இயேசு, மனுகுலத்தின் பெரிதான ஈவு (Jesus, The greatest gift to humanity).

இதோ,     நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,     அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக (லூக்கா 1:31).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5fWnSfcnpg0

தேவாதி தேவன் மனுகுலத்திற்குக் கொடுத்த பெரிதான ஈவு இயேசுவாகக் காணப்படுகிறார். காபிரியேல் தூதன் கன்னிகையாகிய மரியாளைப் பார்த்து நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,     அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று கூறியவுடன்,     இது எப்படியாகும்,     புருஷனை அறியேனே என்றாள். தேவனாலே கூடாதது ஒன்றுமில்லை என்று தேவதூதன் சொன்ன போது,     இதோ,     நான் ஆண்டவருக்கு அடிமை,     உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்று தன்னைத் தாழ்த்தி ஒப்புக் கொடுத்தாள். ஆகையால் தேவனுடைய பெரிதான ஈவாகிய இயேசுவைப் பெற்றெடுத்து,     ஸ்திரீகளுக்குள்  ஆசீர்வதிக்கப்பட்டவளாய்,     பாக்கியவதியாய் மாறினாள். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     நமக்காகக் கொடுக்கப்பட்ட இயேசுவின் பெயரின் அர்த்தமே இரட்சகர் என்பதாய் காணப்படுகிறது,     ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிக்கிறவர். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்,     இது உங்களால் உண்டானதல்ல,     இது தேவனுடைய ஈவு என்று வேதம் கூறுகிறது. இரட்சகராகிய இயேசுவைக் கொடுத்து,     அவர் மூலம் இரட்சிப்பை நமக்கு அருளினது,     தேவனுடைய ஈவாகக் காணப்படுகிறது. நீங்கள் இரட்சகராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்பட்டீர்களா? உங்களுடைய வாழ்க்கையில் முதலாவது நீங்கள் பெற்றுக் கொள்ளுகிற பெரிதான ஆசீர்வாதமும், அற்புதமும் இரட்சிப்பாகக் காணப்படுகிறது. இரட்சிக்கப்படுவதற்கு, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இயேசு என்று நாமத்தைத் தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை. ஆகையால் உங்களுக்காக தாவீதின் ஊராகிய பெத்லகேமில் பிறந்த கிறிஸ்து என்னும் இரட்சகரை இன்றைக்கே உங்கள் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி,     சோதிகளின்  பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என்று யாக்கோபு 1:17 கூறுகிறது. தேவனிடத்திலிருந்து இறங்கி வந்த அதிக நன்மையான ஈவு இயேசுவாகக் காணப்படுகிறார். அவர் பெரியவர்,     உன்னதமானவருடைய குமாரன்,     தாவீதின் சிங்காசனத்திற்கு நிரந்தர சொந்தக்காரர்,     அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்,     அவருடைய ராஜ்யத்திற்கு ஒருநாளும் முடிவு இல்லை. ஆகையால் தேவன் கொடுத்த ஈவாகிய இயேசுவை,     உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராகவும்,     உங்களை ஆளுகிறவராகவும் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது,     ஒரு பற்றாக்குறையும் இல்லாத நிறைவான வாழ்வு வாழும் படிக்குக் கர்த்தர் உங்களுக்கு அருள் செய்வார். இயேசு உங்கள் வாழ்க்கையிலிருந்தால் மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு நிறைவாக இருக்கும்,     இல்லையேல் உங்கள் வாழ்க்கை வெறுமையாயிருக்கும். 

தேவன் அருளிய சொல்லிமுடியாத இயேசு என்ற ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். அவரை இரட்சகராகவும் உங்கள் வாழ்க்கையை ஆளுகை செய்கிற ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது இந்தப் பண்டிகை காலங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாகவும்,     ஆசீர்வாதமாகவும் காணப்படும். கர்த்தர் தாமே,     இந்த மாதம் முழுவதும் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *