உத்தம மார்க்கம் (Undefiled way).

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம  மார்க்கத்தார்  பாக்கியவான்கள்(சங். 119:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/alpygiCrpQE

கிறிஸ்தவ மார்க்கத்திற்கு இன்னொரு பெயர் உத்தம மார்க்கம் என்பதாகும். கிறிஸ்து இயேசுவின் பாதச்சுவடுகளை பின்பற்றுகிற   மார்க்கமாய் காணப்படுவதினால் அது உத்தமமானது.    அதை நமக்காய் வைத்துச் சென்ற இயேசு உத்தமர்,    மாசில்லாதவர். என் புறாவோ,    என் உத்தமியோ ஒருத்தியே,    என்று கூறி சபையையும்,    சபை மக்களையும் உத்தமர்களாய் அவர் பார்க்கிறார்.  அப்படிப்பட்டவர்களை   ஆசீர்வதித்து பாக்கியவான்களாய்,    பாக்கியவதிகளாய் மாற்றுவதற்குச் சித்தம் கொண்டிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் உத்தமர்களாய் நம்மைக் காத்துக் கொள்ளுவதற்குக் கர்த்தருடைய வேதத்தின் படி வாழ வேண்டும். நம்முடைய கரங்களில் காணப்படுகிற  வேதபுத்தகம் தேனிலும் தெளி தேனிலும் மதுரமானது.  எரேமியாவிற்கு  கர்த்தருடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை அவர் உட்கொண்டார்,    அது அவருக்குச்   சந்தோஷமும்,      இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது. அவரைப் போலக் கர்த்தருடைய வார்த்தையாகிய மன்னாவை அனுதினமும் வாசித்து,    தியானித்து,    உட்கொண்டு வாழக்  கர்த்தருடைய ஜனங்கள் பழகிக் கொள்ளவேண்டும்.

இந்த பூமியில் உத்தமமாய் வாழுவதற்கு அனேகர் மாமிசத்தில்  முயற்ச்சிக்கிறார்கள்,    பாவத்திலிருந்து விடுபடுவதற்குப்  பல தவங்களையும்,    புண்ணிய யாத்திரைகளையும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிந்தையை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை,     எண்ணங்களில் பாவங்களும்,    பொறாமைகளும்,    எரிச்சல்களும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் எந்த மனுஷனையும் மாற்றுகிற வல்லமை கர்த்தருடைய வார்த்தைக்கு   உண்டு. அது ஆவியாயும் ஜீவனாயும் காணப்படுகிறது. யூத பாரம்பரியத்தில் வைராக்கியமாய் காணப்பட்ட பரிசேயன் சவுல். அவன் கிறிஸ்தவர்களை  துன்பப்படுத்தி,    அடித்துக் காவலில் போடுகிறவனாகக் காணப்பட்டான். ஒருநாள் அவனை இயேசு தமஸ்குவிற்கு போகிற வழியில் சந்தித்தார். சவுலே,    சவுலே நீ ஏன் என்னைத் துன்பப் படுத்துகிறாய்,    முள்ளில் உதைக்கிறது  உனக்குக் கடினமாம் என்று அவனோடு பேசினார். கர்த்தர் பேசின அந்த வார்த்தை அவன் வாழ்க்கையை மாற்றினது. அதன்பின்பு உத்தமமாய்  இயேசுவைப் பின்பற்றினான். கர்த்தருடைய வார்த்தையின் படி வாழ்ந்தான். அனேக நிருபங்களைச் சபைகளுக்கு எழுதினான். கர்த்தர் அவனை ஆசீர்வாதத்தின் பாத்திரமாக வனைந்தார். எசேக்கியா ராஜா,     கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்து உத்தமமாய் ஆட்சிசெய்தான். அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும்,    தன் தேவனைத் தேடும்படிக்கு  நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ,    அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து,    ஆசீர்வதிக்கப்பட்டான் என்று வேதம் கூறுகிறது,    அவனுடைய வியாதியையும் கர்த்தர் விலக்கிப் போட்டார்.  நாத்தான்வேல் இயேசுவிடத்தில் வந்த வேளையில்,    இயேசு அவனைக்குறித்து: இதோ,    கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.  அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே,    நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே,    நீங்களும் வேத வார்த்தைகளின் படி உத்தம ஜீவியம் செய்ய  உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் காணப்படுவீர்கள்,    அனேகருக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாகவும் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *