பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணம் வரும்(Food came out of the eater)

அப்பொழுது சிம்சோன்,    பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும்,    பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான். (நியாதிபதிகள். 14:14).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/wUbW9FPSCNM

கர்த்தராகிய தேவன்,    உங்களை பட்சித்து அழிக்க நினைப்பவர்களை வைத்தே உங்களுக்கு நன்மையையும்,    மதுரத்தையும் தருவார்.  இஸ்ரவேலர்களுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளைக் கொலை செய்ய வேண்டும் என் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் கட்டளையிட்ட பின்பும்,    அவனுடைய அரண்மனையின் பராமரிப்பிலேயே மோசேயை வளரும்படிக்குச் செய்தவர் நம்முடைய தேவன்.  ய10தாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட நாட்களில் நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,    அதை முற்றிக்கைபோட்டார்கள். அங்கு  காணப்பட்ட  ஜனங்களை  சிறையாக்கி பாபிலோனுக்கு கொண்டு சென்றார்கள். ஆனாலும் எரேமியாவைக் குறித்து,    பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி,    நீ அவனை அழைப்பித்து,    அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல்,    அவனைப் பத்திரமாய்ப் பார்த்து,    அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து என்று கட்டளை கொடுத்தான்,    அப்படியே நேபுசராதான் எரேமியாவுக்கு நன்மையானவற்றைச் செய்தான்.

பிள்ளைகள் இல்லாமலிருந்து மனோவா தம்பதிக்கு,    கர்த்தர்  சிம்சோனை  ஈவாகக் கொடுத்தார்.  அவன் இளைஞனாகக் காணப்பட்ட வேளையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத் துவங்கினார். அவன் பெலிஸ்தியர்களின் கைகளிலிருந்த  இஸ்ரவேலரை  விடுவிக்கிற நியாதிபதியாகக் காணப்பட்டான். ஒரு நாள் அவன் தன் பெற்றோரோடு பெலிஸ்திய தேசத்திற்குச் சென்ற வேளையில் கெர்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிர்ப்பட்டது. அவன் ஆவியானவருடைய பலத்தினால் அதை ஒரு ஆட்டுக் குட்டியைப் போலக் கிழித்துப் போட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே,    நீங்கள் கர்ச்சிக்கிற சிங்கம் போல யாரை விழுங்கலாம் என்று வகை தேடிச் சுற்றித் திரிகிற பொல்லாத சத்துருவின் வல்லமைகளை அழிக்கிற கூட்டம்,    அவனுடைய வாய்களைக் கட்டுகிறக் கூட்டம் என்பதை மறந்து போகாதிருங்கள். உங்களுடைய பலத்தினாலும்,    பராக்கிரமத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை,    ஆனால் ஆவியானவருடைய பலத்தினால் எல்லாம் ஆகும். சிம்சோன்,    சில நாட்களுக்குப் பின்பு அதே வழியில் மீண்டும் கடந்து சென்ற வேளையில்,    தான் கொன்ற அதே சிங்கத்தின் காய்ந்து போன சரீரத்தில் காணப்பட்ட தேன்கூட்டிலிருந்து தேனை எடுத்து தானும் புசித்து,    தன் பெற்றோருக்கும் கொடுத்தான். அவனைப் பட்சிக்குப்படிக்கு வந்த சிங்கமே  அவனுக்குப்  பட்சணத்தையும்,    மதுரத்தையும் கொடுக்கத்தக்க தாய் கர்த்தர் அதை மாற்றிப் போட்டார்.

பிசாசைத் திருடன் என்று வேதம் அழைக்கிறது,    அவன் திருடவும்,    கொல்லவும்,    அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றிற்கும் வரான். அவன் உங்களிடத்திலிருந்து திருடின ஐசுவரியத்தையும்,    ஆரோக்கியத்தையும்,    சமாதானத்தையும் கர்த்தர்  உங்களுக்குத் திரும்பத் தருவார். அவனால் ஏவப்பட்ட ஜனங்கள் நிமித்தம் நீங்கள் இழந்து போன அத்தனை நன்மைகளையும் அவர்களை வைத்தே கர்த்தர் உங்களுக்குத் திரும்ப தரும்படிக்குச் செய்வார். எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாய் காணப்பட்ட வேளையில் எகிப்தியர் அவர்கள் உழைப்பின் பலன்களைப் புசித்தார்கள்,    ஆனால் இஸ்ரவேலர்கள் கானானுக்குத் திரும்பி வந்த வேளையில் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்,    அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்பதியர்கள் கொடுத்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்களை பட்சித்து,    அழிக்க நினைத்தவர்கள் உங்களுக்கு உதவியாக வருவார்கள். உங்கள் ஊழியங்களுக்கு தடையாக எழும்பினவர்களே உங்கள் விசுவாசிகளாய் மாறுவார்கள். உங்களைக் கொள்ளையிட்டவர்களை நீங்கள் கொள்ளையிடுவீர்கள். கர்த்தர் அதை உங்களுக்காகச் செய்வார்,    ஆகையால் மகிழ்ந்து களிகூருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *