முயற்சிக்கிறார்கள். கர்த்தர் அப்படியாக பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை; காரணம் அது வேதத்திற்கு புறம்பான காரியம். மாறாக ஒருவருக்காக ஜெபிக்கும்போது அவர்களை நீங்கள் இருதயத்தில் தரித்துக்கொள்ளவேண்டும். பவுல் சிறைச்சாலையிலிருந்து பிலிப்பு சபைக்கு நிருபத்தை எழுதுகிறான். தன்னுடைய சூழ்நிலை சிறைச்சாலையில் கடினமாக இருந்தாலும், தேவ ஜனங்களை இருதயத்தில் தரித்து அவர்களுக்காக விண்ணப்பம் செய்து ஸ்தோத்திரிகிறேன் என்று சொல்லும்போது அவன் எவ்வளவாக ஆத்தும தாகம் உடையவனாய் இருந்திருக்கக்கூடும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

எப்படி ஆரோன் தன்னுடைய மார்ப்பதக்கத்திலே 12 கோத்திரங்களையும் தரித்திருந்தானோ, அப்படியாக பவுலும் தேவ ஜனங்களை இருதயத்தில் தரித்திருந்தான். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன் (யாத் 28:29). அப்படியாக நீங்கள் பிறருக்காக விண்ணப்பம் செய்யும்போது அவர்களை உங்கள் இருதயத்தில் தரித்துக்கொள்ள வேண்டும்.

அது மாத்திரமல்ல உங்கள் இருதயம் முழுவதுமாக தேவ வார்த்தையினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது (சங் 37:31) என்று வசனம் சொல்லுகிறது. ஒருவருக்காக விண்ணப்பம் செய்யும்போதோ இல்லை மற்றவர்களுக்கு ஆலோசனை செல்லும்போதோ இந்த இரண்டு காரியங்களும் உங்களுடைய இருதயத்தில் காணப்பட வேண்டும். ஒன்று தேவனுடைய வார்த்தை; மற்றொன்று தேவ ஜனங்கள். தேவ ஜனங்கள் மாத்திரம் உங்கள் இருதயத்தில் வைத்து, தேவ வார்த்தை உங்கள் இருதயத்தில் இல்லையென்றால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இல்லையென்றால் தேவ வார்த்தை உங்கள் இருதயத்தில் வைத்து, தேவ ஜனங்கள் உங்கள் இருதயத்தில் இல்லையென்றால், அந்த வார்த்தை யாருக்கும் போய் சேருவதில்லை. மாறாக இரண்டும் உங்கள் இருதயத்தில் காணப்படும்போது, நீங்கள் பேசும் வார்த்தை மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாகவும், ஊன்ற கட்ட கூடியதாகவும், தீர்க்கதரிசன வார்த்தையாகவும் இருக்கும். ஆகையால் ஜனங்களையும், தேவ வார்த்தையையும் உங்கள் இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *