இன்னும் தருவார் (Yet More).

இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி,     அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்(ஆதி. 30:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/R16WX0jruWs

யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்கு பயந்து பதான்அராமிலிருக்கி தன் தாய் மாமனாகிய லாபானிடத்தில் போய் சேர்ந்தான். அவனுக்கு இரண்டு குமாரத்திகள்,     மூத்தவள் பெயர் லேயாள்,     இளையவள் பெயர் ராகேல். மூத்தவள் கூச்சப் பார்வையுடையவளாய் காணப்பட்டாள்,     இளையவள் ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.  யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்று கூறி லாபானுடைய ஆடுகளை மேய்த்தான்.  யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய்,     இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக  ஊழியஞ்செய்து,     ஒருபெண்ணுக்காக ஆடு மேய்த்தான் என்று ஒசியா 12:12ல் யாக்கோபைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்நாட்களிலும் கண்களுக்குப் பிரியமானவர்களுக்காக அடிமைப்பட்டு காணப்படுகிற திரளான வாலிப ஆண்களும் பெண்களு உண்டு. எதிர்காலத்தைக் குறித்த கவலையில்லாதவர்களளாய் சத்துருவால் சிந்தையில் சிறைப்பட்டுக் காணப்படுகிறார்கள். யாக்கோபின் திருமண நாள் வந்த வேளையில் ராகேலுக்கு பதிலாக லேயாளை,     லாபான் திருமணம் செய்து வைத்து யாக்கோபை ஏமாற்றினான். இருப்பினும் ராகேலின் மேல் கொண்ட நேசத்தின் நிமித்தம் அவளுக்காக மீண்டும் ஏழு வருடங்கள் ஆடு மேய்த்து,     யாக்கோபு அவளையும் திருமணம் செய்து கொண்டான். லேயாள்  அற்பமாக்கக் கருதப்பட்டதினால் அவளுக்கு அனேக கர்ப்பத்தின் கனிகளைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்தார்,     ராகேலுக்கு பிள்ளைகள் இல்லாமலிருந்தது. 

பதினான்கு வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின்பு கர்த்தர் ராகேலை   நினைத்தருளினார்,     அவளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக்   கொடுத்தார். அவள்,     தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,     இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி,     அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். யோசேப்பு என்ற பெயரின் அர்த்தம் கர்த்தர் இன்னும் தருவார் என்பதாய் காணப்படுகிறது. ராகேல் விரும்பினபடி கர்த்தர் அவளுக்கு இன்னும் ஒரு குமாரனைக் கொடுத்தார். ஆனால்  பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று,     அது அவளுடைய மரணத்திற்கே துவான வேதனையாய் காணப்பட்டது.   மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது,     அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்,     என் துக்கத்தின் மகன் என்பது அதின் அர்த்தம்,     ஆனால் அவன் தகப்பனாகிய யாக்கோபு அவனுக்கு என் வலக்கரத்தின் மகன் என்ற அர்த்தம் கொள்ளும் பென்யமீன் என்று பேரிட்டான். இன்னும் வேண்டும் என்ற ராகேலின் வாஞ்சையானது அவளுக்கு ஆசீர்வாதமாக அமையவில்லை. 

கர்த்தருடைய பிள்ளைகளே,     ஐசுவரியமும்,     செல்வமும்,     ஆசீர்வாதங்களும் இன்னும் வேண்டும் என்று அதற்காகவே பிரயாசப்படுகிறவர்களாய்  காணப்படுகிறீர்களா? சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும்,     கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம் என்று நீதி.15:16ல் எழுதப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் இன்னும் வேண்டும் என்று இச்சித்துப் பெறுகிற செல்வங்களும் நன்மைகளும் முடிவில் ஆசீர்வாதமாய் காணப்படுவதில்லை. அவைகள் அனேகரை ஆண்டவரை விட்டுப் பிரித்துவிடுகிறது. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.  உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை,     இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.  உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.  ஐசுவரிய வான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும்,     மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்,      பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது,     சிலர் அதை இச்சித்து,     விசுவாசத்தைவிட்டு வழுவி,     அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.  நீயோ,     தேவனுடைய மனுஷனே,     இவைகளை விட்டோடி,     நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு என்று வேதம் எச்சரிக்கிறது. ஆகையால் இருக்கிறவைகளில் திருப்தியோடும்,     மனரம்மியத்தோடும்,     நன்றியோடும் வாழ பழகிக் கொள்ளுங்கள். அதுவே ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதின் இரகசியமாய் காணப்படுகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *