பொய்வழியும், மெய்வழியும் (Way of Lying & Way of Truth).

சங் 119:29, 30. பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/TeRucnm8Zfg

பொய்வழி என்பது வாழ்க்கையில் பொய் பேசாமல் இருப்பது மாத்திரமல்ல, ஆண்டவருக்கு பிரியமில்லாத எந்த வழியும் அது பொய்வழி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சிம்சோன் பயணித்த பாதையில் அவன் வாயினால் பொய் சொல்லவில்லை, ஆனால் ஆண்டவருக்கு பிரியமில்லாத வழியில், தன் மனம் போன போக்கில் போனான். இளைய குமாரனும் தன் தகப்பனுக்கு பிரயமில்லாத வழியில் தன் மனம் போன வழியில் கடந்து சென்றான். இப்படிப்பட்ட தாறுமாறான வழிதான், பொய்வழி என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாம் போகிற வழியில் பள்ளங்களும், மேடுகளும் வரக்கூடும். நாம் போகிற வழி பள்ளத்தாக்கை போலவும் காணப்படலாம், பசுமையான புல்வெளியை போலவும் காணப்படலாம். நாம் எந்த வழியில் கடந்து சென்றாலும் தேவனுக்கு பிரியமில்லாத வழியில் கடந்து செல்லக்கூடாது. நம்முடைய வாழ்க்கை என்னும் பிரயாணத்தில் கர்த்தருக்கு பிரியமில்லாத இடத்தில் நடவாமலும், நில்லாமலும், உட்காராமலும் காணப்பட வேண்டும். உலகம் காட்டுகிற பாதையிலும், மாம்சீக இச்சைகளை உண்டு பண்ணும் பாவ பாதையில் நாம் நடந்தால், பின்பு அங்கே இருந்து அந்த பாவத்தில் நிற்கும்படி செய்யும், அங்கே நிற்கிற நாம், அதன் பின்பு அங்கேயே அந்த பாவத்திலியே உட்காரும்படி அந்த பாவம் செய்துவிடும். கடைசியில் முடிவு பரிதாபமாய் போய்விடும். ஆகையால் சங்கீதக்காரனை போல பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும் என்று ஜெபிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். ஆகையால் பொய்வழியை விட்டு விலகி, வேதத்தை அதிகமாய் தியானியுங்கள்.

அதுபோல, மெய்வழியை நாம் நாடுகிறவர்களாய் காணப்பட வேண்டும். பிசாசு பொய்யின் அதிபதி. இந்த உலகம் பொய்யின் அதிபதியாகிய பிசாசின் கரங்களில் இருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பாபிலோனில் வாழ்ந்தாலும், நேர்வழியாய் நடத்துகிறவர், மெய்யான வழியில் உங்கள் ஒவ்வொருவரையும் நடத்தும்படி ஜெபிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். தாவீது சொல்லுகிறார், அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல், அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன் (2 சாமு 22:23,24) என்பதாக. நாம் கர்த்தருக்காக செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் உண்மை தன்மை காணப்பட வேண்டும். கர்த்தருடைய வேதத்தை நேசித்து, அதின்படி நடக்கிறவர்களாவும் காணப்படுவோம். அதுவே நாம் பொய்வழிக்கு தப்பி மெய்வழியில் நடப்பது என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *