அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள் (Many were amazed when they saw him):-

ஏசாயா 52:14. மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jgvIYQKoIC4

இயேசு சிலுவை பாதையில் கடந்து செல்லப்போவதை ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக எழுதிவைத்திருக்கிறான். இயேசு எப்படிப்பட்டவர் என்பதை அறிந்தவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள். உன்னதப்பாட்டில் ஸ்தீரிகளுக்குள் ரூபவதி எருசலேம் குமாரத்திகளிடம் தன்னுடைய நேசரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டாள். அந்த நேசர் இயேசுவுக்கு அடையாளம். எருசலேம் குமாரதிகளெல்லாம் ஸ்த்ரீகளின் ரூபவதியிடம் கேக்கிறார்கள், எந்த நேசரை நீ தேடி அலைகிறாய். இந்த பட்டணத்தில் அநேக நேசர்கள் இருக்கிறார்களே; நீ தேடுகிற அந்த நேசர் எப்படிப்பட்டவர்; அவரிடம் என்ன விசேஷம் காணப்படுகிறது, நீ இப்படியாக அவரை தேடுவதற்கு என்ன இரகசியம் என்று கேட்டார்கள். அதற்கு ஸ்த்ரீகளின் ரூபவதி சொல்லுகிறாள் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.கண்கள் புறா கண்கள், நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்; அவருடைய கன்னங்கள், உதடுகள், கரங்கள், அங்கம், கால்கள், ரூபம், வாயை பற்றி தொடர்ந்து விவரித்துக்கொண்டே போகிறாள். முடிவில் அவள் சொல்லுகிறாள் எல்லாவற்றிற்கும் மேலாக என் நேசரை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லி முடிக்கவேண்டுமென்றால் சொல்லுகிறேன் அவர் முற்றிலும் அழகுள்ளவர் என்று சொன்னாள். ஆம் நாம் ஆராதித்துக்கொண்டிருக்கிற இயேசு முற்றிலும் அழகுள்ளவர்.

இப்படி தான் ஜனங்கள் இயேசுவை குறித்து அறிந்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது ஒரு காரியத்தை குறித்து இயேசு சிலுவை பாதையில் செல்லும்போது அவருடைய முகப்பார்வை மனிதரை காட்டிலும், அவருடைய ரூபம் மனுபுத்திரரை பார்க்கிலும் அந்த கேடடைந்தாய் பார்க்கத்தவர்கள் அநேகர் பிரமிப்படைந்தார்கள். இயேசுவுடைய ரூபம் விரும்பப்படத்தக்கதாய் இல்லாமல் இருந்தது. எல்லாவற்றையும் இழந்தவராக, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சரீரம் முழுவதும் இரத்தம் வழியும்படியாக, காயப்பட்டவராக, கீறல் அடைந்தவராக, நிர்வாணியாக அந்த கேடு அடைந்தார். இதை பார்த்தவர்களுக்கு ஒரே பிரமிப்பு. எப்படிப்பட்ட அழகுள்ளவர், அன்பானவர், ஐஸ்வரியமுள்ளவர் இப்பொழுது அவருடைய முகம் அடையாளம் காணப்படத்தக்கதாய் கூட இல்லை. எல்லாவற்றையும் இயேசு சிலுவையில் நமக்காக சகித்தார்.

மாத்திரமல்ல எப்படி எருசலேம் குமாரத்திகள் இயேசுவை தேடினார்களோ, அதுபோல இப்பொழுது இயேசு சிலுவை பாதையில் செல்லும்போது அவரை பார்த்து அலுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த சூழ்நிலையிலும் கூட இயேசு சொன்னார் எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்பதாக.

கடைசி நிமிடம் வரை இயேசு தனக்காக, தன்னுடைய சுயத்துக்காக, தன்னுடைய ஆதாயத்துக்காக என்று அவர் செயல்படவில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் இயேசு மற்றவர்களை குறித்தே கரிசனை உள்ளவராக இருந்தார். ஆகையால் தான் நம் எல்லாருக்கும் ஒரே பிரமிப்பு. வானங்கள் கொள்ளாத தேவன் அடிமையின் ரூபமெடுத்ததை பார்க்கும்போது ஒரே பிரமிப்பு; பிதாவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் மரண பரியந்தம் தன்னை தாழ்த்தியதை பார்க்கும்போது ஒரே பிரமிப்பு; வார்த்தையினால் காண்கிற அனைத்தையும் சிருஷ்டித்தவர், இப்பொழுது வாய் திறவாத ஆட்டுக்குட்டியை போல இருந்ததை பார்க்கும்போது ஒரே பிரமிப்பு. என்றாலும் சிலுவையில் ஒருமுறை மரித்தவர், இனி மரிப்பதில்லை. அவர் திரும்ப வரும்போது சர்வ வல்ல இராஜாவாக, நியாயாதிபதியாக, நீதி செய்கிறவராக வர போகிறார். அப்பொழுது அவரை குத்தின கண்கள் யாவும் புலம்பும்.

அதற்குமுன்பாகவே மனம் திரும்பி இயேசு கடந்த சென்ற சிலுவை பாதையில் செல்ல உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது பரலோகத்தில் உங்கள் பலன் அதிகமாய் இருக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *