வார்த்தை மாம்சமானது (The Word became Flesh).

அந்த வார்த்தை மாம்சமாகி,     கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,     நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது (யோவான் 1:14). 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LVwme0L03A4

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு என்று, மத்தேயு இயேசுவின் பிறப்பைப் பற்றி எழுதினார். பழைய ஏற்பாட்டில் வாக்குப்பண்ணின மேசியா இயேசு என்பதை வெளிப்படுத்தினார்.   லூக்கா,     இயேசு ஆதாமிலிருந்து வந்தவர் என்ற வம்ச வரலாற்றை எழுதி,     அவருடைய மனுஷத்துவத்தைக் குறித்து வெளிப்படுத்தினார். யோவான்,     ஆதியிலே வார்த்தை இருந்தது,     அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,     அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி,     கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,     நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்று இயேசுவே தேவன் என்பதை வெளிப்படுத்தினார். இயேசு ஆதியிலே இருந்தவர். சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக  நம்மைப்  பாவத்திலிருந்து இரட்சிப்பதற்காக,     ஸ்திரீயின் வித்தாக,     கன்னிகையின் மைந்தனாக அவதரித்தார். ஆனால் ஒருபோதும் அவர் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக தோன்றினவர் மட்டும்தான் என்பதாகக் கருதிவிடாதிருங்கள். நீங்கள் ஆதி என்று எதைக் கருதுகிறீர்களோ, அதற்கு முன்பாகவே இருந்தவர் இயேசு. அவர் ஆதியும் அந்தமுமில்லாதவர்,     துவக்கமும் முடிவும் இல்லாதவர். சாத்தான்,     இயேசு ஆண்டவர் என்பதை அறிந்திருந்தும்,     அதை அங்கீகரிக்கப் பயப்படுகிறான். அதற்குக் காரணம்,     அவனுடைய இருளின் ராஜ்யத்திற்கு முடிவுகட்டப் போகிறவர் இயேசு,     ஆகையால் அவன் பலரைத் தூண்டிவிட்டு,     இயேசு ஒரு தீர்க்கதரிசி,     மகான்,     சாதாரண ரபீ என்று கூறும்படிக்குச் செய்கிறான். கிறிஸ்தவர்களைக் கூட குடிலைக் கட்டி அதில் ஒரு முன்னணையை வைத்து,     இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக தோன்றின பாலகனாக  காட்டும்படிக்கு  தூண்டிவிடுகிறான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     இயேசு ஆதியில்  வார்த்தையாயிருந்த  தேவன். இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்,     அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே என்று வெளி. 19:13 கூறுகிறது. அவர் மனிதனாகி, மாம்சத்தில் நமக்காக வெளிப்பட்டார். பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஆசரிப்புக் கூடாரத்தில்  இஸ்ரவேல்  ஜனங்கள் நடுவில் வாசம்பண்ணின தேவன்,     இன்று நமக்குள்ளாக  வாசம்பண்ணுகிறார். நம்முடைய சரீரம் பூமிக்குரிய கூடாரமாகிய கர்த்தருடைய வீடாய் காணப்படுகிறது (2 கொரி. 5:1). நீங்களும் நானும் கர்த்தர் வாசம் பண்ணுகிற அவருடைய ஆலயமாகக் காணப்படுகிறோம். ஆலயமாகிய சரீரத்தை,     தேவன் வாசம் பண்ணுவதற்கு ஏற்றதாக,     பரிசுத்தத்தோடு காத்துக் கொள்ளுங்கள். இயேசுவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறார் என்ற உணர்வோடு காணப்படுங்கள். ஒருநாளும் கர்த்தருடைய மகிமையை இழந்து விடாதிருங்கள். அப்போது ஆண்டவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் உங்களுக்குள்ளே வாசம் பண்ணி,  உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *