மூன்று பராக்கிரமசாலிகள் (Three mighty men).

முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்றுபேரும் அறுப்புநாளிலே  அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்..(2 சாமு. 23:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/iky9t9r4GLA

தாவீது சவுலுக்குப் பயந்து அதுல்லாம் கெபியிலே ஒளித்துக் கொண்டிருந்த வேளையில் அவனோடு அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் அங்கே அவனிடத்திற்கு வந்தார்கள். அப்போது ஒடுக்கப்பட்டவர்கள்,     கடன்பட்டவர்கள்,     முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்,     அவன் அவர்களுக்குத் தலைவனானான்,     இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள். ஆனால் பின்னாட்களில் இவர்கள் பராக்கிரமசாலிகளாய் மாறினார்கள். அவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,     நம்முடைய பலவீனத்தில்,     பேதைமையில்,      தாழ்வில்,     ஒன்றுமில்லா மையில் பரலோக தாவீதாகிய இயேசுவினிடத்தில் வந்திருப்போம்,     ஆனால் நாம் அப்படிப்பட்டவர்களாகவே எந்நாளும் காணப்படக் கூடாது. கர்த்தருடைய சத்துவத்திலும் வல்லமையிலும் பலப்பட்டு,     கர்த்தருக்காக எழும்புகிற பராக்கிரமசாலிகளாய் மாறவேண்டும். இந்த பராக்கிரமசாலிகள் இல்லாமல் தாவீது இல்லை,     தாவீது இல்லாமல் பராக்கிரமசாலிகள் இல்லை.  பயந்து காணப்பட்ட கிதியோனைக்  கர்த்தருடைய கண்கள் பராக்கிரமசாலியாய் கண்டதைப் போல் உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் பராக்கிரமசாலியாய் பார்க்கிறார். கர்த்தருக்காய் எழும்பி பெரிய காரியங்களைச் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள்.

மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன் யோசேப்பாசெபெத் என்பவன்,     அவன் எண்ணூறு பேர்களின்மேல் விழுந்து,     அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்டான் என்று வேதம் கூறுகிறது. அசுத்த ஆவிகளின் சேனைகள் தேசங்களையும் ஜனங்களையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. சாத்தான் அசுத்த ஆவிகளின் மூலம் தன்னுடைய சிங்காசனத்தை ஸ்தாபிக்க முயற்ச்சிக்கிறான்.  கர்த்தருடைய பிள்ளைகள் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை எடுத்தவர்களாய் தரித்தவர்களாய் எழும்பி அவனுடைய இருளின் ராஜ்யத்தை அழிக்க யுத்த வீரர்களாய் எழும்ப வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஒருவன் ஆயிரம் பேரையும் இரண்டு பேர் பதினாயிரம் பேரையும் துரத்துவீர்கள் என்பது கர்த்தர் உங்களுக்குக் கொடுத்து வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. இரண்டாவது நபர் எலெயாசார் என்பவன்,     இவன் பெலிஸ்தர்  யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல்  மனுஷர் போகையில்,     தாவீதோடு இருந்து,     பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான். இவன் எழும்பித் தன் கைசலித்து,     தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்,     அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.  எலெயாசார்  வெற்றியைப் பெறும் மட்டும் எதிரிகளை வெட்டினான். இந்நாட்களில் காணப்படுகிற விசுவாசிகளில் பலர்,     நன்கு துவங்குவார்கள்,     சிலகாலம் தங்களுக்கு நியமித்த விசுவாச ஓட்டத்தில் நன்கு   ஓடுவார்கள்,     ஆனால் கடைசி வெற்றி பெறும்மட்டும்  இயேசுவோடு காணப்படுவதில்லை. 
இப்படிப்பட்டவர்களை  வைத்து  கர்த்தரால் ஒன்றும் செய்யமுடியாது. கலப்பையின் மேல் கைவைத்த பின்பு பின்னிட்டுப் பார்க்கிறவன் பரலோக ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் அல்ல. சபைகளில் கூட நன்கு பிரகாசிக்கிற பாத்திரங்கள் நாட்கள் போகப் போகப் பிசாசுக்கு  இடங்கொடுத்துப் பின்னிட்டுப் பார்த்துப் பிரிந்து போகிறவர்களாய் காணப்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்களாய் நீங்கள் காணப்படாதிருங்கள். மூன்றாவது நபர் சம்மா என்பவன். இவன் ஒரு ஆச்சரியமான நபர். சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே  பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி யுத்தத்திற்கு வந்த வேளையில்,     இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு பயந்து ஓடினபோது இவன் ஒருவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி,     பெலிஸ்தரை மடங்கடித்துப் போட்டான்,     அதனால் கர்த்தர் பெரிய வெற்றியைக் கட்டளையிட்டார். விளைச்சலை பெலிஸ்தியர்  கொள்ளையடிக்காமல் அந்த நிலத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பது தாவீது அவனுக்குக் கொடுத்த கட்டளை. அவனுடன் காணப்பட்ட அத்தனை பேரும் ஓடிப்போன பின்பும் தனி ஒருமனிதனாய் நின்று அதை நிறைவேற்றுகிறவனாய் காணப்பட்டான். நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து,     அவருடைய சரீரமாகிய சபையில் நிறைவேற்ற ஒரு சிறு ஊழியத்தைப்  பெற்றிருக்கலாம். அனேகர் தங்கள் பொறுப்புகளிலிருந்து பின்வாங்கும் இந்த நாட்களில்,     நீங்கள் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றத் துணிந்து நில்லுங்கள். உங்கள் மூலம் பெரிய வெற்றியை அனேகருக்குக் கர்த்தர் கட்டளையிடப் போகிறார் என்பதை மறந்து விடாதிருங்கள். 

ஒருநாள் தாவீது பெலிஸ்தியரோடு யுத்தத்தில் காணப்பட்ட வேளையில்,     தான் சிறுவயதில் பருகின,     பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். உடனே இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்து போய்,     பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு,     தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள். தங்கள் உயிரைத் தியாகமாய் வைத்து,     தாவீதின் விருப்பத்தை நிறைவேற்ற,     எதிரியின் பாளையத்திற்குள்ளாய் புகுந்து சென்றார்கள்.  இயேசுவுக்காகத் தியாகமாய் நிற்கிற இப்படிப்பட்ட பராக்கிரமசாலிகளைக் கர்த்தருடைய கண்கள் தேடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய சித்தத்தை நிறைவேற்ற என் பட்சத்தில் காணப்படுகிறவன் யார் என்று கர்த்தர் வினவுகிறவராய் காணப்படுகிறார். நீங்கள் அவர்களில் ஒருவனாய் காணப்படுங்கள். இப்படிப்பட்ட பராக்கிரமசாலிகளை கொண்டிருக்கிற சபைகளும் ஊழியங்களும் வளரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *