மத் 12:25. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/THvtu_LhgGQ
ஒரு சில நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் ஊழியர்கள் Divide and Rule என்று சொல்லக்கூடிய பிரித்து ஆளக்கூடிய முறையில் தங்களுடைய துறையை நடத்துவார்கள். காலப்போக்கில் இப்படிப்பட்டவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களோடு வேலை செய்யும் விருப்பமே இல்லாமல் போய்விடும். கூடிய விரைவில் அந்த துறை மேலோங்கி வளர்வதற்கு பதிலாக, கீழ்நோக்கி செல்லும். செய்தித்தாளில் நாம் அவ்வப்போது படிக்கலாம், முன்விரோதத்தினால், ஒருவன் மற்றொருவனை கொலை செய்தான்; முன்விரோதத்தினால், பிறனுடைய குடிநீர் தொட்டியை ஒருவன் உடைத்தான்; முன்விரோதத்தினால், மற்றொரு ஊராரின் வயலில் தீயை கொளுத்திவிட்டார்கள் என்றெல்லாம் வாசிக்கிறோம். விரோதம் பகைமைகளையும், பின்பு, அது இழப்புகளையும் உண்டாக்குகிறது.
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் குருடும் ஊமையுமான ஒருவன் இயேசுவினிடத்தில் கொண்டுவரப்பட்டான். இது ஆச்சரியமான காரியம். சிலர் குருடாக மாத்திரம் இருப்பார்கள்; சிலர் ஊமையாக மாத்திரம் இருப்பார்கள். ஆனால், இங்கே இந்த இரண்டு குறைபாடுகளையும் கொண்ட பிசாசுபிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு தன்னுடைய வார்த்தையினால் பிசாசை துரத்தி அவனை குணமாக்கினார். பரிசேயர்கள், இவர் பிசாசினால் பிசாசை துரத்துகிறார் என்று சொன்னார்கள். இதை கேட்ட இயேசு தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது என்று கூறினார். இதன் கருத்து பிசாசு தன்னுடைய இராஜ்யத்தை கட்ட மற்ற பிசாசிடம் சண்டைபோடுவதில்லை, பிரிந்து இருப்பதில்லை. ஆனால், இந்நாட்களில் சபைக்குள்ளாக இருக்கும் விசுவாசிகளுக்கிடையே பல விதமான பிரிவினைகள் காணப்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுகிறார்கள், ஆனால் பிசாசுகள் அப்படி செய்வதில்லை. தனக்கு எதிராகவே பிளவுபட்ட ஒரு ராஜ்யம் நிலைத்து நிற்க முடியாது; தனக்கு எதிராகவே பிளவுபட்ட எந்தவொரு வீடும் விழும். ஒருவருக்கொருவர் சண்டையிடும் கணவன் மனைவிகள் இந்த காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. அதாவது கணவன் மனைவி சண்டையிடும்போது, சமாதான குலைச்சல் உண்டாகும், குழந்தைகள் துன்பப்படுவார்கள், கடைசியில் தேவதிட்டமும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறாமல் போய்விடும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று பாரதியார் கூட சொன்னார்.
ஆகையால் ஒருநாளும் சபைக்குள்ளாக பிரிவினைகளை விதைக்க வேண்டாம். குடும்ப வாழ்விலும் கணவன் மனைவி பிரிந்து செயல்பட வேண்டாம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org