தாவீதின் குமாரன் இவர்தானோ? (Could this be the Son of David?).

ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்(மத். 12:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mDaYjIFlABE

இயேசு,     இந்த பூமியில் ஊழியம் செய்த மூன்றரை வருஷங்களும் அனேக அற்புதங்களைச் செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். அவரிடத்தில் வந்த யாவரையும் குணப்படுத்துகிறவராகவும்,     பிசாசின் பிடியில் அகப்பட்ட எல்லோரையும் விடுதலையாக்குகிறவராகவும் காணப்பட்டார். அவர் ஆவியானவருடைய அபிஷேகத்தின் வல்லமையால் அவற்றைச் செய்தார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும்  வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்,     தேவன் அவருடனே கூட இருந்த படியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் என்று அப்.10:38 கூறுகிறது. இயேசுவும்,     நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்,     தேவனுடைய ராஜ்யம்  உங்களிடத்தில் வந்திருக்கிறதே என்று மத். 12:28ல் கூறினார். ஒருமுறை ஆண்டவரிடத்தில் பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவனைக் கொண்டுவந்தார்கள். இயேசு,      குருடும்  ஊமையுமானவன் பேசவுங்  காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். உடனே அங்கிருந்த ஜனங்கள் ஆச்சரியப்பட்டு  தாவீதின் குமாரன் இவர்தானோ? இவர் தான் மேசியாவோ என்றார்கள். வழியருகே அமர்ந்திருந்த இரண்டு குருடாகள்,     இயேசுவை மேசியாவாகக்  கண்டு,     அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே,     எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். சமாரியா ஸ்திரீயும் கூட,     நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்,     அவரை வந்து பாருங்கள்,     அவர் கிறிஸ்துதானோ என்றாள். மேசியா என்ற எபிரேய  பதமும்;,     கிறிஸ்டோஸ் என்ற கிரேக்கப் பதமும்,     கிறிஸ்து என்ற தமிழ் பதமும் ஒன்றையே குறிக்கிறது. மேசியா என்றாலே அபிஷேகம் பண்ணப்பட்டவர்,     அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து விடுவிக்கிறவர் என்பது   அர்த்தம். ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து உண்டாகும் விடுதலையானாலும் சரி,     பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து உண்டாகும் விடுதலையானாலும் சரி,     இயேசு நம்மை விடுவிப்பதற்காகவே அபிஷேகம் பண்ணப்பட்டவர். இயேசு என்ற நாமத்தில் முழுப் பாதாளமும் நடுங்கும். எந்த கொடூரமான வியாதிகளும் இயேசுவின் நாமத்தில் குணமாகும்,     மனதின் துக்கங்களும்,     வியாகுலங்களும்,     வேதனைகளும் இயேசு என்னும் நாமத்தில் விலகும். இதை சாதாரண ஜனங்கள் புரிந்து கொண்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள். ஆனால் அந்நாட்களில் காணப்பட்ட பரிசேயர்கள்,     வேதத்தை அறிந்தவர்கள்,     பிரமாணங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறவர்கள்,      இவன் பிசாசுகளின் தலைவனாகிய  பெயெல்செ பூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     இயேசுவால் எல்லாம் கூடும்,     அவர் சொல்ல ஆகும்,     அவர் கட்டளையிட நிற்கும் என்பதை முழுமையுமாய் விசுவாசியுங்கள். இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவருடைய வல்லமை ஒருநாளும் குறைந்து போவதில்லை. இயேசுவின் வல்லமையைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரை மகிமைப்படுத்தின ஜனங்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாய் நீங்களும் காணப்படுங்கள்.   பரிசேயர்களைப் போலக்  கர்த்தருடைய வல்லமையை அங்கீகரிக்காதவர்களாய்,     சந்தேகப்படுகிறவர்களாய் காணப்படாதிருங்கள். வேத அறிவு,     நமக்குள்ளாக இருமாப்பைக்  கொண்டுவந்துவிடக் கூடாது,     நம்முடைய மனக்கண்களைக் குருடாக்கிவிடக் கூடாது. பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடு பட்ட ஸ்திரீக்கு கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வல்லமை,     இன்றும் உங்களுக்கு அளவில்லாமல் காணப்படுகிறது.   தேவன் ஒருதரம் விளம்பினார்,     இரண்டுதரம் கேட்டிருக்கிறேன் வல்லமை தேவனுடையது என்ற வார்த்தையின்படி கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு உங்களை விடுதலையாக்குகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *