மத் 22:10 அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/lXWeTIwpeWQ
இயேசு உவமைகளில் பரலோக இராஜ்யத்தை குறித்து பேசிக்கொண்டு வந்த போது பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்று சொன்னார். அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். நம்முடைய ஊர்களில் திருமணத்திற்க்கு அநேகர் வர வேண்டும் என்று சொல்லி தங்கள் உறவினர்கள், நண்பர்கள் அநேகர்களை நேரில் சென்று அழைப்புவிடுவிப்பார்கள். பத்திரிக்கைகளில் பொதுவாக இந்த காரியம் கர்த்தரால் ஆயிற்று என்று சொல்லி திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து அநேகருக்கு அழைப்பிதழ்களை கொடுப்பார்கள். எவ்வளவு கூட்டம் வரும் என்பதை அறிந்து, அதற்கேற்றாற்போல் திருமண மண்டபங்களை பதிவு செய்வார்கள். கடைசியில் அழைக்கப்பட்ட தங்கள் உறவுகள் வேலைநிமித்தமாக, பிள்ளைகளின் படிப்பு நிமித்தமாக அவர்கள் திருமணத்திற்கு வரவில்லையென்றால் அழைத்தவர்களுக்கு மனம் பாதிப்படைந்துவிடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜா அழைக்கப்பட்டவர்கள் அழைப்பிற்கு அப்பாத்திரராய் போனார்கள் அதாவது தகுதி இல்லாமல் (Not Worthy) போனார்கள் என்று சொன்னான். நாமும் ஒரு நாளும் அழைத்த அழைப்பின் தகுதியை இழந்துபோகலாகாது. இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைத்த அழைப்பின் மேன்மையை உணர்ந்தவர்களாக, அழைப்பில் உறுதியாக காணப்பட வேண்டும். இயேசு உங்களுக்கு கொடுத்த சிறியதோ பெரியதோ எந்த வேலையாக இருந்தாலும் முழுமனதோடு செய்ய வேண்டும். இப்படியிருக்க வழிச்சந்திகளில் இருந்த அநேகரை கலியாண வீட்டிற்கு ராஜா அழைத்துக்கொண்டு வந்தான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்று இயேசு சொன்னார்.
மற்றவர்களுடைய காரியம் என்ன, மற்றவர்கள் தேறுவார்களா தேறமாட்டார்களா என்று அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்து அநேகர் கலியாண வீட்டிற்குள் கடந்து செல்லும் பாக்கியத்தை இந்நாட்களில் விட்டுவிடுகிறார்கள். மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் கலியாண நாள் நெருங்குகிறது. மணவாளன் என்பவர் நம் இயேசுகிறிஸ்து, மணவாட்டி என்பவள் சபையாகிய நீங்களும் நானும். கலியாணத்திற்கு மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள தீவிரம் காட்ட வேண்டும். மணவாளியே வா என்று இயேசு உங்கள் ஒவ்வொருவரையும் கூப்பிடும் நாள் மிக சமீபம். சூலமித்தியிடம் நேசர் சொன்னார் என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது (உண் 5:2) என்பதாக. அவளோ கதவை திறக்க தாமதப்படுத்தினாள். கடைசியில் நேசர் அவளை விட்டு கடந்து சென்று விட்டார். கர்த்தருடைய பிள்ளைகள் அவருடைய அழைப்பிதழை ஏற்று கலியாணத்திற்குள் பிரவேசிக்க ஒருநாளும் தாமதமாக கூடாது.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org