இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். லூக்கா 23:46.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tn_4G6Scs3M
இயேசு சிலுவையில் கூறின ஏழாவது, கடைசி வார்த்தையாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. இயேசுவின் ஆவியை யாராலும் எடுக்க முடியாது. அவராகவே பிதாவின் கரங்களில் அவருடைய ஆவியை அவர் ஒப்புக் கொடுத்தார். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர் (சங்.16:10) என்று இயேசுவுக்குப் பிதாவாகிய தேவன் வாக்களித்திருந்தார். ஆகையால் பிதாவாகிய தேவன் தன்னை உயிர்ப்பிப்பார் என்பதை இயேசு நன்கறிந்திருந்தார். அவர் தன் ஊழியத்தின் நாட்களிலும் தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைக் குறித்து தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லியிருந்தார் (மத். 16:21). இந்த நிச்சயத்தோடு தம்முடைய ஆவியைப் பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுத்தார். அவருக்குள் திருப்தி காணப்பட்டது, பிதாவாகிய தேவன் தனக்குக் கட்டளையிட்ட யாவையும் செய்து முடித்த திருப்தி ஆண்டவருக்குள் காணப்பட்டது. ஆகையால் நிச்சயமாய் தேவன் தன்னை உயிர்ப்பிப்பார் என்ற நம்பிக்கையும் அவருக்குள் இருந்தது.
அவருடைய வரிசையில் முதல் இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று தன் ஆவியை ஆண்டவருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நாமும் நம்முடைய வாழ்வின் இறுதி நேரத்தில் நம்முடைய ஆவியை ஆண்டவருடைய கரங்களில் சந்தோஷத்தோடு ஒப்புக்கொடுக்கிறவர்களாய் காணப்படவேண்டும். அனேகர் வாழ்வின் கடைசி வேளைகளில் உயில் எழுதி வைப்பது எப்படி, தன்னுடைய ஆஸ்திகளின் கணக்கையெல்லாம் பிள்ளைகளிடம் கூறுவது எப்படி, தனக்குப் பிரியமான உணவைப் புசிப்பது எப்படி என்று எல்லாம் யோசிப்பதுண்டு. பிள்ளைகள் எல்லாம் அருகில் காணப்பட வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் தன்னுடைய ஆவியைத் தேவனுடைய கரத்தில் மகிழ்ச்சியோடு ஒப்படைக்க வேண்டும் என்ற வாஞ்சை காணப்படுவதில்லை. மரணவேளையில் மாத்திரம் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன் என்று கூறுவதினாலும் பிரயோஜனமில்லை. அப்படிப்பட்டவர்களுடைய ஆவியைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை. நாம் வாழ்ந்திருக்கும் போது அதற்கேற்ற ஜீவியம் செய்கிறவர்களாய் காணப்படவேண்டும். பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றவர்களாய் காணப்படவேண்டும். அனுதினமும் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமுள்ள ஜீவியம் செய்ய நம்மை அர்பணிக்க வேண்டும். கர்த்தருடைய கிருபையைச் சார்ந்து குறையற்றவர்களாய், மாசற்றவர்களாய், பிழையற்றவர்களாய் வாழ முயற்சி செய்ய வேண்டும். வாழ்ந்திருக்கும் போது கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காய் இயன்றதைச் செய்ய வேண்டும். அப்போது நாமும் இயேசுவைப் போல திருப்தியோடும், சந்தோஷத்தோடும் நம்முடைய ஆவியைப் பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுக்கமுடியும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org