எப்பொழுதும் வெற்றி (Always Victory).

2 கொரி 2:14. கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CTTKuEHUce4

கடந்த நாட்களில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, உலகக்கோப்பையை வென்றது. இதுபோல பிரேசில் அணி, கால்பந்து போட்டியில் உலகக்கோப்பையை வென்றது. ஆனால் இந்த அணிகள் தான் எப்பொழுதும் வெற்றிபெறுமா என்று கேட்டால், அதற்கான பதில் இல்லை என்பதே. ஆனால் விசுவாசிகளாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் எப்பொழுதும் வெற்றிபெற முடியும். எப்பொழுதும் வெற்றிபெற முடியாது என்று சொல்லுபவர்கள், இன்னும் வேத வசனத்தை விசுவாசிக்கவில்லை; அல்லது இது கடினமானது என்று நினைப்பது தான். ஆண்டவர் நம்மால் செய்யமுடியாத ஒன்றையும் வேதாகமத்தில் எழுதிவைக்கவில்லை. எப்பொழுதும் என்ற வார்த்தைக்கு பதிலாக எப்பொழுதாவது என்றோ, அவ்வப்போது என்றோ, எழுதப்படவில்லை. மாறாக, எப்பொழுதும் என்ற வார்த்தையை ஆண்டவர் சொல்லியிருப்பதால், நாம் எப்பொழுதும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும். எப்பொழுதும் என்றால் அதற்கான அர்த்தம், 99% அல்ல 100% வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும் என்பதாய் காணப்படுகிறது.

எப்படி நான் எப்பொழுதும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும் என்ற கேள்வியை ஒருவேளை நீங்கள் கேக்கலாம். அதற்கான பதில் மேற்குறிப்பிட்ட வசனத்தின் முதல் வார்த்தையிலேயே இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் நாம் இருக்கும்போது எப்பொழுதும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். பாவத்தை மேற்கொள்ள முடியும். சாத்தானின் சதி திட்டங்களை நிர்மூலமாக்க முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளும் அவர் உங்களுக்குள்ளும் நிலைத்திருக்கும்போது அதாவது எப்பொழுதும் அவருக்குள் நாம் இருக்கும்போது வெற்றி நமக்கே உரியது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஏதேனும் காரியத்தில் நான் தோற்றுப்போகிறேன் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தோற்றுப்போக முடியாது; உங்களை அழைத்தவர் நீங்கள் எல்லா காரியங்களிலும் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே. ஆகையால் கிறிஸ்துவுக்குள், அவருடைய வார்த்தைக்குள் ஆழமாக வேரூன்றுங்கள்.

அதுமாத்திரமல்ல, நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்போது அவரை அறிகிற அறிவின் வாசனையை நாம் எல்லா இடங்களிலும் வீசச்செய்ய வேண்டும். இன்று அநேக ஊழியக்காரர்கள் விழுந்துபோவதன் காரணம் கிறிஸ்துவின் வாசனையை வீசச்செய்வதற்கு பதிலாக, அவர்களுடைய நான் என்னும் வாசனையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சிப்பதே ஆகும். ஆகையால் நாம் எதை செய்தாலும் கிறிஸ்து இயேசு மூலமாக தேவனை மகிமைப்படுத்தவும், அவருடைய வாசனையை வீசவும் செய்ய கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருப்பீர்களென்றால், எப்பொழுதும் உங்களுக்கு வெற்றி என்பது உறுதி.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *