கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (LORD your God will set you high).

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும் படிக்கு,     அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால்,     உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் (உபா. 28:1).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/gkF-iLBybO4

கர்த்தர்,     இஸ்ரவேல் சபைக்குக் கொடுத்த வாக்குத்தத்தமாக மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நமக்கும் பொருந்துகிறது. உபாகம புஸ்தகம்,     மோசே மரிப்பதற்கு முன்பு,     கடைசி நாற்பது நாட்களுக்குள் எழுதப்பட்ட புஸ்தகமாகும். உபாகமம் 28வது அதிகாரத்தில்,     கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் போது உண்டாகும் ஆசீர்வாதங்களும்,     கீழ்ப்படியாமல் காணப்படும் போது உண்டாகும் சாபங்களைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. 

கர்த்தருடைய ஜனங்கள் பூமியில் காணப்படுகிற எல்லா ஜாதி,     ஜனங்களைவிட மேன்மையாகக் காணப்பட வேண்டும் என்பது அவருடைய இருதயத்தின் விருப்பமாகும். நீங்கள் கீழாகாமல் மேலாகவும்,     வாலாகாமல் தலையாகவும் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அப்படி மேன்மையாக உயர்த்தப்பட்ட ஜீவியம் செய்வதற்கு,     நாம் அவருடைய வார்த்தைகளின் படி நம்முடைய வாழ்க்கையைக் கட்டி எழுப்ப வேண்டும். கர்த்தர்,      வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார் என்று ஏசா.42:21ல் எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சகல  பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் அவருடைய வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார் (சங்.138:2). அவருடைய ஜனங்களும் அவருடைய வார்த்தையை மையப்படுத்தி,     முக்கியப்படுத்தி வாழ்க்கையைக் கட்டி எழும்பும் போது,     கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார். 

யோவான் தான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான  காயுவுக்கு எழுதும் போது,      பிரியமானவனே,     உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3 யோவான் 1:1,    2) என்று வாழ்த்தினார். அதுபோல நம்முடைய ஆண்டவரும் நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாகக் காணப்படும் படிக்கு விரும்புகிறவர். ஆகையால் உபாகமம் 28வது அதிகாரத்தின் முதல் பதினான்கு வசனங்களில் பூமிக்குரிய,     சரீரத்திற்குரிய,     உன்னதங்களுக்குரிய எல்லா ஆசீர்வாதங்களையும் அவர் பட்டியலிட்டிருப்பதைப் பார்க்கமுடியும். நிலத்தின் கனிகளையும்,     மிருக ஜீவன்களையும்,     களஞ்சியங்களையும் ஆசீர்வதித்து,     பரிபூரண நன்மை உண்டாகும் படிக்குச் செய்வார். உங்கள் கரங்களின் கிரியைகளையும்,     வேலைகளையும்,     தொழில்களையும் ஆசீர்வதித்து பூமிக்குரிய எல்லா நன்மைகளையும் தந்து உங்களை மேன்மைப்படுத்துவார்.  அதுபோல சரீரத்தின்  நன்மைகளாகிய,     சுகத்தையும்,     ஆரோக்கியத்தையும் தருவார்,     உங்களுக்குக் கர்ப்பத்தின் கனிகளைத் தந்து ஆசீர்வதிப்பார்,     உங்கள் பிள்ளைகளைக் கண்மணி போலப் பாதுகாப்பார்,     அவர்களை எல்லா வியாதிகளுக்கு விலக்கி,     ஓங்கி வளருகிற விருட்சங்களைப் போல வளரும்படிக்குச் செய்வார். உங்களைத் தமக்குப் பரிசுத்த ஜனங்களாக்கி,     அவருடைய நாமத்தை உங்களுக்குத் தரித்து,     பரிசுத்த ஜாதியாகவும்,     ஆசாரியக் கூட்டமாகவும்,     ஆவிக்குரிய மாளிகைகளாகவும் கட்டி எழும்பி,     உன்னதங்களுக்குரிய எல்லா நன்மைகளினாலும் நிரப்புவார்.  கர்த்தருடைய பிள்ளைகள்,     அவருடைய சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுங்கள்,     அவருடைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள்,     அப்போது கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *