என் காரியத்தை மேற்போட்டுக் கொள்ளும் (Undertake for me).

..கர்த்தாவே,     ஒடுங்கிப்போகிறேன்,  என் காரியத்தை  மேற்போட்டுக் கொள்ளும் என்றேன் (ஏசாயா 38:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9W-gRe-htt0

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு,     தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது,     தான் கடந்துசென்ற கடினமான நாட்களை நினைத்து,      என் காரியத்தை மேற்போட்டுக் கொள்ளும் என்றார்.  நீர் எனக்குத் துணைநின்று,     உத்தரவாதம் கொடுத்து இனி இப்படிப்பட்ட கடினமான பாதையில் என்னை நடத்தாதிரும் என்பது அவனுடைய ஜெபமாகக் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே ஒரு புதிய மாதத்தின் துவக்கத்தில் காணப்படுகிறோம். பலவிதமான கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் இதுவரை கடந்து வந்திருக்கக்  கூடும். இந்த புதிய மாதத்திலாவது ஒரு நன்மை என்வாழ்வில் கிடைக்கட்டும் என்பது உங்கள் வாஞ்சையும்,     ஜெபமாகக் காணப்படலாம். ஒரு புதிய வேலைக்காய்,     குடும்ப வாழ்க்கையின் ஆசீர்வாதத்திற்காய்,     பிள்ளைகளின் படிப்பிற்காய்,     நல்ல திருமண வாழ்க்கைக்காய்,     வியாதிகள் விலகுவதற்காய்,     தேசங்களின் சமாதானத்திற்காய்,     ஊழியத்தின் பாதையில் அடைபட்டுப் போன வாசல்கள் திறப்பதற்காய் என்று பலவிதமான வேண்டுதல்கள் உங்கள் இருதயத்தில் காணப்படக் கூடும். ஒடுக்கப்பட்ட நிலையில் நீங்கள் காணப்படலாம். கர்த்தர் உங்கள் காரியங்களையெல்லாம் மேற்போட்டுக் கொண்டு,     உங்களுக்காக உத்தரவாதம் எடுத்து உங்களுக்குப் பதில் செய்து மகிழப்பண்ணுவார்.

சத்துரு உங்களை ஒடுக்க முயல்வான். எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்கி அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்கு கசப்பாக்கினான். அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும் படிக்கு,     அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தான்,     கொடுமையாய் வேலைவாங்கினான். கர்த்தருடைய ஜனங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதையும்,     சமாதானத்தோடு அமைதலுள்ள ஜீவனம் பண்ணுவதையும்  சத்துரு ஒருநாளும் விரும்புவதில்லை. இஸ்ரவேல் ஜனங்களின்  பெருமூச்சின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். ஆகையால் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் கர்த்தர் அவர்களை பலுகிப் பெருகப்பண்ணினார்,     அத்துடன் ஒடுக்கின பார்வோனின் கரங்களிலிருந்து முழுவதுமான விடுதலையையும் கொடுத்தார். ஆகையால் ஒடுக்குகிறவன் ஒழிந்து போவானே ஒழிய,     உங்களுக்கு ஒரு சேதமும் அணுகுவதில்லை. எப்பக்கத்திலும் நீங்கள் நெருக்கப்பட்டாலும் ஒருநாளும் நீங்கள் ஒடுங்கிப் போவதில்லை. உங்கள் நெருக்கத்தின் நாட்களைக் கூட பெருக்கத்தின் நாட்களாய் மாறும்படிக்குச் செய்வார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர்,     ஆகையால் நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்,     எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும்  அவருக்குத்  தெரியப்படுத்துங்கள். எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுத்த தேவன் உங்களுடைய ஜெபங்களையும் கேட்டு,     உங்கள் காரியங்களில் அவர் உத்தரவாதம் எடுத்து உங்களுக்கு பதில்செய்வார். உங்கள் பிரச்சினைகளை அவர் பிரச்சினையாகக் கருதி,     உங்களுக்கு அற்புதம் செய்வார்,     ஆண்டவரிடமிருந்து ஒரு அற்புதத்தை எதிர்பாருங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *