தேவனுக்கு செவிகொடுத்தல் (Listening to God)

1 சாமு 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8QVOSX9ptcM

வேதாகமத்தின் முதல் அதிகாரத்திலேயே அடிக்கடி வரும் ஒரு வார்த்தை அவர் சொன்னார் என்ற வார்த்தை. தேவன் பேசும் ஒவ்வொரு முறையும், பூமி ஒரு சிறந்த இடமாக மாறியது. ஆகையால், வேதாகமத்தின் முதல் பக்கத்திலேயே நாம் ஒரு மிக முக்கியமான உண்மையை கற்றுக்கொள்கிறோம். தேவன் நம்மிடம் ஒவ்வொரு நாளும் சொல்வதை நாம் கேட்க வேண்டும். ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் படி,தேவன் ஒவ்வொரு நாளும் நம்மிடம் பேச விரும்புகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் ஒவ்வொரு நாளும் நமக்கு சொல்வதற்கு நாம் கீழ்ப்படிந்தால், நாம் பயனுள்ள கிறிஸ்தவர்களாக மாற்றப்படுவோம்.

ஆண்டவர் சொன்னார் என் ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்பதாக. ஆடு மேய்ப்பவர்களின் சத்தத்தை ஆடுகள் எவ்வளவு தொலைவிலிருந்தாலும் சரியாக கண்டுபிடித்துவிடும். அதுபோல தான் நாம் நம்முடைய எஜமானுடைய சத்தத்தை கேட்கிறவர்களாக நாம் காணப்பட வேண்டும். அநேகர் தேவனுடைய சத்தத்தை அறிய தோராயமாக வேதாகமத்தை திறந்து படிக்கிறார்கள். இப்படி தோராயமாக நடுப்பக்கத்தை திறந்து படிப்பதால் தேவனின் சத்தத்தை அறிந்துகொள்ள முடியாது. ஒரு சிலர் தங்களுடைய திருமணத்தை குறித்து ஆண்டவருடைய சித்தத்தை அறிய தோராயமாக வேதத்தை திறப்பார்கள். இப்பொழுது தங்கள் கண்களை மூடி ஒரு விரலை ஏதாவது ஒரு வசனத்தின் மேல் வைப்பார்கள். அந்த வசனம் தங்களுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தால், மீண்டும் வேதாகமத்தை மூடி தோராயமாக திறந்து வாசிப்பார்கள். இப்படி பல முறை முயற்சித்து அவர்கள் விருப்பத்திற்கேற்ற வசனம் வந்துவிட்டால், தேவன் என்னிடம் பேசிவிட்டார், நான் அவர் வார்த்தைக்கு செவிகொடுக்கிறேன் என்று சொல்லுவார்கள். இப்படியாக நாம் தேவனுக்கு செவிகொடுக்க கூடாது.

இந்த வழியில் தேவனின் சித்தத்தைக் கண்டுபிடிக்க முயன்ற ஒரு மனிதனின் கதை ஒன்று உண்டு. அந்த மனிதன் வேதாகமத்தை தோராயமாக திறந்து வாசித்தபோது, மத் 27:5ஐ வாசித்தார். அதில் அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான் என்று எழுதியிருந்தது. ஐயோ, இப்படியொரு வசனம் வந்துவிட்டதே என்று சொல்லி, அந்த மனிதன் மீண்டும் வேதாகமத்தை திறந்து, லூக் 10:37ஐ வாசித்தார். அதில் அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார் என்று எழுதியிருப்பதை வாசித்து அதிர்ச்சியடைந்தார். அந்த மனிதன் மூன்றாவது முறையாக வேதாகமத்தை தோராயமாக திறந்து, யோவா 13:27ல் எழுதியவற்றை வாசித்தார். அதில் நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார் என்று எழுதியிருப்பதை வாசித்து அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியடைந்தார். இந்த வழியில் நாம் தேவனுக்கு செவிகொடுக்கவும், அவருடைய சித்தத்தை கண்டுபிடிக்க முயற்சிப்பதும் மிகவும் தவறு என்று சொல்லுவதை பார்க்கிலும் முட்டாள்தனமானது. சில வேளைகளில் ஆண்டவர் உற்சாகப்படுத்த சரியான வசனத்தை காட்ட கூடும். ஆனால் எப்பொழுதும் அப்படியே இருக்காது. எல்லாநாளும், Calenderல் எழுதியிருக்கும் வசனத்தை படித்துவிட்டு கர்த்தர் என்னுடன் பேசினார் என்று சொல்லாதீர்கள்.

தேவனுடைய சத்தத்தை கேட்க திறந்த மனதுடன், கிரமமாக வசனங்களை வாசிக்க வேண்டும். ஒவ்வொருநாளும் வாசிக்க வேண்டும். ஒவ்வொருநாளும் தேவனுடைய சத்தத்தை கேட்டு அதற்கு செவிசாய்க்கிறவர்களாக நாம் காணப்படவேண்டும். தேவ ஜனங்களே நீங்கள் எப்போதும் வளர்த்துக் கொள்ளக்கூடிய மிக முக்கியமான ஒரு பழக்கம், தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடுப்பது என்பதை ஒருநாளும் மறந்துவிடாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *