நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்@ நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார் (யாத். 15:26).
இயேசு நம்முடைய வியாதிகள், வேதனைகளிலிருந்து விடுதலையைத் தருகிற பரிகாரியாகிய கர்த்தர். யேகோவா ராஃபா என்பது அவருடைய நாமம். நானும் உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொல்லாமல், நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொல்வதிலிருந்து, அவரே நம்முடைய எல்லா வியாதிகளிலுமிருந்து நம்மை விடுதலையாக்க வல்லமையுள்ள தேவன். உலகத்தில் ஒவ்வொரு வியாதிகளுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ நிபுணர்களும், பலவகையான மருந்துகளும் காணப்படலாம். மருத்துவர்களும், மருந்துகளும் அவசியம் தேவை. ஆனால் எல்லா வியாதிகளுக்கும், எல்லாவிதமான சரீர பிரச்சனைகளுக்கும் பூரண சுகத்தைத் தருகிறவர் நம்முடைய ஒரே பரிகாரியாகிய கர்த்தராகிய இயேசுவே.
வேதத்தில் இரட்சிப்பு ஒன்றுமட்டும் இலவசமாகக் காணப்படுகிறது. காரணம், அதற்குரிய கிரயத்தைக் கல்வாரி சிலுவையில் இயேசு தன்னுடைய இரத்தம் முழுவதையும் ஊற்றிக்கொடுத்துச் செலுத்திவிட்டார். மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் நிபந்தனையின் பேரில் தான் இருக்கும். மேற்குறிப்பிட்டுள்ள வசனத்திலும், கர்த்தர் நம்முடைய பரிகாரியாகக் காணப்படவேண்டும் என்றால், நாம் அவருடைய சத்தத்தைக் கவனமாகக் கேட்கவேண்டும், அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார். இந்நாட்களில் தேசங்களில் கொள்ளை நோய்கள் எங்கும் பரவிக் காணப்படுகிறது. அனேக ஜனங்கள் ஆண்டவரை அறிவதற்கு முன்பே மரித்து விடுகிறார்கள். பாதாளம் திரளான ஜனங்களை வாரிக்கொள்ளுகிறது. தேவனைப் புறக்கணித்தும், அவருடைய மணவாட்டி சபைக்குப் பலவித உபத்திரவங்களைக் கொடுத்தும், கர்த்தருடைய பிள்ளைகளை ஒரு காரணமும் இல்லாதபடி இயேசு என்ற நாமத்தின் நிமித்தம் மாத்திரம் நெருக்கத்தைக் கொடுக்கும்போது கர்த்தருடைய தயவு தேசங்களில் இருப்பதில்லை, அதற்குப்பதிலாக அவருடைய கோபாக்கினை வெளிப்படுகிறது. அதுபோல, கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்ட கர்த்தருடைய ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, கர்த்தருடைய முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவன் நம்முடைய ஜெபங்களை கேட்டு, தேசத்தின் குடிகளின் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் தனியாக, குடும்பமாக, சபையாக நம்மை ஜெபிக்க அர்பணிக்கவேண்டும். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசே. 22:30) என்று கர்த்தர் வேதனைப் பட்டார். தேசங்களின் குடிகளின் எதிர்காலம் ஜெபிக்கிற கர்த்தருடைய பிள்ளைகளுடைய கரங்களில் காணப்படுகிறது.
கர்த்தருக்குப் பயந்து நாம் ஜீவிக்கும் போது, நம்மேல் நீதியின் சூரியன் உதிப்பார். அவருடைய செட்டைகளின் கீழிருக்கும் ஆரோக்கியத்தினால் கர்த்தர் நம்மை மூடுவார், நாம் ஒருநாளும் கட்டில்கிடையாய் காணப்படுவதில்லை, வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்றுகளாய் வளரும்படிக்குச் செய்வார். வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று வாக்களித்தவர், ஒரு வாதையும் உங்களைத் தொடாதபடிக்கு காத்தருளுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar