தற்காலிக துக்கம் (Painful for the moment).

எபி 12:11. எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/P-_zU0Cm_9A

சிட்சை என்பது ஆண்டவர் கொடுக்கும் தண்டனை என்று கர்த்தருடைய பிள்ளைகள் நினைத்துவிட கூடாது. நோவாவின் காலத்து ஜலப்பிரளயம், சோதோம் கொமோராவின் அழிவு, செங்கடலில் எகிப்திய ராணுவம் பூண்டோடு அழிக்கப்பட்டது இவையெல்லாம் கர்த்தர் கொடுத்த தண்டனை. சிட்சை என்பது கர்த்தர் தாம் நேசிப்பவர்களை திருத்துவது, நேர்வழியாய் நடத்துவது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன் மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் (நீதி 13:24). பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை சிட்சிக்க வேண்டும்? வேதம் கூறுகிறது, பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக என்பதாக(எபே 6:4).

பள்ளிக்கூடத்தில் படிக்கிற பிள்ளைகளை ஆசிரியர்கள் சிட்சித்து நடத்துவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற வேண்டும், எல்லாரும் பரீட்சியில் தேர்ச்சியடைய வேண்டும் என்று சிட்சிப்பார்கள். அவர்களுடைய சிட்சை தற்காலிகமானது. மாணவர்கள் தேர்ச்சியடைந்தபிறகு, ஆசிரியர்களின் சிட்சைக்கேற்ற பலனை அனுபவிப்பார்கள். அதுபோல தான், உலகத்தின் தகப்பன்மார்கள், தன் பிள்ளை நல்லொழுக்கத்துடன் வளர வேண்டும் என்று சிட்சித்து நடத்துவார்கள்.

எபி 12:4-11 வரையுள்ள வசனங்களை வாசிக்கும்போது நம் ஆண்டவர் சிட்சித்து நடத்துகிறவர் என்பதை அறிந்துகொள்ளலாம். கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை சிட்சித்து நடத்துகிறார். நீதி 3:11,12ல் ஞானி சொல்லுகிறான், என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார் என்பதாக. யோபுவை கர்த்தர் சிட்சித்தபிறகு, அவன் சுத்த பொன்னாக மாறினான். யோசேப்பை சிட்சித்தபிறகு, அவன் எகிப்து தேசத்திற்கே அதிகாரியாக மாறினான். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள், கடந்து செல்லுகிற துக்கமான பாதைகள் தற்காலிகமானது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டவர் உங்களை அதிகமாக நேசிக்கிறதால் தான், அவர் உங்களை சிட்சித்து நடத்துகிறார்.

அவருடைய சிட்சைக்கு பிறகு கர்த்தர் நீதியாகிய சமாதான பலனைத் தருகிறார். இக்காலத்து பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பனதல்ல. பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்ற வார்த்தையின்படி, சிட்சைக்கு பிறகு புதிய காரியங்களை கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்வார். கர்த்தருடைய சிட்சையினால் வருகிற துக்கம் தற்காலிகமானது. அதில் பழகினவர்களுக்கு, பிற்காலத்தில் சமாதானமாய் இருக்கும். தற்காலிக துக்கத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் சில நாட்கள், சில மாதங்கள் கழித்து, என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (சங் 144:1) என்று சொல்லும் நாட்களை நீங்கள் காண்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *