இனித் தீங்கைக் காணாதிருப்பாய்:-

செப் 3:15. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

For audio podcast of this Manna Today, please click the link,

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு திருஷ்டாந்தப்படுத்தினதுமல்லாமல், இனி நான் புறஜாதிகளிடம் செல்கிறேன் என்று சொல்லி யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆண்டவர் பவுலுக்கு தரிசனமாகி சொன்னார் நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை (அப் 18:10) என்பதாக. அன்றைக்கு ஆண்டவர் பவுலுக்கு சொன்னது போல இன்று உங்களுக்கு சொல்லுகிறார் உங்களுக்கு தீங்கு செய்யும்படி ஒருவரும் உங்கள்மேல் கைபோடுவதில்லை.

நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார் (2 நாளா 16:22) என்று வசனம் சொல்லுகிறது. அதுபோல நீங்கள் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தால், அவருடைய ஊழியம் சிறியதோ பெரியதோ எதுவாக இருந்தாலும் முழுமனதோடு செய்தால், ஒருவரும் உங்களுக்கு விரோதமாக தீங்கு செய்ய முடியாது. ஒரு ஊழியக்காரரை வீழ்த்தவேண்டும் என்றும், அவருக்கு சாபம் வந்து கை கால்கள் விளங்காமல் போக வேண்டும் என்றும் பல குறிசொல்லுகிற நபர்களை வரவழைத்து யாகங்களை சிலர் செய்தார்கள். இரவும் பகலுமாக அவர்கள் பல பலிகளை செலுத்தி இடைவிடாமல் முயற்சி செய்தார்கள். இருந்தாலும் அந்த ஊழியக்காரருக்கு ஒரு தீங்கும் தீண்டவில்லை. இப்படியிருக்கு தேசத்தில் இன்னும் பலமிக்க யாகம் செய்கிறவர்களை அந்த நபர்கள் வரவழைத்து இரவும் பகலும் சுடுகாட்டிற்கு சென்று, அந்த ஊழியக்காரருக்கு விரோதமாக பல மந்திரங்களை ஓதி, மனித உருவில் இருக்கும் ஓடுகளை அந்த ஊழியக்காரர் என்று எண்ணி, கைகள் கால்களை உடைத்தார்கள். ஆனால் இன்னும் அந்த ஊழியக்காரருக்கு ஒரு தீங்கும் நேரிடவில்லை. இப்படியிருக்க அந்த நபர்கள், தேசத்தின் தலைசிறந்த மந்திரவாதிகளை அதிக பண செலவில் அழைத்துவந்து, ஊழியக்காரருக்கு விரோதமாக மந்திரங்களும், யாகங்களும், செய்தார்கள். முடிவில் அவர்களுடைய முயற்ச்சியும் தோல்வியடைந்தது.

பின்பு அந்த குறிப்பிட்ட நபர்கள் அவர்களுக்குள்ளாகவே சொன்னார்கள், அந்த ஊழியக்காரர் தொழுதுகொள்ளும் தேவன் அவரை காக்கிறார் என்று. அதுபோலத்தான் உங்களுக்கு விரோதமாக யார் என்ன சாபமிட்டாலும் ஒரு தீங்கும் உங்களை அணுகாது. தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார் (சங் 27:5) என்ற வசனத்தின்படி கர்த்தர் தீங்கு நாளில் உங்களை மறைத்துக்கொள்ளுவார். உன்னதமானவரின் மறைவிலிருக்கும் நீங்கள் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவீர்கள். பாழாக்கும் கொள்ளை நோய் உங்களை தொடுவதில்லை. வேடனின் கண்ணி உங்களை ஒன்றும் செய்யாது. உங்கள் பக்கத்தில் ஆயிரம்பேரும், உங்கள் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உங்களை அணுகாது. இனி தீங்கை காணாதிருப்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *