கர்த்தருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லும் (God’s word runs swiftly).

அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்,     அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது (சங். 147:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UFHjrHuG-9E

கர்த்தருடைய வார்த்தை ஆவியாயும்,     ஜீவனாயும் இருக்கிறது. அதில் உயிர் இருப்பதினால் செய்ய வேண்டிய காரியத்தை அது செய்து முடிக்கும். நாம் காண்கிற யாவையும் கர்த்தர் தம்முடைய  வார்த்தையைப்  பேச,      உண்டானவைகள. வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்,     உடனே வெளிச்சம் உண்டானது. ஆதியிலிருந்த வார்த்தை,     மாம்சமாகி இயேசுவாக இந்த பூமியில் வெளிப்பட்டார். அவருடைய நல் வார்த்தையைப்  பூமியில்  மனுகுலத்திற்கு  அனுப்புகிறார்,     அவைகள் மகா தீவிரமாகச் செல்லுகிறது. அவைகள் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிக்கிறது. கர்த்தர் கூறுகிறார்,     மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி,     அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து,     அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து,     விதைக்கிறவனுக்கு விதையையும்,     புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,      அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்,     அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல்,     அது நான் விரும்புகிறதைச்செய்து,     நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் என்பதாக(ஏசா. 55:10,    11). கர்த்தர் தம்முடைய வசனத்தை அனுப்பி  நம்மைக்  குணமாக்குகிறார். அவருடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா கொந்தளிப்புகளையும் அடங்கும் படிக்குச் செய்யும்.


கர்த்தருடைய பிள்ளைகளே,     நம்முடைய வாழ்க்கையில் வேண்டியது எல்லாம் கர்த்தருடைய ஒரு வார்த்தை மட்டுமே. நூற்றுக்கு அதிபதி ஒருவன் ஆண்டவரிடத்தில் வந்து,     ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். அவன் பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல,     ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்,     அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும்,     எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு,     நான் ஒருவனைப்  போவென்றால்  போகிறான்,     மற்றொருவனை வாவென்றால் வருகிறான்,     என் வேலைக்காரனை,     இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.  இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு,     தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட  விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம்,     நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.  ஒவ்வொரு நாளும் ஒரு வார்த்தையைக்  கர்த்தரிடத்திலிருந்து  பெற்றுக் கொள்ளுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனுதினமும் அன்றன்றைக்கு வேண்டிய மன்னாவைச் சேர்த்தது போல,     ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய  புஸ்தகத்தில் தேடி வாசியுங்கள்,     புதையல்களைத் தேடுவது போலத் தேடுங்கள். அப்போது அன்றைய தினத்திற்குரிய அவருடைய ஜீவனுள்ள வார்த்தை உங்களுக்கு வெளிப்படும். அது துரிதமாய் உங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா நன்மையான காரியங்களையும் செய்து முடிக்கும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar