நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்:-

ஓசியா 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.

இயேசு தன்னுடைய மாறாத அன்பை வெளிப்படுத்துவதற்கு, ஓசியா தீர்க்கதரிசியை ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள் என்று சொன்னார். அதாவது ஒரு விபச்சார ஸ்திரீயை அவன் திருமணம் செய்துகொள்ளும்படி சொன்னார். உலகத்தில் ஒரு ஆணுக்கும் விபச்சார ஸ்திரீயை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விருப்பம் இருப்பதில்லை. ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிற நல்ல தீர்க்கதரிசியாக இந்த ஓசியா திகழ்ந்தான். அவள் திருமணம் செய்துகொண்ட பிற்பாடும், மீண்டும் மீண்டும் அவள் மற்ற நாயகர்களை தேடி சென்றாள். இருந்தாலும் ஓசியா தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தையின்படி அவளை மீண்டும் பணம் கொடுத்து தன்னிடம் சேர்த்துக்கொண்டான்.

இப்படி தான் நாம் அநேக வேளைகளில் சோரம்போன ஸ்திரீயை போல இருந்தோம். இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத எந்த ஒரு காரியமும் சோரம்போன ஸ்த்ரீக்கு அடையாளமாக காணப்படுகிறது. ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்காமல் பணத்தின் பின் செல்வதும், இயேசுவை எல்லா தெய்வங்களோடு ஒரு தெய்வமாக அவரை நமஸ்க்கிறேன் என்று சொல்வதும், காலை எழுந்தவுடன் வேதத்தை பார்க்காமல் சமூக ஊடகமாகிய WhatsApp, Facebook போன்றவற்றை பார்ப்பதும், இயேசுவுடன் தனித்து நேரத்தை செலவிடாமல் அநேக நேரங்களில் வேண்டாத நட்புவைத்து கொள்ளுவதும், வேண்டாத படங்களை பார்ப்பதும், நாம் வாசித்த விபச்சார ஸ்த்ரீக்கு ஒப்பாக காணப்படுகிறது.

இருந்தாலும் இயேசு சொன்னார் நான் உன்னை நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். இது தான் இயேசுவின் மாறாத அன்பு. அந்த நித்திய விவாகம் ஒருநாளும் ஒருபோது எந்த மனிதர்களாலும் உடைபட்டு போகாது. நாமும் இனி ஒருநாளும் இயேசுவை தவிர்த்து வேற நாயகர்களை வைத்துக்கொள்ள கூடாது. உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். (ஏசா 54 : 5,6) என்று வசனம் சொல்லுகிறது. உண்மையாய் உன்னை சேர்த்துக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மாத்திரமல்ல இயேசு சொன்னார் நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். ( 2 கொரி 11:2). நாமெல்லாரும் கிருஸ்து என்னும் ஒரே புருசனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆம் இயேசு நம் ஒவ்வொருவரையும் அவருடைய நித்திய விவாகத்திற்கென்று நியமித்திருக்கிறார் என்பது நமக்கெல்லருக்கும் கிடைத்த பெரிய சிலாக்கியமாக காணப்படுகிறது.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *