குற்றமில்லாத இரத்தம் (Innocent Blood).

குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள் (மத்தேயு 27:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_AqyGlAZkMU

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தப் பூமியில் அனேகருடைய இரத்தம் சிந்தப்பட்டது. சில நல்ல மனிதர்கள் தேசத்தின் விடுதலைக்காக, மற்றவர்களுடைய நலனுக்காகத் தங்களுடைய இரத்தத்தை சிந்தி, உயிரைக் கொடுத்தார்கள். ஆனால் பூமியில் சிந்தப்பட்ட இரத்தத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை தவிர, வேரொருவருடைய இரத்தத்தைக்  கூடப் பாவமில்லாதது, குற்றமில்லாதது என்று கூற முடியாது. யூதாஸ் இயேசுவோடு மூன்றரை வருடம் காணப்பட்டவன். இயேசு சென்ற இடங்களிலெல்லாம் கூடச் சென்றவன். அவர் போதித்த போதனைகளை நன்கு கேட்டவன், அற்புதங்களைக் கண்ணாறக் கண்டவன். அவன் இயேசுவைக் குறித்து கூறும்போது, அவர் குற்றமில்லாதவர் என்று அவரைக் குறித்து சாட்சி கொடுத்தான்.

யூதாஸ் பண ஆசையின் நிமித்தம் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். பண ஆசை கொஞ்சம் கூட இல்லாத இயேசுவோடு தான் காணப்பட்டான், அவனுக்குள் இயேசுவின் குணமும், சுபாவமும் கொஞ்சமும் கூட வரவில்லை. இந்நாட்களில் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் என்று கூறுகிற அனேகர் எல்லாத் தீமைக்கும் வேரான பண ஆசை பிடித்தவர்களாய் காணப்படுகிறார்கள். அதுபோல யூதாஸ் ஆண்டவரோடு காணப்பட்டும், பாவங்களறக் கழுவப்படாதவனாய், சுத்தமில்லாதவனாய் காணப்பட்டான். பேதுரு, ஆண்டவரை நோக்கி, என் கால்களைமாத்திரமல்ல, என்கைகளையும் என் தலையையும்கூடக் கழுவ வேண்டும் என்ற வேளையில், இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான், நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.  தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார் எனபதாக யோவான் 13:9-11ல் எழுதப்பட்டிருக்கிறது.  இந்நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகள்  பரிசுத்தத்தை அதிகமாய் வாஞ்சிக்க வேண்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். பரிசுத்தம் இல்லாமல் அவரைத் தரிசிக்க முடியாது. அவர் மகா பரிசுத்தர், ஆகையால் நம் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் நாம் காணப்பட  வேண்டும்.

யூதாசை கர்த்தர் தன் நெருங்கிய நண்பனாய் வைத்திருந்தார், மற்ற சீஷர்களைப் போல அவனையும் உண்மையாய் நேசித்தார். என் பிராணசிநேகிதனும் (Close friend), நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான் என்று அவனைக் குறித்து ஆண்டவர் சங். 41:9ல  கூறினார். ஆனால் யூதாஸின் அன்பு மாய்மாலமானதாய் காணப்பட்டது. இந்நாட்களில் நாம் ஆண்டவர் பேரில் வைத்திருக்கிற அன்பு உண்மையானதா, மாய்மாலமானதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும். யூதாஸ் இப்படிப்பட்டவனாய் காணப்பட்டதினால் ஆண்டவர் அவனைச் சாத்தானுக்கு ஒப்புக் கொடுத்தார். பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான் என்று லூக்கா 23:3 கூறுகிறது. கொரிந்து சபையில் வேசித்தன பாவம் செய்தவர்களை அப்போஸ்தலனாகிய பவுல் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்பு செய்தான். தேவ ஜனங்களாகிய நீங்கள், விசுவாசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆலயத்திற்கு செல்லுகிறவர்கள், வேதத்தை வாசிக்கிறவர்கள், ஜெபம்பண்ணுகிறவர்கள் என்று மட்டும் கூறுவதினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையில் இயேசுவுக்கு ஏற்றமாற்றங்கள் ஏதாகிலும் காணப்படுகிறதா என்பது தான் முக்கியம். கடைசியில், இயேசு மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்ட யூதாஸ் மனஸ்தாபப்பட்டான். அப்போது தான் இயேசு எப்படிப்பட்டவராய் காணப்பட்டார் என்பதை யோசித்துப் பார்த்தான். அவர் குற்றமில்லாதவர் என்பதை அறிந்து கொண்டான், ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, குற்றமனசாட்சியின் நிமித்தம் புறப்பட்டுப் போய் நான்று கொண்டு செத்தான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, இந்நாட்களில் கிறிஸ்தவ மார்க்கத்தில் யூதாசைப் போலத் திரளான ஊழியர்களும், விசுவாசிகளும் காணப்படுகிறார்கள். பண ஆசை பிடித்தவர்களாய், சுத்திகரிக்கப்படாதவர்களாய், அன்பில்லாதவர்களாய், பிசாசுக்கு இடம் கொடுத்து ஆண்டவரை விட்டுத் தூரமாய் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களால் குற்றமில்லாத, கறையற்ற, மாசற்ற, பரிசுத்தமான ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது. சிலுவையை நினைவு கூறுகிற இந்நாட்களில் இயேசுவைப் போல வாழ நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *